அவளால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. மிகுந்த களைப்பாக இருந்தது அவளுக்கு. நத்தை நகருவது போன்றுஅவள், அவனுக்குப் பின்பாக மெல்ல நடந்து கொண்டிருந்தாள். தொடர்ந்தும் அடியெடுத்து வைக்க மிகவும் சிரமப்பட்டாள். அவளது கணவன் மிதிவண்டியை உருட்டியபடி அவளின் நடைக்கிசைவாக நடந்தபடியிருந்தான். மிதிவண்டிமீது பல்வகைப் பொருள்கள் பாரமாய் அதை அழுத்திக் கொண்டிருந்தன. அதிக சிரமத்தோடு, வண்டிமீதான பாரத்தைச் சமநிலைப்படுத்தியவாறு, அருகில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சென்று கொண்டிருந்தான்.
‘இஞ்சருங்கோ’ அவள் அழைக்கிறாள். அவன் மிதிவண்டியை உருட்டியவாறு தலையைச் சற்று திருப்பி அவளைப் பார்க்கிறான்.
“என்னாலை ஏலாதாமப்பா உதிலை வாற காட்டாமணக்கு மரத்துக்குக் கீழை கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போவமே ?”
அவன் எதுவும் கூறவில்லை. மிக அருகில் எதிரே தெரிந்த காட்டாமணக்கு மரத்தை நெருங்கியதும், தனது நடையைத் தளர்த்தி கிறவல் வீதிக்குப் பக்கத்தேயுள்ள ஒருசம தரையில் மிதிவண்டியை நிறுத்தினான். நடையில் ஏற்பட்ட களைப்பைப் போக்குவதற்காக வேறுசிலரும் ஏற்கனவே வந்து அந்த ஆமணக்கு மரத்தின்கீழ் குந்தியிருந்தார்கள்.
“என்ன செய்யுது ?” அவன் கேட்டான். அவனது குரலில் பதற்றம் தெரிந்தது. அவள் உடன் பதிலளிக்கவில்லை, பெருமூச்செறிந்தாள். சில விநாடிகள் கழிந்தபின் கூறினாள்,
“களைப்பாக் கிடக்குது. என்னாலை நடக்கேலா தாம். ” கூறும்போதே அவளது உடலில் உள்ள பலவீனம் குரலில் தெரிந்தது அவனுக்கு.
“சரி… உதிலை ஓரமா இரு…” எனக் கூறியவன், அவள் நிலத்தில் இருப்பதற்கு அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்து அமரச் செய்தான். ஆமணக்கு மரத்தின்கீழ் இருந்தவர்களில் பெண்கள் மூவர் அவளை அனுதாபத்தோடு பார்த்தார்கள்.
அவன் தலையை நிமிர்த்தி வானத்தை அண்ணாந்து பார்த்தான். ஆமணக்கு மரத்தின் கிளைகளூடாக வந்த சூரியக்கதிர்கள் அவனது கண்களைக் கூசச் செய்தன. ‘நேரம் இப்ப பன்ரண்டுக்கு மேலை இருக்கும்…’ என அவன் மனம் கணக்கிட்டுக் கொள்கிறது.
“உதிலை உவையளோடை இரு. அந்தா அதிலை தெரியுற கடையில ஏதாவது சாப்பிடுகிறதுக்கு வாங்கி வாறன்.” என்று கூறிய அவன், அவளது பதிலை எதிர்பார்க்காது ஆமணக்கு மரத்துக்கு அப்பால் சற்றுதூரத்தில் தெரிந்த தற்காலிக தேநீர்க்கடையை நோக்கி நடந்தான்.
எங்கேயோ கிபிர் விமானத்தின் மிகையொலி கேட்கிறது. ஆமணக்கு மரத்தின்கீழ் இருந்த எல்லோரது முகங்களிலும் பீதி உணர்வு வெளிப்படுகிறது. கிறவல் வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் தங்களின் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார்கள். எல்லோரது பார்வையும் வானத்தை நோட்டமிடத் தொடங்கின. அதிலும் அவள்… அவன் கடைக்குச் சென்ற திக்கைப் பார்ப்பதும், வானத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
உடையார்கட்டு – சுதந்திரபுரம் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்துவிட்டு, அதற்குள் மக்களைச் சென்று இருக்குமாறு அரசு கூறியபின், அங்கு சரமாரியாக வந்து விழுந்து வெடித்த ஷெல்களால் அரைக்கரைவாசி மக்கள் பலியாகிப் போயிருந்தார்கள். சதைகள் கிழிபட்டு, எலும்புகள் முறிந்து வெளித்தெரிந்த நிலையில், அந்த நிலப்பரப்பு அவல ஒலிகளின் உச்சத்தில் திணறிக் கொண்டிருந்தது.
அவளால் வேகமாக நடக்க முடியவில்லை. வயிறு பெரும் சுமையாகக் கனத்துக் கொண்டிருந்தது. வெயிலோ சுட்டெரித்தபடி இருந்தது. கைவசம் ஒரு குடைகூட அவளிடம் இருக்கவில்லை. பழைய துவாய் ஒன்றினால் தலையைப் போர்த்தியபடி நடந்து கொண்டிருந்தாள். தெருவில் உள்ள கிறவல் கற்கள் வேறு கால்களைக் குத்தி வேதனைப்படுத் திக் கொண்டிருந்தன. அவளால் நடக்க முடியவில்லை. அக்கணத்தில் அவளுக்கு தன் பெற்றோர்களின் நினைவு வந்தது.மனதுக்குள் அவர்களைத் திட்டித் தீர்த்தாள். இப்ப இந்தச் ‘சுமையைச்’ சுமப்பதைவிட, இயக்கத்துக்கே ஓடிப் போயிருக்கலாம்.
வன்னியில் போராட்டத்துக்கு ஆள்பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தெருக்களில் ஆண்-பெண் என்ற வேறுபாடின்றி, ‘ பிள்ளைபிடிப்பு’ நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. நாளடைவில் வீடுகளுக்குள்ளும் புகுந்து குடும்ப அட்டை பெறப்பட்டு, அதிலுள்ள அங்கத்தவர் விபரங்கள் பார்க்கப்பட்டன. திருமணமான குடும்பத்தவர்கள் தவிர, ஏனைய தனிநபர்கள் விடுதலைக்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன்நிமித்தம், பல பெற்றோர்கள் ‘போராட்டத்துக்கான பங்களிப்பு’ என்ற விடயத்தைப் புறமொதிக்கிவிட்டு, தம்பிள்ளைகளை மேலும் பொத்திப் பாதுகாக்கத் தலைப்பட்டனர். நாள், நட்சத்திரம், ஐவகைப் பொருத்தங்கள், சீதனபாதனங்கள் எதையும் பார்காமல், கேட்காமல் தம்பிள்ளைகளுக்கு இரகசியத் திருமணங்களை நடத்தி முடிக்கத் தொடங்கினர்.
அவளுக்கு இந்த அவசர திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. முதலில் மறுத்தாள்;அடம் பிடித்தாள். பெற்றோர் விடவில்லை.
“உன்ர கழுத்திலை தாலி கிடந்தால்தான் நீயும் தப்புவாய், உனக்கு வாறவனும் தப்புவான்.” என்ற அறிவுரை அவளுக்கு ஓதப்பட்டது. (பின்நாள்களில் திருமணம் முடித்த இளங்குடும்பத்தவர்களையும் பிடிக்கவெளிக்கிட்டது வேறுவிடயம்). அவளுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவனுக்கும் ஏற்பட்டிருந்தது.
“நீ உயிரோடை இருக்க வேணுமெண்டால், உந்தத் தோல்நிறம், முகஅழகு, நகைநட்டு, சீதனம், பொருள்பண்டம்… ஒண்டையும் எதிர்பார்க்க ஏலாது. முதல்ல உயிர் முக்கியம். அதைக் காப்பாத்துறதுக்கு நீ இப்ப கலியாணம் கட்டியே தீரவேணும்.”
அவனதும் அவளதும் கருத்துக்கள் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டன. மன விருப்பங்கள் புறந்தள்ளப்பட்டன. ஓர் இரவுக்குள் ஐயர் இல்லாமலேயே பிள்ளையார் பூசையுடன் அவர்கள் இருவரும்’ திரு /திருமதி ஆகிக் கொண்டார்கள். மனப்பொருத்தம், முகப்பொருத்தம் இல்லாத நிலையிலும், அர்த்த ராத்திரியொன்றில் அவனது உடற்பசிக்கு அவள் தீனியாகிப் போனாள். அதன் விளைவாக அவனது இரத்த உரித்தொன்றை அவள் தன் வயிற்றிலேயே சுமந்தபடி நின்றாள்.
சுதந்திரபுர ஷெல் தாக்குதல்களின்போது, அவள் தனது உறவுகளைத் தவற விட்டிருந்தாள். அவரவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாப்பதிலேயே முனைந்தார்கள். எங்கும் புகைமண்டலம்… எங்கும் கந்தக நெடி… எங்கும் அவல ஒலி… குருதியில் நனைந்து கொண்டிருந்த நிலம்மீதில், யார் எவருக்கு என்ன நடந்ததென்பதை அறிய முடியாத நிலை.
அவனும் அவளும் சனநெரிசல்களூடாக ஒருவாறு அந்த இடத்தை விட்டு வெளியேறிப் பரந்தனையும் புதுக்குடியிருப்பையும் இணைக்கும் பிரதான கிறவல் வீதியில் வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு அழுகை வந்தது. தனக்கு முன்னால் செல்லும் அவனைப் பார்த்தபடி அழுது கொண்டு நடந்தாள். அவளால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. வழியிடையில் காட்டாமணக்கு மரத்தின் கீழ் இளைப்பாற வேண்டி வந்ததும், அவள் மரத்தின்கீழ் அமர்ந்து கொண்டாள்.
தூரத்தே அவன் வருவது தெரிந்தது. அவனது கைகளில் இரண்டு பிஸ்கட் பெட்டிகள் இருந்தன. பிஸ்கட்பெட்டிகளை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு மிகுந்த பசிபோலும் அவன் கொடுத்ததும், அவள் ஒரு பெட்டியை அவசரமாகப்பிரித்துச் சாப்பிடத் தொடங்கினாள். கிறவல் வீதியில் சனங்கள் சுமைகளோடு போய்க்கொண்டிருந்தார்கள். பொழுது மெல்லச் சரிந்து கொண்டிருந்தது. ஆமணக்கு மரத்தின் கீழ் இருந்தவர்களும் ஏற்கனவே எழுந்து சென்று விட்டார்கள்.
“என்னப்பா… வெளிக்கிடுவமே… ?” அவன் கேட்டான். “இன்னும் கன தூரமே…?” அவளது கேள்விக்கு அவன் பொய்யான பதிலே கூறவேண்டியிருந்தது.
இருவரும் எழுந்து கொண்டார்கள். பிஸ்கட்டையும் வெறும் நீரையும் குடித்ததில், அவளுக்கு சற்று தெம்பு ஏற்பட்டிருந்தது. பொழுதும் சரிந்து கொண்டிருந்ததில், வெயில் சூடும் மெல்லத்தணிந்து செல்லத் தொடங்கியது. அவள் இப்போது அவனோடு மிக அருகாக நடந்து கொண்டிருந்தாள்.
மாத்தளன் கப்பல்றோட்டிலும் மற்றும் கடற்கரைப்பகுதியெங்கும் சனங்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அவன் அந்தப்பகுதிக்குச் செல்லாமல், அதற்கு அப்பாலுள்ள அம்பலவன் பொக்கணை எனும் இடத்தைத் தாண்டி, வலைஞன்மடம் எனும் பகுதிக்கு அவளோடு போய்ச் சேர்ந்தான். பொழுது இரவாகி விட்டிருந்தது. அவனைப்போலவே வேறுசிலரும், தாம் கொண்டுவந்த பொருள்களுடன் களைப்பாறிக் கொண்டிருந்தார்கள். சுற்றிவர ஆங்காங்கே உயரமாய் வளர்ந்து நிற்கும் பனைமரங்கள். சின்னஞ்சிறு வடலிகள். அதற்கப்பால் பெருங்கடலில் இருந்து எழும் அலைகளின் ஒலிகள். மெலிதான கூதல்காற்று. தரப்பாள் வீடுகளில் தெரியும் சிறு லாம்பு வெளிச்சங்கள். அடுத்த கணத்தில் என்ன நிகழும் என்பதை அறியமுடியாத வாழ்வின் சூட்சுமத்தோடு,
வாழ்வதற்கான போராட்டத்தில் தோற்றுப்போனவர்களாக… அந்த இடத்தில் அநேகம்பேர் மனம் துவண்டு இருந்தார்கள்.
அவனும் அவளும் வலைஞன்மடத்துக்கு வந்து ஒரு மாதமாகி விட்டது. இதுவரையிலும், அவளால் தனது பெற்றோர்களைக் கண்டு கொள்ள முடிய வில்லை. உயிரோடு இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. சுதந்திரபுரத்தில் இருந்து மிதிவண்டிமூலம் காவிக் கொண்டுவந்த பொருள்களால், அவன் சிறியதொரு தரப்பாள் கொட்டிலை அமைத்திருந்தான். மலம் கழிப்பதற்கு சனங்கள் அருகாமையில் உள்ள வடலிகள் வளர்ந்த இடத்தைப் பயன்படுத்தினார்கள். குளிப்பதற்கு ஒரு பொதுக்கிணறு இருந்தது. இடைக்கிடை ஷெல்கள் வந்து விழுந்து வெடித்தன. அவ்விடத்திலிருந்து எழும் கதறல் ஒலிகள் சற்று நேரம் கழிய, அடங்கிவிடும். சாவுகள் மலிந்துபோன வாழ்க்கைக்குள் அவளுக்கும் பேறுகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது.
ஒருநாள்… அம்பலவன்பொக்கணையில் உள்ள ஒருவருக்கு தென்னங்குற்றிகளால் பதுங்குகுழி அமைத்துக் கொடுக்கும் வேலைக்குப் போய்விட்டு வருவதாக அவன் அவளிடம் கூறிவிட்டுச் சென்ற அரை மணித்தியாலயத்தின்பின், ஷெல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து தரப்பாள் கொட்டில்களின்மேல் விழுந்து வெடிக்கத் தொடங்கின.
அவனுக்கு அவளின் நினைவு வந்தது. திரும்பிப் போகமுடியாத நிலை. ‘அவள் எப்படியும் சரிந்து படுத்து பாதுகாப்பைத் தேடிக்கொள்வாள்’. என்று அவன் தனக்குள் சொல்லி, தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தான். அவன் நினைத்தது போலவே அவள் தனது தரப்பாள் கொட்டினுள்
சரிந்தே படுத்திருந்தாள். ஷெல்கள் பரவலாக விழுந்து வெடித்த வண்ணமிருந்தன. அவள் அச்ச உணர்வைக் கடந்து விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். அருகில் இரத்த உறவுகளென எவருமில்லை… அவனுமில்லை… பக்கத்தில் இருப்பவர்களும் தங்கள் பாதுகாப்புக் கருதி, தமது கொட்டில்களுக்குள் முகம் குப்புறக் கிடந்தார்கள்.
ஷெல்கள் தொடர்ந்தும் விழுந்து வெடித்துக் கொண்டிருந்தன. அதிலும் ஒருஷெல் மிக அருகாக வெடித்துச் சிதறுகிறது. வெடியதிர்வினால் வயிற்றுக்குள் ஏதோ உதைப்பதான உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. அந்த உணர்வின் நிமித்தம் அவள் வலி தாங்காமல், தாயை அழைக்கிறாள். அதேகணம் ஏதோ மரம் முறிவதான ஒலி. அவள் திகைத்தவளாய் தலையைச் சற்று நிமிர்த்தி, தரப்பாள் கொட்டிலின் முகட்டுப்பகுதியைப் பார்க்கிறாள். ஒருவிநாடிக்குள் அந்த முகடு… தரப்பாள்… தடிகள் யாவும் தன்னை நோக்கி வருவதை அவள் உணர்ந்தாள்.
“ஐய்…” மிகுதி ஒற்றைச்சொல்லை அவள் உச்சரிப்பதற்கிடையில், எல்லாமே முடிந்து விட்டன.
அவளது நெஞ்சுக்கும் இடுப்புக்கும் இடையில் பாரிய பனைமரக்குற்றியொன்று விழுந்து அவளது வயிறு நசுங்கிப்போயிருந்தது. வாயாலும் மூக்காலும் குருதி பீறிட்டிருந்தது. அவள் அணிந்திருந்த ‘சோட்டி’ உடை இடுப்புக்குக் கீழே முன்பகுதியெங்கும் செந்நிறமாய் மாறியிருந்தது. வாய் ஆ… வென விரிந்த நிலையில், தன் இரு இமைகளையும் மூடாமலேயே அவள் கிடந்தாள்
அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை