வணக்கம் நடு வாசகர்களே ,
ஈழத்து இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடுதல் அல்லது அவர்களை அடுத்த கட்ட சந்ததிக்கு கடத்துதல் போன்ற விடயங்களில் சமகாலத்தில் மந்தமான போக்குகள் காணப்படுவதை அவதானித்தோம். அதே வேளையில் நடுவின் அடுத்த கட்ட நகர்வாக இரண்டு விடயங்களை ஆசிரியர் குழுமத்தின் பலத்த வாதப்பிரதிவாதங்களின் முடிவில் நடைமுறைப்படுத்துகின்றோம்.
01 ஈழத்து இலக்கியவாதிகளின் பிறந்த நாளை காய்த்தல் உவத்தல்களுக்கு அப்பால் மாதத்தில் ஒருமுறை நடுவின் ஊடாகக் கொண்டாடுதல்.
02 நடுவை மாதாந்திரியாகப் பிரசுரம் செய்தல்.
முதலாவது விடயம் புரட்டாசி மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்துகின்றோம். புரட்டாசி மாதத்தில் இன்று பிறந்தநாளைக் காண்கின்ற தாயகத்தின் கிளிநொச்சியை சேர்ந்த கவிஞர் கருணாகரனை நடு இணைய சிற்றிதழ் கொண்டாடுகின்றது . அரசியல் பத்தி எழுத்தாளர் ,இலக்கிய செயற்பாட்டாளர், கவிஞர் என்று பன்முக ஆளுமைகளுடன் சமகாலத்து இலக்கிய வெளியில் தீவிரமாகக் கவிஞர் கருணாகரன் இயங்கி வருகின்றார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடியவாறே “இவர்களைக் கொண்டாடுவோம் ” என்ற புதிய பகுதியின் ஊடாக நடு தனது புதிய பாதையில் காலடி எடுத்து வைக்கின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நாடி நிற்கின்றோம். நன்றி.
இந்தப் பாதகையை அழகுற வடிவமைப்புச் செய்திருக்கும் தாயகத்தைச் சேர்ந்த அனோஜன் சந்திரசேகருக்கும் மிக்க நன்றி.
நடு குழுமம்
000000000000000000000000000000