பூ தேடும் வண்டு
உணவுக்காக
பூவைத் தேடியலையும்
வண்டுகளுக்கு
மத்தியில்..,
பூவும் தேடியலைகின்றன
வண்டுகளை..,
தன் மகரந்தச் சேர்க்கைக்காய்..!!
சாரைசாரையாய்
வடஹிந்தியர்கள்
வேலையை விட்டு,
மொத்தமாய்த் தன்
சொந்தவூர்ப்போய்ச்
சேர்ந்தபின்,
அதே
அடிமாட்டு விலைக்கு
அடிமைத்தொழிலாளர்
கிடைப்பாராவெனும்
எதிர்ப்பார்ப்பில்
முதலாளிகளிருக்கையில்..,
நிம்மதியாய்
எப்படியமர்வதந்த
முதலாளியிருக்கையில்..?!
எம்
தாய்த் தமிழகத்தின்
கூலித் தொழிலாளர்கள்,
அன்றன்றைய
வருமானத்தில்
அன்றன்றைய நாட்களைக்
கடத்திக்கொண்டிருந்த வேளையில்..,
இருந்தவேலையையும்
இழந்த பின்பு
அடுத்த வேளை உணவுக்காய்..,
அடுத்த வேலை தேடி
அலைகின்றனர்..!!
(பூ – தேடும் வண்டுமுண்டு..!
பூ தேடும் – வண்டுமிங்குண்டு..!!)
00000000000000000000000000000
சவர்க்காரம்..!
குளியலறைதான் என் உலகம்!
சவப்பெட்டி போன்று
என் உடலளவுக்கும் சற்றுப் பெரிதாய் வசிப்பிடம்..!
கால்நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும்
வீட்டிலுள்ள அனைவருக்கும்
நானொருவனேப் போதும்..
இப்போது தனித்தனி!
என் வாடிக்கையானப் பயன்பாடென்பது..,
ஒருநாளைக்கு
ஒருமுறை..
சில நாட்களில் மட்டும்
சில முறைகள்..
பக்கத்து வீடுகளில்
பருவ வயதினரெனில்..,
பல முறைகள்..
எப்படிப் பார்த்தாலும்,
இருப் பயன்பாடுகளுக்கிடையில்
என்னை
உலர்த்திக்கொள்ள
ஓய்வு கிடைக்கும்..!
இப்போதோ..,
எப்போதும் ஈரமாய்…
கொராணா பயம்!
0000000000000000000000
முல்லைக்குத் தேர் தந்தானாம் பாரி..!!
கண்ணசைவுக்காய்க்
காத்திருக்கும்
அத்தனைப் பரிவாரங்கள் உடனிருந்தும்..,
முல்லைக்குத் தேர் கொடுத்தாராமொரு
முட்டாள் மன்னன்!
சாடை காட்டினாலே
சடுதியிலொருப்
பந்தலைப்
போட்டிருப்பர்!
அதை விடுத்து,
இப்படியெல்லாம்
செல்வத்தை அழித்தப்
பாவத்திற்குத்தான்..,
பின்னால் வந்த மன்னன் கொடுக்கிறான்..,
இல்லாத
பல்கலைக்கு
ஆயிரம்கோடி
இனாம்..!!
ப்ரியா வெங்கடேசன்-இந்தியா