செவிவழிக்கதைகள் பாதியும் விழிவழிச் சாட்சியம் மீதியுமாய் மனதில் எஞ்சியவை-இயக்க காலத்து சினிமா- பத்தி -த.அகிலன்

தமிழ்ச்சினிமா பார்த்தல்

 

த.அகிலன்போர்க்காலத்தில் உயிர்காக்கும் பதுங்குகுழிகளில் பயன்பாடு நீங்கள் அனைவரும் அறிந்ததே. சுப்பசொனிக் மேல சுத்தினாலோ அல்லது இராணுவமுகாமிலிருந்து எறிகணை குத்தினாலோ அதற்குள் போய் ஒழிந்துகொள்ளலாம் என்பது அப்பயன்பாடுகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். புலிகளின் ஆளுகைக் குட்பட்ட பகுதிகள் மீது இலங்கை அரசால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை வெல்லும் உபாயங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கனவிளக்கு, பனங்காய்ச் சோப்பு, தேங்காயெண்ணை, டீசல், போன்ற இன்னொன்றுதான் பதுங்கு குழியைச் சவுண்ட் புறூப் (sound proof)  அறையாகப்பபாவிக்கும் பழக்கமும். ஆனால் முன்னையவற்றைப்போல அரசின் தடைகளை வெல்லும் உபாயங்களில் இது ஒன்றல்ல. இது விடுதலைப்புலிகளால் விதிக்கப்பட்டிருந்த தடையை வெல்லும் உபாயம்.

விடுதலைப் புலிகளால் தமிழகத்தின் சினிமாக்கள் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் அவர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக படம் பார்ப்பதற்காக நீரிறைக்கும் இயந்திரத்தோடு டைனமோவை இணைத்துச் செய்யப்பட்ட ஜெனரேட்டரை பங்கருக்குள் இறக்கி பங்கரின் வாசலை அடைத்து ஜெனரேட்டரின் சத்தம் வெளியே வந்து ஊரைக் கூட்டி படம் பார்ப்பதைக் காட்டிக் கொடுக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

விடுதலைப்புலிகளின் காலத்தைய சினிமா முயற்சிகள் என்று வரும்போது எனக்கு வன்னியில் படம் பார்ப்பதற்கு நாங்கள் செய்த மேற்குறித்த முயற்சிகளும் சேர்த்தே நினைவுக்கு வருகின்றன. போர்க்காலத்தில் அதுவும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில்  சினிமா பார்ப்பதற்கான முயற்சிகள் பெரும் பிரயத்தனம் நிறைந்ததும், சாகசம் நிறைந்ததுமே.  நீங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வதியாதவராக இருந்தால் படம் பார்ப்பதற்கு இத்தனை அக்கப்போரா? என்று தோன்றலாம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த அனுபவமிருப்பின் இதில் வியப்பதற்கு ஏதுமிருக்காது.

நான் சுயமாய்ப் படம் பார்க்கிற காலத்தில் கிளிநொச்சி திரையரங்குகள் அற்றது. அகல வெண்திரை என்பதையே ஆவென்று வாயைப் பிளந்து கேட்ட, புரெஜெக்டரை விஞ்ஞானத்தின் அதியுயர் விந்தையாய் உணர்ந்த சிறுபராயத்தின் வழியேதான் தொடங்குகிறது எனது வன்னியின் சினிமா அனுபவம். கிளிநொச்சியின் அழிந்து போன அடையாளங்களில் முக்கியமானவை ‘பராசக்தி’ மற்றும் ‘ஈஸ்வரன்’ என்ற அதன் இரண்டு திரையரங்குகள். பராசகத்தி திரை அரங்கில் என்னுடைய மூன்று அல்லது நான்கு வயதில் நான் ‘சிந்துபைரவி’ படத்தை பார்த்தேன் என்று நினைவு.

போர்க்காலத்தில் விடுதலைப்புலிகள் தமிழகச் சினிமாவின் மீதான தடையை இரண்டுமுறை தளர்த்தியிருந்தார்கள். தடைகள் தளர்த்தப்பட்ட காலத்தில் மினி என்றழைக்கப்படும் 22 அங்குல தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்ட கொட்டகைகளில் சினிமாப்படங்கள் ஓடின. விடுதலைப்புலிகள் இரண்டாவது தடைவையாக தடையைத் தளர்த்தியபோது திரைப்பட வெளியீட்டுப்பிரிவு என்ற அமைப்பினை உருவாக்கினார்கள். திரைப்பட வெளியீட்டுப்பிரிவென்பது அதன் பெயராயிருந்ததே தவிர அதன் வழியாக விடுதலைப்புலிகளின் திரைப்படங்களை ஒருபோதும் வெளியிட்டதில்லை. மாறாக அது தமிழகச் சினிமாக்களை தணிக்கை செய்து வெளியிடும் அமைப்பாகவே இருந்தது. (இங்கு தணிக்கை என்பது பாலியல் உணர்வு சார்ந்த காட்சிகளின் தணிக்கை ) தவிர நகரங்கள் தோறும் திரைப்பட வெளியீட்டுப்பிரிவு கடைகளை நிறுவி திரைப்படங்களை வாடகைக்கு விடுவதையும், தனியாரால் நடத்தப்பட்ட திரை அரங்குகளை நிர்வகிப்பதிலுமே அவை ஈடுபட்டன. அப்போது ஒரு முழு டிக்கெட்டின் விலை பதினைந்து ரூபாய் அதில் எட்டு ரூபாய் திரைப்பட வெளியீட்டுப்பிரிவுக்கும் ஏழு ரூபாய் திரையரங்க உரிமையாளருக்கும் என்ற ரீதியில் விநியோகம் இருந்தது.

தமிழகச்சினிமா தடை செய்யப்பட்ட காலத்தில் இந்தத் திரையரங்கங்களில் ஆங்கிலத் திரைப்படங்கள் குறிப்பாக சண்டைப்படங்கள் ஓடின.  ஆனால் நாங்கள் விடுதலைப் புலிகளின் தடைக்காலத்திலும் தமிழ்ச்சினிமாவைப் பார்க்கத்தான் செய்தோம். வார இதழ்களில் வண்ணப்பக்களை நிரப்பும் சினிமாக் கிசுகிசுக்களை படிக்கத்தான் செய்தோம். ரகசியமாகவும், திருட்டுத்தனமாகவும் சின்னச் சின்ன வட்டங்களுக்குள்ளே மட்டும் அறிந்தபடி அந்தப்படங்களைப் பார்ப்போம். இதற்கென்று தனியாக இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளிருந்து சிகரட்டையும் மண்ணெண்ணெயையும் பெற்றோலையும்  கற்பூரத்தையும் கடத்திக்கொண்டு வருகிற மாதிரி சினிமாப்படங்களையும் கடத்திக்கொண்டு வந்து வாடகைக்கு விடுகிறவர்கள் இருந்தார்கள். சாமத்திய வீட்டு வீடியோக்கள் அல்லது கலியாண வீட்டு வீடியோக்கள் பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டு நாங்கள் சினிமாப்படம் பார்த்தோம். விடுதலைப்புலிகளின் திரைப்பட வெளியீட்டுப்பிரிவினர் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்துவதும் அவர்களிடம் பிடிபட்டால் ரீ.வி,டெக், ஜெனரேட்டர் என்று எல்லாவற்றையும் பறிமுதல் செய்வதும் நடக்கும். ஆனால் அதெல்லாவற்றையும் கடந்தும் நாங்கள் தமிழ்ச் சினிமாப்படங்களைப் பார்த்துக் கொண்டுதானிருந்தோம்.

0000000000000000000000000000000000

இயக்கப்படம் பார்த்தல்

இயக்கப்படங்களையும் வாடகைக்கு ஜெனரேட்டரும் ரீ.வி. டெக்கும் எடுத்து அப்படியாகப் பார்த்தோம். ஆரம்ப காலங்களில் இயக்கப் படங்கள் விடுதலைப் புலிகளினாலேயே பாடசாலைக்கு எடுத்து வரப்பட்டு போட்டுக் காட்டப்பட்டன. அல்லது அன்னை பூபதி நினைவு நாட்கள், திலீபனின் நினைவு நாட்கள், மாவீரர் வாரம் இப்படியானவற்றிற்காக அமைக்கப்படும் நினைவுப் பந்தல்களில் பகல் முழுதும்  இயக்கத்தின் காட்சிப் படங்கள் காட்டப்பட்டன. இது என்னுடைய சின்ன வயதில். பின்நாட்களில்  யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் அதாவது முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கையின் பின்னரும் ‘சத்ஜெய’, ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கைகளின் காலத்திலும் விடுதலைப்புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்காக புதிய போராளிகள் இணையும் செயலகங்கள் திறக்கப்பட்டன. அவை ஒரு கிராமத்திற்கு குறைந்தது இரண்டாவது இருந்தன. அங்கே சென்றால் எந்த நேரமும் இயக்கப்படமொன்று ஓடிக்கொண்டேயிருந்தது. அல்லது அங்கிருந்து இயக்கப்படமொன்றின் வசனங்கள் ஒலிபெருக்கிகள் வழியாக எங்கள் செவிகளை வந்தடைந்தபடியே தான் இருந்தன. இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்கள் திரை அரங்குகளிலும் ஓடின. குறிப்பாக விடுதலைப்புலிகளால் தயாரிக்கப் பட்ட முழு நீளத் திரைப்படங்கள்.

0000000000000000000000000000000

திரைப்பட உருவாக்கம்

இயக்க காலத்தில் சினிமாத்தயாரிப்பென்பது முற்றிலும் விடுதலைப்புலிகளின் சினிமா முன்னகர்வு என்பதாகவே அர்த்தம் கொள்ளப்பட முடியும். விடுதலைப்புலிகள் அல்லது அவ்வமைப்பு சார்ந்த நிறுவனங்களோடு சம்மந்தப்பட்ட நபர்கள் தவிர்த்து யாரும் சினிமா முயற்சிகளில் ஈடுபட்டதில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த அனைத்து கலைஞர்களும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர். ஊடங்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளாலேயே நடத்தப்பட்டதும் இதற்கொரு காரணமாய் இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தை அரசாங்கம் கைப்பற்றியதன் பின்னராக வன்னியே பெருந்தளமாகவும் எல்லாவற்றினதும் தலைமையகமாகவும் இருந்தாலும் விடுதலைப்புலிகளின் சினிமா முயற்சிகள் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன.அவைகுறித்து என் செவிக்கெட்டியவையும், நினைவுக் கெட்டியவையும் இங்கே பதிவு செய்கிறேன்.

விடுதலைப்புலிகளிடம் எல்லாவற்றிற்கும் பிரிவுகள் இருந்தன. குறிப்பாக இரண்டாம் கட்ட ஈழப்போர்க் காலத்தில் விடுதலைப் புலிகள் தமது உட்பிரிவுகள் எல்லாவற்றையும் நிறுவன மயப்படுத்தி. ஓர் கட்டுக்கோப்பான நிர்வாக அலகுகளுக்குள் இயங்கும் துறைசார் அமைப்புக்களாக அவற்றை மாற்றியமைத்தார்கள். விடுதலைப் புலிகள் சமூக அசைவியக்கத்திற்கான பல பிரிவுகளை ஆரம்பித்தபொழுது  விடுதலைப் புலிகள் ‘கலை பண்பாட்டுக்கழகத்தையும்’ தனியாக காட்சி ஊடகத்திற்காக ‘நிதர்சனம்’ என்ற அமைப்பையும் உருவாக்கினர். பின்நாட்களில்  இவை, புகைப்படப்பிரிவு,திரைப்பட வெளியீட்டுப்பிரிவு,நிதர்சனம், புலிகளின் குரல், விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டு கழகம், தமிழீழ இசைக்குழு எனத் தனித்ததனி பிரிவுகளாக விரிந்து தத்தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன.

00000000000000000000000000000000000

நிதர்சனம்

விடுதலைப்புலிகளின் காட்சி ஊடகம் சார் செயற்பாடுகள் அனைத்தையும் நிதர்சனம் நிறுவனமே கையாண்டது. நிதர்சனத்தின் ஆரம்பத்தில் இதற்குப் பொறுப்பாக இருந்தவர் பரதன். உங்களில் அநேகருக்கு களத்தில் கேட்கும் கானங்கள் என்ற இசைத்தொகுப்பு நினைவிலிருக்கலாம். “நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப் பாரடா”, “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனீங்களா?”  இந்தப்பாடல்கள் இடம்பெற்ற தொகுப்பென்று நினைக்கிறேன். அந்தத் தொகுப்பினை இந்தியாவில் உருவாக்குவதில் பரதனே பெரும்பங்கினை வகித்தார் என்று அறிந்திருக்கிறேன். அவர் ஒரு  வீடியோக்காரர் அவர் நிதர்சனத்திற்கு பொறுப்பாக இருக்கிறார்.நிதர்சனத்தை உருவாக்கும் பணியில் ஆலோசகராக வந்து  அவருடன் சேர்ந்து கொண்டவர் ஞானரதன்.புலிகளின் காலத்து சினிமாவின் முன்னோடி என்று நான் அவரையே கருதுகிறேன்.அதுதான் உண்மையும்கூட. அவர் நீங்கள் அறிந்த ஓவியர் ரமணியின் சகோதரர்.மாற்று சினிமாவின் மீது தணியாத தாகம் கொண்டவர். இறக்கும் வரையிலும் சினிமா முயற்சிகளின் மீது அடங்காத காதல் கொண்டிருந்தவர். மட்டக்களப்பில் நில அளவையாளராகப் பணியாற்றியபோது  ஞானரதனும் பாலுமகேந்திராவும் நண்பர்கள் என்பது ஒரு உபரித் தகவலாக இருக்கலாம். தன்னுடைய நண்பரைப் போல இந்தியா செல்லாது தனது சினிமாக்கனவுகளை அடைகாத்தவருக்கு நிதர்சனத்தின் உருவாக்கமும் அதன் பொறுப்பாளராயிருந்த பரதனுக்குள்ளும்  இருந்த ‘படமெடுத்துப் பார்த்தால் என்ன’ என்கிற ஆசையும் சேர்ந்து புலிகளின் முதலாவது சினிமா முயற்சியானது.

இருவரும் சேர  பரதன் இயக்கி எடுத்த மௌனப் படம்தான் “இனி ஒரு விதி”. இரண்டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முதலாவது படம் இது. இந்தப் படத்தில் நடித்தவர் நிதர்சனம் நிறுவனத்தின் பணியில் இருந்த போராளி சிறீராம். இவரே பின்னர் கிழக்குமாகாண கடல் புலிகளின் தளபதியாயிருந்தார். இன்னொரு வகையிலும் சிறீராமை இங்கே அறிமுகப்படுத்தலாம் அது மிகவும் துயரமானது,  இன்றைக்கு இனவாதச் சிங்கள ஆட்சியார்களின் அதன் இனவெறி இராணுவத்தின் கொடுரமான போர்க்குற்றத்திற்கு ஆதாரமாக இருக்கிற இசைப்பிரியாவின் படுகொலைப் புகைப்படங்களை, காட்சிகளை நாங்கள் அனைவரும் அறிவோம். சிறீராம் இசைப்பிரியாவின் காதல் கணவர். சிறீராம் கடல்புலிகளில் இருந்தாலும் இறுதிவரையும் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட எல்லாப் படங்களிற்கும் இவர் தனது பங்களிப்பை நல்கியிருக்கிறார். அநேகமான விடுதலைப்புலிகளின் படங்களின் பங்களிப்பாளர்கள் பெயர்ப்பட்டியலில் இவரது பெயரை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்மசமும் இருக்கிறது. பிற்காலங்களில் வந்த பல இயக்கப் படங்கள் கடற்கரும்புலிகள் பற்றியதாக, அல்லது  கடலோரத்தை கதைக்களமாகக் கொண்ட படங்களாக அதிகமும் இருந்தன.

சிறீராம் நடித்த ‘இனி ஒரு விதி’ என்கிற விடுதலைப் புலிகளின் முதலாவது  படத்தை அநேகர் பார்த்திருக்கவில்லை நானும் அந்தப்படத்தை பார்க்கவில்லை. மறந்துவிடாமல் ஆவணப்படுத்தப்படவேண்டியவை என்கிற அடிப்படையில நான் கேள்விப்பட்டிருக்கிற தகவல்கள் வழியாகவே இதனை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

‘இனி ஒரு விதி’ படத்திற்குப்பிறகு ஞானரதன் ‘நேற்று’ என்று ஒரு படத்தை எடுக்கிறார். இந்திய ராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது ஒரு போராளியை வயதான மூதாட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.  அந்தப்படத்தில் இருந்து ஒரு காட்சி இரத்தமும் சதையுமாய் நினைவிருக்கிறது. மாடுகளுக்கு வைக்கோல் வைக்கும் தொட்டிக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் போராளியைத் தேடிவரும் இராணுவத்தினன் அந்தத் தொட்டிக்குள் தனது துவக்கின் முன் செருகப்பட்ட கத்தியினால் அத் தொட்டிக்குள் குத்துவான். அது அந்தப் போராளியைக் காயப்படுத்தும் ஆனால் போராளி வலியைப் பொறுத்துக்கொள்வான். ஒரு சினிமாவாக பார்வையாளனை பதற்றத்தின் நுனியில் அமரவைக்கும் காட்சியாக என் சின்ன வயதில் அக்காட்சி இருந்தது. தவிரவும் சிறுவனான என் மனதில் இயக்க அண்ணாக்கள் பற்றிய சித்திரம் உருவாகி வர அக்காட்சியும் ஒரு மூல காரணமாய் இருந்தது. உண்மையில் இந்தப்படம் மக்களை பெரிதும் கவர்ந்தது. நிதர்சனம் தொடர்ச்சியாக படங்களை எடுக்கும் முனைப்பை இந்த படத்திற்கான எதிர்வினைகளே கொடுத்தன. இந்தப்படத்தில் நடித்த போராளி மிரேஸ் பின்னர் நிதர்சனத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

‘நேற்று’ படத்தைத் தொடர்ந்து ஞானரதன் ‘காற்று வெளி’ என்ற படத்தை எடுக்கிறார். சூட்டி என்ற போராளியை மையமாக வைத்து ஒரு போராளிகள் முகாமில் நடக்கும் போராளிகளிற்கிடையிலான உறவையும் அந்தப் போராளிகளோடு அயலவர்களுக்கிருக்கும் உறவையும் கதைக்களமாகக் கொண்டது காற்று வெளி. அந்தப் படத்தில் வரும் சூட்டியின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எங்கள் வீட்டு ஒழுங்கை தொடங்குமிடத்தில் இருந்த சைக்கிள் கடையில் ஒரு நாள் சூட்டி கதாபாத்திரத்தில் நடித்த நடிகரை அவரது இயக்கப் பெயர் ‘றியோ’ நான் போய்ப்பார்த்து கதைத்தேன். கதைத்தேனென்றால் நீங்கள் சூட்டிதானே என்று கேட்டேன். அவர் சிரித்தபடி “பொடியா அது நானில்லை” – என்றார். பின்னாட்களில் அவர் இயக்கத்திலிருந்து விலத்தி கமராக்களைத் திருத்துகிற ஒரு கடை வைத்திருந்தார். சில ஆண்டுகளின் பின்னர் அவரது கமரா திருத்தும் கடையில் களவாகச் ‘சந்தித்த வேளை’ கார்த்திக் நடித்த படம் பார்க்குமளவுக்கு நண்பர்களானதும் இக்கட்டுரைக்குத் தொடர்பற்றது. சினிமாவாகும் வாழ்வின் முரண்நகைகளில் அதுவொரு காட்சியும் சாட்சியும்.

இதே காலகட்டத்தில் காட்சி வடிவில் விடுதலைப்புலிகள் சார் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் முகமாக ‘ஒளிவீச்சு’ என்கிற வீடியோ சஞ்சிகையை நிதர்சனம் மாதாந்தம் வெளியிடுகிறது. இயக்ககாலத்து காட்சி ஊடக முயற்சிகளில் ஒளிவீச்சு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி மற்றும் செயற்பாடு. ஓளி வீச்சு பல நிகழ்ச்சிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. எனக்கு குறிப்பாக நினைவிலிருப்பது பாலகுமாரனின் எழுத்தில் சத்யாவின் குரலில் வருகிற ‘சமகாலப்பார்வை’ என்ற பதிவு. அந்தக் குரலுக்கும் அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சொற்களுக்கும் ஒரு கவர்ச்சியிருந்தது. அது தவிரவும் ஒளிவீச்சில் அந்தந்த மாதங்களில் இடம்பெற்ற மாவீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன. தவிர, ஒளிவீச்சில் அவ்வப்போது குறும்படங்களும் இணைக்கப்பட்டன. பின்னாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி உருவாவதற்கு சற்று முன்னதான காலப்பகுதியில் ஒவ்வொரு ஒளிவீச்சிலும் ஒவ்வொரு குறும்படம் என்கிற அளவில் அவை வெளியிடப்பட்டன.

இன்னொரு பக்கத்தில் எதிர்பாராத விதமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கலை பண்பாட்டுக்கழகம் ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் பொ.தாசன். இவர் மட்டக்களப்பிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் – முல்லைத்தீவில் இருந்தவர். அங்கிருக்கும்போது அந்த மாவட்டத்தின் கலைபண்பாட்டுக்கழகத்தினரும் பொ. தாசனுக்குத் தொடர்பு கிடைத்திருக்கிறது. பொ.தாசனின் இயக்கத்தில் ‘தமிழோசை’ என்ற படம் வந்தது. இந்தப் படத்தைப் பிரபாகரன் பாராட்டினார். படத்தில் நடித்தவர்களை அழைத்துச் சந்தித்து, பரிசுகளையும் வழங்கினார். இது முல்லை மாவட்டக்கலைஞர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது.  தாசன் தொடர்ந்து படங்களை எடுக்கத்தொடங்கினார். அப்படிப் பொ.தாசன் எடுத்த படம் ஒன்று மிகவும் பிரபலமானது. அந்தப்படத்தின் பெயர் ‘இன்னும் ஒரு நாடு’

இன்னும் ஒரு நாடு மேஜர் கிண்ணியைப் பற்றிய படம். இந்திய இராணுவக்காலத்தில் கிண்ணி என்ற போராளி செய்த சாகஸங்கள், வீரச் செயல்களைப் பற்றிய கதை.  எனக்கு இன்னமும் தமிழ் சினிமாப்பாட்டொன்றின் சாயலில் அமைந்த “அண்ணை அண்ணை கிண்ணி அண்ணை, எங்க குறூப்பு நல்ல குறூப்பு இப்ப ரொம்பக் கெட்டுப்போச்சண்ணே” – என்ற பாட்டு ஞாபகமிருக்கு. நான் இளையராஜாவின் பாட்டை இந்தைப்பாட்டைக் கேட்டபின்னர் தான் கேட்டேன்.  பொ.தாசனும் தொடர்ச்சியாக நிறையப் படங்களை எடுத்தார். அடுத்ததாக போராளிகளை வைத்து ‘தாயகக்கனவு’ என்ற படம். பிறகு கடற்கரும்புலிகளைப் பற்றிய ‘உயிர்ப்பூ’ என்ற படம். இந்தப்படம் எனக்கு இன்னமும் அழுத்தமாக நினைவில் பதிந்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று எனது பக்கத்து வீட்டு என் சமவயதுக்காரன் இந்தப் படத்தில் நடித்தான் என்பது. இன்னொன்று பாடகர் மேஜர் சிட்டு. உண்மையில் சிட்டு அற்புதமான பாடகன். அவர் பாடிய “சின்னச் சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்” – என்ற பாடல் இந்தப்படத்தில்தான் இடம்பெற்றது.

தாசன் மேலும் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் – 1998 இல் என்று நினைக்கிறேன் – பொ.தாசன் நிதர்சனம் நிறுவனத்தின் முகாமில் இரவு நேரம் சயனைட் அருந்தித் தற்கொலை செய்து கொண்டார். ஏதோ கமராக்களை வெளியாட்களுக்கு கொடுத்ததாகவோ எதற்காகவோ நிதி மோசடி என்கிற ரீதியில் தண்டிக்கப்பட்டு அவமானம் தாங்காத தற்கொலை அது என்கிற விசயம் தகவலாகப் பரவிக்கிடந்தது. இதே போலவே பாடகர் சிட்டுவும் இன்னொரு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனையாக சண்டைக்கு அனுப்பப்பட்டு வீரச்சாவைத் தழுவினார். (அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று பின்னாட்களில் பேசப்பட்டது)  உண்மையில் விசேட திறமைகள் வாய்த்த போராளிகளை சண்டைக்கனுப்புவதை பெரும்பாலும் தவிர்த்தே வரவேண்டும் என்று பிரபாகரன் முடிவெடுத்திருந்தார் என்று சனங்களிடம் ஒரு கதையிருந்தது. ஆனால் அவற்றையும் தாண்டிய இழப்புக்களாக இவை இருந்தன. பொ.தாசனினதும் சிட்டுவினதும் இழப்பென்பது நிதர்சனத்திற்கும் புலிகளின் சினிமா முயற்சிகளிற்கும் பெரிய பின்னடைவுதான்.

 இதேவேளை  நா.கேசவராஜன் யாழ்ப்பாணத்திலிருந்து “திசைகள் வெளிக்கும்” என்ற படத்தை இயக்கினார்.  அது சீதனக் கொடுமை, பெண்விடுதலை என்னும் பெரும்பாலும் போராளிகளைப் பற்றியில்லாத கதையாக இருந்தது. தமிழீழத் திரைப்படங்களின் ஒரே ஒரு டுயட் பாடல் இந்தப்படத்தில்தான் இடம் பெற்றது. “அமுத மழையில் நனையும்பொழுதில் உனது பெயரம்மா” என்று தொடங்குகிற பாடல் அது. இயக்கப்படமொன்றில் காதல் பாட்டு சனங்களுக்கு ஆச்சரியத்தை விதைத்து. கேசவராஜன் பல படங்களை இயக்கினார், வன்னியில் போர் முடியும் வரை கேசவராஜன் படங்களை இயக்கிக் கொண்டேயிருந்தார். தமிழீழத்தின் பிரபலமான பெரிய படங்களை கேசவராஜன் இயக்கினார். ‘கடலோரக்காற்று’, ‘அம்மா நலமா’, ‘அப்பா வருவாரா’ இப்படிப்பட்ட பல படங்களை கேசவராஜன் இயக்கினார். கேசவராஜன் இப்போதும் ‘பனைமரக்காடு’ என்ற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

  த.அகிலன் த.அகிலன் த.அகிலன் த.அகிலன் த.அகிலன் த.அகிலன் த.அகிலன் த.அகிலன் த.அகிலன்

மறுபக்கத்தில் சேரலாதன் என்ற நிதர்சனம் நிறுவனத்தின் பிற்காலத்தையப் பொறுப்பாளர் சேரன் என்ற பெயரில் “உறங்காத கண்மணிகள்” என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் வேவுப் புலிகளின் கதையைச் சொல்லியது. அவர்கள் எப்படி எதிரியின் முகாமுக்குள் நுழைகிறார்கள். எதிரி முகாம் பற்றிய தகவல்களை எப்படித் திரட்டுகிறார்கள் என்பது போன்ற வேவுப் போராளிகளின் வேவு நடவடிக்கைகளின் சவால்களை அந்தப்படம் பேசியது. புலிகளின் இராணுவக் கட்டமைப்பொன்றின் நடவடிக்கைகளை மக்களுக்குச் சொல்லிய முதல் படமாக இதுவே இருந்தது. உண்மையில் புலிகளின் திரைப்படங்களின் உள்ளடக்கத்தில் பெரும் மாறுதலை – கதைத் தெரிவுகளில் பெருந்திருப்பத்தை – இந்தப்படம் ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன். இந்தப்படம் சினிமாப்படம் போல திரை அரங்குகளில் காண்பிக்கப்பட்டது. மக்கள் பெருமளவில் இந்தப்படத்தை பார்த்தனர். தாக்குதல் படங்கள் எடுப்பதற்கான உந்துதலை  இந்தப் படம் கொடுத்தது. பாம்பு ஒரு போராளியைக் கடிக்கும் காட்சி சாக்குத் தொப்பி அணிந்தபடி முகத்தை உருமறைப்புச் செய்தபடி போராளிகள் போவதுபோன்ற போராளிகளின் சண்டை அனுபவங்கள் சனங்களிற்கு புதிதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது. அதன் பிறகு அநேக படங்கள் தாக்குதல்களை மையமாக வைத்து வீரத்தையும் தியாகத்தையும் மட்டும் பேசும் படங்களாக மாறிப்போனமைக்கு இந்தப்படம் அடிகோலிட்டது.

கேசவராஜனைப் போலவே முல்லை யேசுதாசன் என்பவர் ஒரு அரைமணிநேரப் படமொன்றை இயக்கினார் அந்தப் படத்தின் பெயர் “செம்வரத்தம்பூ”. ஒரு ஒளிவீச்சில் இந்தப்படம் இணைக்கப்பட்டிருந்தது. முல்லை யேசுதாசனும் புலிகளின் திரைப்படத்துறையில் மிகவும் பெரும்பங்காற்றியவர். இவர் ஒரு தேர்ந்த நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என்று பல பங்களிப்புக்களைச் செய்தவர். ‘நீலமாகி வரும் கடல்’ என்கிற சிறுகதைத் தொகுதியையும் இவர் வெளியிட்டிருக்கிறார். தொடர்ச்சியாக நிறையக் குறும்படங்களை முல்லை யேசுதாசன் எடுத்தார். எனக்கு மிகவும் பிடித்த இவரது முக்கியமான படமாக நான் கருதுவது ‘தவிப்பு’ என்ற படம்.  தனது சகோதரன் கரும்புலியாக செல்கின்றபோது வழியனுப்ப நேர்கிற தமக்கையினதும் தம்பியினதும் உணர்வுப் போராட்டம் அந்தக் கதை. ஆயுதப்போராட்டம் எத்தகையவர்களின் தியாகங்களினால் அதன் திருவுருவை எட்டியது என்பதற்கு இப்படத்தின் கதை ஒரு சாட்சியம். இயக்கப்படங்களின் வரலாற்றில் நிச்சமாக முல்லை யேசுதாசனுககும் அவரது தவிப்பு படத்திற்கும் முக்கியமான இடம் உண்டு.

சமாதானச் சீசன்களின் கடைசிச் சீசனுடைய தாக்கம் விடுதலைப் புலிகள் அரசியல், இராணுவச் செயற்பாடுகளில் மட்டுமல்லாது கலைபண்பாட்டுக்கழகம், புலிகளின் குரல், நிதர்சனம் போன்ற பல பிரிவுகளிலும் பெரிய அளவு மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியது. அது புலிகளின் திரைப்பட முயற்சிகளில் தொழிநுட்ப ரீதியிலான பெருமளவிலான தாக்கத்தை செலுத்தியது. நவீன உபகரணங்கள் சினிமாவின் காட்சிப்படுத்தலிலிருந்த சிரமங்களை பெருமளவில் குறைத்தது. நிறையக் குறும்படங்களின் வருகைக்கும் அது ஒரு காரணமாக இருந்தது. சமாதான காலத்தில் பெருமளவிலான குறும்படங்கள் எடுக்கப்பட்டன. முழு நீளத் திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. குருதிச் சன்னங்கள், விடுதலை மூச்சு போன்ற படங்கள் அதிகளவான தொழிநுட்பத்தின் துணைகொண்டு காட்சி அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டன. ரமேஸ் அல்லது அருமை என்பவரும் விநோதனும் இணைந்து இந்தப் படங்களை எடுத்தனர். உண்மையில் தொழிநுட்பத்தின் வருகையென்பது தாக்குதல் படங்களை எடுப்பதற்கு அதிக வசதியை ஏற்படுத்தியதே அன்றி கதைக்களங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த அதனாலும் முடியவில்லை.

இயக்கப்படங்களின் வரலாற்றில் மிகவும் முக்கியமாக தனித்துச் சொல்லவேண்டிய பங்களிப்பு பெண் போராளிகளுடையது. பெண் போராளிகள் அமலா, நிமலா, குயிலினி, கஜானி போன்றவர்கள் திரைப்பட முயற்சிகளை முன்னெடுத்தார்கள்.  ஆண்களுடைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் விலகிற தனித் தன்மையுடன் இவர்களுடைய படங்கள் இருந்தன. நிமலாவின் ‘ஈரத்தீ’ குயிலினியின் ‘உப்பில் உறைந்த உதிரங்கள்’ போன்ற பல படங்கள் தனித்து தெரிந்தவை. குறிப்பாக எனது நினைவுகள் சரியாக இருந்தால் தாமரைச் செல்வியின் கதையொன்று நிமலாவின் இயக்கத்தில் ‘வேலி’ என்ற படமாக எடுக்கப்பட்டது இசைப்பிரியாவின் நடிப்பில் மிக அற்புதமான படமாக அது அமைந்திருந்தது. இசைப்பிரியா சினிமாவிற்கான ஒரு தேர்ந்த நடிகை. அற்புதமான உடல் மொழியை வசப்படுத்தியிருந்தார். பொதுவாகவே புலிகளின் சினிமாக்களின் நடிகர்களிடம் ஒரு நாடகத்தின் மேம்பட்ட வடிவமாக திரையைக் கையாளும் போக்கை அவதானித்திருக்கிறேன். ஆனால் இசைப்பிரியா திரை நடிப்பில் வித்தியாசங்களை உணர்ந்து நடித்தவர். போர் எல்லாவற்றையும் தின்று செரித்தது. குறிப்பாக கருணாகரன், தாமரைச்செல்வி போன்றவர்களுடைய கதைகள் பெண் போராளிக் கலைஞர்களால் படமாக்கப்பட்டன.

தாக்குதல் படங்கள் தவிர்த்து போர், போரின் விளைவுகள் என்று ஞானரதன் விட்ட இடத்திலிருந்து புலிகளின் சினிமாவை ஆரோக்கியமான பாதைக்கு நகர்த்தியவை பெண்போராளிகளின் படங்களே ஆகும். துவக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஈர இதயங்களின் தாய்மை நிரம்பிய படைப்புணர்வு அதற்குக் காரணமாயிருக்கலாம்.

புலிகளின் சினிமாவைப் பொறுத்தவரை கடைசிச் சமாதான காலத்தில் அவர்களுக்கு கிடைத்த தென்னிந்தியச் சினிமா உலகத்துடனான நேரடித் தொடர்பும் கணிசமான பங்களிப்பைச் செய்தது. முதலில் வன்னிக்கு வந்தவர் தங்கர்பச்சான், பிறகு மணிவண்ணன், பாரதிராஜா, மகேந்திரன், சீமான் என்று இயக்குனர்களால் இரணைமடுக்குளத்தடியிலிருந்த டாங் வியூ ஹொட்டல் நிறைந்தது. உண்மையில் டாங் வியூ ஹோட்டலை அதிகம் பாவித்தவர்கள் நோர்வேக்காரர்களும், தென்னிந்தியச் சினிமாக்காரர்களும்தான். இவர்களுள் மகேந்திரன் வழிகாட்டல் வகுப்புகளைப் போராளிகளுக்கு எடுத்தார், சிறுகதைகளைத் திரைக்கதையாக்குவது, காட்சிப்படுத்துவது போன்ற சினிமா நுணுக்கங்களை தன் அனுபவத்திலிருந்து மகேந்திரன் போராளிகளுக்குக் கற்றுக்கொடுத்தார். இதன் பயனாக அவருடைய புதல்வர் ஜான் ‘ஆணிவேர்’ என்கிற மிக மோசமான படத்தை எடுக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.  பாரதிராஜா ‘ஆணிவேர்’ படத்தின் முதற்காட்சியை க்ளாப் அடித்து தொடங்கி வைக்கவே வன்னிக்கு வந்திருந்தார். பிறகு சீமான், அவர் ‘எல்லாளன்’ திரைப்பட தொடக்க விழாவிற்கு வந்திருந்தார். ஒரு பக்கம் பெண்போராளிகளிடம் கதையம்சம் கொண்ட படங்கள் நிறைய வந்துகொண்டிருக்க, மறுபக்கமாக பிரம்மாண்டம் என்கிற விசயத்தை நோக்கி விடுதலைப்புலிகளின் சினிமா நகர்ந்திருந்தது. அது தென்னிந்தியச் சினிமாக்காரர்களின் வருகையோடு நிகழ்ந்தது.

விடுதலைப் புலிகளின் சினிமா என்பது பொதுவான நோக்கில் . அமைப்பின் செய்திகளைக்கடத்தும், போராட்டத்திற்கு மக்களைத் திரட்டும், போராட்டத்திற்கு ஆதரவு கோரும், கற்பூரம் எரிப்பதற்காக காட்டிக் கொடுக்கக்கூடாது என்கிற அச்சுறுத்தல்களை விடுக்கும் ஒரு ஊடகமாக இருந்தாலும் அது மக்களுடைய வாழ்வில் – அன்றாட வாழ்வின் அசைவியக்கத்தில் – ஒரு பெரும் பங்கை வகித்தது.

அந்தத் திரைப்படங்களில் பாடல்கள் இளைய தலைமுறையினரால் உல்டா செய்யப்பட்டன. முல்லை யேசுதாசன், ஏரம்பு, சித்தி கடை சாமி, இசைப்பிரியா போன்றோர் தாங்கள் நடித்த திரைப் பாத்திரங்களுக்காக சனங்களிடம் பிரபலம் அடைந்திருந்தார்கள். அவர்களுடைய காட்சிகள் நினைவு கூரப்பட்டன. தங்களுடைய வாழ்க்கை பதிவு செய்யப்படுவதை, தங்களுடைய உரிமைப் போராட்டம் பதிவு செய்யப்படுவதை, தங்களுடைய பிள்ளைகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் கதைகளை அறியச் சனங்கள் இப்படங்களைப் பார்த்தார்கள், போராளிகளைப் போலவே படங்களையும் நேசித்தார்கள்.

விடுதலைப் புலிகளின் சினிமா என்பது உலகளவில் எடுக்கப்பட்ட போர்ப்படங்களுக்கு நிகரான படங்களாக இல்லாவிட்டாலும்கூட, போராட்டத்தின் ஆன்மாவைப் பதிவுசெய்யும் முயற்சியைத் தன்னகத்தே கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் நிதர்சனம் படங்களை எடுத்ததுக்கொண்டிருக்க, விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவு ஆங்கிலத் திரைப்படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டுக்கொண்டிருந்தது. அது சாகசத் திரைப்படங்களை குறிப்பாக போர்ப்படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டது. போர்ப்படங்கள் என்றாலும் அவை பெரும்பாலும் நேரடிப்பார்வைக்கு போர் ஆதரவுப் படங்களாகவே இருந்தன. கிளிப் கொங்கர், வீர சுலைவன் சகோதரர்கள், பிரேவ் ‘ஹார்ட், சேவிங் பிரைவேட் ரயன், பிளட்டுன், புள் மெட்டல் ஜாக்கெட் தொடக்கம் இறுதியில் பிரபாகரனால் முன்மொழியப்பட்டதாகச் சொல்லப்படும் த 300 வரைக்கும் அதன் மொழிபெயர்ப்புப் பணிகள் நீண்டவை. டப்பிங் தொழிநுட்பத்தரத்தில் அல்லது வசன உச்சரிப்பில் சொற்களில் கொஞ்சம் நகைப்பிற்கிடமாக இருந்தாலும் மொழிபெயர்ப்புப் பிரிவு  தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் படங்களை வெளியிட்டபடியே இருந்தது. நான் மேற்குறிப்பிட்ட படங்கள் என்ன வகையானவை என்பதிலிருந்து விடுதலைப்புலிகள் என்ன வகையான கதைக்களனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பினார்கள் என்பது தெளிவாகும்.  போர்க்காலத்தின் தேவையாகவே அவர்கள் அதனைக் கருதினார்கள் என்று நினைக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட இயக்குனர்கள், படங்கள், சம்பவங்கள் அனைத்தும் காலக்கிரமாமாக என்னால் குறிப்பிடப்படவில்லை. அவற்றை காலக்கிரமமாக என்னால் ஆவணப்படுத்தவோ நினைவு படுத்தவோ முடியாது ஏனெனில் நான் ஒரு போதும் இந்தச் செயற்பாடுகளில் தொடர்புபட்டவனாக இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு ஈழத்தமிழர்களிற்கான சினிமா என்பது இதன் தொடர்ச்சியாக இல்லா விட்டாலும் கூட இந்தப் படங்களைக் கவனத்தில் கொண்டே தொடரவேண்டும். போர் நினைவுகள், எங்களுடைய வாழ்வனுபவங்கள் எங்களாலேயே பதிவு செய்யப்படும் காலம் ஒன்றை உருவாக்க வேண்டிய கடமை சினிமா ஆர்வலர்களுக்கு முன்னால் இருக்கிற பணி. விடுதலைப் புலிகளின் காலத்து படங்கள் நிச்சயமாக ஆவணப்படுத்தப்பட வேண்டியவை.

ஆவணப்படுத்துதல் என்று வரும்போது எனக்கு நிதர்சனத்தின் ஆவணக்காப்பகம் நினைவுக்கு வருகிறது. விடுதலைப் புலிகளின் ஆரம்பத்திற்கு பின்னராக அதுவும் குறிப்பாக நிதர்சனத்தின் ஆரம்பத்திற்கு பின்னரான அனைத்து முக்கியமான நிகழ்வுகளும் காட்சிப்பதிவுகளாக சேமிக்கப்பட்டிருந்தன. இலகுவில் வெளியாட்கள் அடையமுடியாதவாறு ஒரு முக்கியமான வீடியோ நூலகமாக அது இருந்தது. பல்வேறு அனுமதிகளின் பின்னரே அந்தத் தொகுப்புகளிலிருந்து காட்சித் துண்டுகளைப் பிரதி செய்வதற்காக வெளியாட்கள் அனுமதி பெற முடியும் என்கிற நிலையிருந்தது. வெளியாட்கள் என்று நான் இங்கே குறிப்பிடுவது விடுதலைப்புலிகளின் வெளிப்பிரிவுகளை.

உண்மையில் ஒவ்வொரு வீரச்சாவு வீடும், ஒவ்வொரு தாக்குதலும், ஒவ்வொரு நிகழ்வும் நிதர்சனம் போராளிகளால் பதிவு செய்யப்பட்டன. அரசியல்துறையின் கீழிருந்த சண்டை அனுபவம் கொண்ட ஒரே ஒரு அலகு நிதர்சனம்தான். ஒவ்வொருமுறை அரசியல்துறை தாக்குதலில் பங்கெடுத்தபோதெல்லாம் நிதர்சனப் போராளிகளே அரசியல்துறை அணிகளை வழி நடத்தியிருக்கிறார்கள். உண்மையில் நிதர்சனத்திடமிருந்த ஆவணக்காப்பகம் ஈழப்போராட்டத்தின் மிகப்பெரிய சாட்சியம். அது அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது இராணுவத்தினரால் புலனாய்வுத் தேவைகளுக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் எனக்குத் தெரிந்து என்னுடைய அறிவுக்கெட்டியவரை எப்படி வெளிநாட்டில் வெளியாகிற ஐபோனிலிருந்து, சாப்பாட்டுக்கடை அடிக்கிற துண்டு நோட்டீஸ் வரை வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டதோ. அதைப் போல வன்னியின் வெளியீடுகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு கொண்டு வரப்பட்டன. அப்படிக் கொண்டு வரப்பட்டவை வெளிநாடுகளில் எங்கேயோ பரணில் கட்டாயம் கிடக்கும். ஆனால் அவற்றையெல்லாம் தொகுத்து எண்ணிம வடிவில் சேகரிக்கவேண்டும். குழு மோதல்களுக்கு மேலாக விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள், வன்னியுடன் தொடர்பென்பதை பதக்கமாக அணிந்து நடந்தவர்கள். நன்றிக்கடனுக்காகவாவது இதனைச் செய்யவேண்டும்;.

த.அகிலன் –கனடா

த.அகிலன்

(Visited 231 times, 1 visits today)
 
த.அகிலன்

கொட்டைப்பாக்குக் குருவிகள்-பத்தி-த.அகிலன்

    நிரூபாவின் “சுணைக்குது” புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு சின்னையா அண்ணையும், பெற்றியும், ஒரு குரங்கும் நினைவுக்கு வந்தார்கள். நிரூபாவின் புத்தகத்திலிருந்த சொற்களிலிருந்து மனம் தாவிக்கொண்டேயிருந்தது சின்னையாண்ணை கொண்டுவரும் குரங்கைப் […]