விழிகள்-கவிதை-சந்திரா ரவீந்திரன்

விழிகள்

சந்திரா ரவீந்திரன்

பேரிருளில் புதைந்து கிடக்கிறது
சுவர்களற்ற அறை!
ஓசைகளில் வாழ்கிறது
உருவமிட முடியா மனம்!
உணர்வுகளைப் பிசையும்
பெயரறியா வாசனைகள்!
காலடியில் அதிரும் பூமி.
விழித்தபடியே தூங்கும்
ஒளியறியா விழிகள்!

கணங்களை உயிர்ப்பிக்கும்
ஸ்பரிசங்கள்!
இதயத்தின் கோடியில்
சுடரும் ஒளித்துளிகள்
அழுவதும் சிரிப்பதுமறியா
திறந்த உதடுகள்
காதுகளைச் சுற்றிக்கிடக்கிறது
அவளறியாத உலகம்!

நினைவெனும் தூரிகை
இருள் வர்ணக்கலவை
காலமெலாம் மனம் வரையும்
உருமற்ற ஓவியங்கள்!

வியப்புகளின் சமுத்திரம்;
வேடிக்கைகளின் பெருநிலம்
சூரியன் அற்ற வானம்
கறுப்பு நட்சத்திரங்கள்
கற்பனை அம்புலி
கவிதைகளால் நிறைகிறது
அவள் உலகம்!

சந்திரா ரவீந்திரன்-ஐக்கிய இராச்சியம்

சந்திரா ரவீந்திரன்

 

 445 total views,  1 views today

(Visited 181 times, 1 visits today)