நாம் உணர்ந்து செயற்படுவோம் !-கவிதை-எம்.ஜெயராமசர்மா

எம் . ஜெயராமசர்மா

பழைமையினை பார்ப்பதற்குப்
பலருக்கும் பிடிப்பதில்லை
பழமையது அருமையினைப்
பலருமே அறிவதில்லை
பழமையினை எதிரியாய்
பார்க்கின்ற காரணத்தால்
பலபயன்கள் இழந்துநிற்கும் பாங்கினையும் பார்க்கின்றோம் !

இயற்கையினை வாழ்வாக்கி
இயங்கியது பழமையது
இதனாலே ஆரோக்கியம்
எழிலுடனே விளங்கியது
நாட்டுப்புறம் என்றெண்ணி
நல்லவற்றை ஒதுக்கியதால்
நம்வாழ்வில் நட்டம்பல நாளுமே வளர்கிறதே !

விஞ்ஞானம் எனச்சொல்லி
விவரீதம் வந்திருக்கு
விளைச்சிலினைப் பெருக்குதற்கு
விதைக்கின்றோம் விஷமருந்தை
பொய்யில்லா வகையினிலே
விளைச்சல்கண்ட பூமியெலாம்
பொல்லாத மருந்துடனே போராடி மாய்கிறதே !

காய்கறியைப் பெருக்குதற்கு
கண்டுவிட்ட விஞ்ஞானம்
காய்பெருக்க வைத்துவிட்டு
கால்பறித்து நிற்கிறதே
நோய்நொடிகள் பலதந்து
நொய்யும்படி செய்யுமிந்த
வேதனைகள் பார்த்தபடி வெந்துநின்று வெதும்புகின்றோம் !

நாகரிகம் எனும்பெயரால்
நம்வீட்டில் புகுந்துவிட்ட
நாமறியா உணவுவெல்லாம்
நம்முள்ளே செல்கிறது
சென்றுவிட்ட உணவெல்லாம்
சீரிழக்கச் செய்துநின்று
குன்றிவிடச் செய்வதனை
என்றுதான் உணருவதோ !

பலகடைகள் பலவுணவு
பல்வேறு வடிவங்களில்
பாங்காக வலம்வந்து
பலரையுமே மயக்கிறதே!
நலன்பற்றி நினையாமல்
நயம்பற்றி எண்ணுவதால்
நலன்கெட்டு போவதற்கு
நாமுடந்தை ஆகுகின்றோம் !

பண்டிகைகள் வந்துவிட்டால்
பட்சணங்கள் செய்திடுவார்
பட்சணங்கள் அத்தனையும் பக்குவமாய் அமைந்திருக்கும்
இப்போது பட்சணங்கள்
எத்தனையோ வருகிறது
அத்தனையும்
ரசாயான கலவையாய் அமைகிறதே !

கூழ்குடித்தோம் மோர்குடித்தோம்
குடல்நோய்கள் வரவில்லை
பழஞ்சோற்றை உண்டாலும்
பழுதெம்மை அண்டவில்லை
விலைகொடுத்து பலவற்றை விருந்தெனவே உண்ணுகின்றோம்
மறுநாளே வைத்தியரை
வலம்வந்து நிற்கின்றோம் !

நெல்லரிசிச் சோறுண்ண
நிம்மதியே இல்லையென்று
வெள்ளைநிற உணவெல்லாம்
வீட்டில்வாங்கி வைக்கின்றோம்
நல்லதெல்லாம் மாட்டுக்கு
நாம்கொடுத்து விட்டுநிதம்
பொல்லாத உணவையெல்யாம்
பொறுக்கிவைத்து உண்ணுகின்றோம் !

உயிர்ச்சத்து அத்தனையும்
உதறிவிட்ட உணவுகளை
உயர்வாக எண்ணிநிதம்
ஒழுங்காக உண்ணுகின்றோம்
நோய்வந்த பின்னாலே
நூறுமுறை அழுகின்றோம்
யார்வந்து சொன்னாலும்
நம்குணமோ மாறவில்லை !

பாட்டிதந்த உணவெல்லாம்
பறக்கவிட்டு விட்டதனால்
பருவம்வரும் முன்னாலே
பலநோய்கள் வருகிறதே
நாட்டார்கள் காட்டார்கள்
காட்டிவைத்தை முறையாவும்
நம்வாழ்வை வளம்படுத்தும் என்பதனை மறந்துவிட்டோம் !

பழமையென்னும் அத்திவாரம்
பலமளிக்கும் என்பதனை
உணருகின்ற நிலையெம்முள்
உருவாகி வரவேண்டும்
விஞ்ஞானம் நாகரிகம்
விந்தைபல செய்தாலும்
நம்வாழ்வில் அதன்பெருக்கை
நாமுணர்ந்து செயற்படுவோம் !

எம் . ஜெயராமசர்மா – அவுஸ்திரேலியா

எம் . ஜெயராமசர்மா

(Visited 58 times, 1 visits today)
 
எம் ஜெயராமசர்மா

மெஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி-கட்டுரை-எம் ஜெயராமசர்மா

இலக்கியம் என்பதற்குப் பலவிதமான விளக்கங்கள் பலராலும் கூறப்படுகிறது. இலக்கு + இயம் இலக்கியம். அதாவது ஒரு இலக்கை நோக்கமாகக் கொண்டதுதான் இலக்கியம் என்பதாகும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்றும்சொல்லப்படுகிறது.உணச்சியுடன் […]