தலைவனது மரணம்
அவன் பல நண்பர்களை
உருவாக்குவதில்
வல்லவனாகயிருந்தான்,,,,,,
எதிரிகளின் பாசறைகள் தோறும்
நண்பர்களுக்கான
விதைகளை தூவி விட்டான்,,,,!
எவரிடமும் வளைந்து கொடுக்காத
ஆயுதங்கள்,
அவர்களிடம் இருப்பதாக
தட்டிக் கொடுத்தான்,,,
நாள்பட நாள்பட
அவனைச் சுற்றி நண்பர்கள்
நிறைந்து கொண்டே இருந்தார்கள்,,,,
எதிரிகளின் பாசறைகள்
பாழடைந்தன,,,,,
அவன்
எதிரிகளேயற்ற சாம்ராஜ்யத்தை
ஆளப் போவதாக
மார்தட்டினான்,,,,,!
ஒரு நாள்….
துர்கனவுகள் நிறைந்ததொரு
தூக்கத்தில்
அவனது மரணம் நிகழ்ந்தது.
அது ஒரு
அகால மரணமாக
இருந்தது!
00000000000000000000000000000000000000
மலையின் லயம்
தம் மக்களின்
கனவுகளை லயித்தபடி
நின்றது,
அந்த மலை……
அதன் நிமிர்வின்
இருமாப்பில் ஒரு லயம்,,,,
இடைவிடாது கலைந்து சருகாகும்,
கனவுகளின்
விடிவிலா கதைகள்
அதனிடம் ஏராளம்,,,,!
ஆங்காங்கே
துளிர்விடும் பூக்களை
தட்டிக் கொடுத்தபடி
அது,,,,,,,பொறுமையுடன்
காத்திருந்தது,,,,!
காட்டுத் தீயை கடந்த படியும்,
தூர்தல்களை துடைத்த படியும்,,,,
அது
தன் மக்களின் ஆவணமாய் நின்றது.
லயிப்புடன் நிற்கும் மலை,
தன்னை உரசிச் செல்லும்
காற்றின் காதுகளில் மட்டும்,
விடாது பாடிக் கொண்டேயிருந்தது….
விடுதலையின் பாடல்களை,,,!
தம் மக்களின்
கனவுகளை லயித்தபடி
நின்றது மலை,,,,,,!
ஜெயதர்மன்−இலங்கை