வஸ்ஸிகா விய புப்பானி
மத்தவானி பமுஞ்சதி
ஏவங் ராகஞ்ச தோஸஞ்ச
விப்ப முஞ்சேத பிக்கவோ…..
ஓ……… பிக்குகளே………. மல்லிகைச் செடி வாடிய மலர்களை உதிர்த்து விடுவதைப் போல் ஆசையையும் துவேசங்களையும் உதிர்த்து விடுங்கள்……….
(தம்மபதம் 18. 377- பிக்குவக் கோ)
00
இன்று தம்பிலாக்கள் அதாவது காக்காமார்கள் எனப்படும் முஸ்லிம்கள் கைகளில் நமது பௌத்த சிங்கள நாடு பறிபோய்விட்டது. அவர்கள் நமது பொருளாதாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். தம்மினத்தைப் பெருக்கி விட்டார்கள். நமது சிங்களப் பெண்களை மதம் மாற்றிவிட்டார்கள். தனியாக ஷரிஆ சட்டங்களை இயற்றுகின்றார்கள். மிருக பலி- பலதாரமணம்- தலாக்- ஹலால் என்றெல்லாம் தம்மிஷ்டப்படி நடக்கிறார்கள். உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும்…
-ஞானதார தேரர் அவர்கள்.
எல்லாம் வீணான குற்றச் சாட்டுக்கள். ‘நாட்டின’பாதுகாப்புக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. முஸ்லிம்கள் நாட்டுப் பற்றாளர்கள்.
-ரமிஸ் ரக்கீப்.
பாருங்கள் சிங்கள மக்களே. இந்தத் தம்பிலாக்கள் உலமா சபை – ஆலிம் சபை -சூறாசபை என்றெல்லாம் நன்கு திட்டமிட்டு அரபு வசந்தப் பணத்தில் தீவிரவாதம் வளர்க்கிறார்கள். மத்ரசாக்களிலும் பள்ளிவாயில்களிலும் பயங்கரவாதம் போதிக்கிறர்கள்.
-அத்தே விகார ஹாமி தேரர்.
-அவரது கூற்றில் உண்மையில்லை. புத்தபெருமான் ஒரு போதும் இனக்குரோதத்தைப் போதிக்கவில்லை. பௌத்தம் அகிம்சையையே போதிக்கிறது. முஸ்லிம்களால் இந்நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் நமது நண்பர்கள். கருணையும் மனிதநேயமும்தான் பௌத்தத்தின் பாதை.
-இனாமலுவே கருணாஹிமி தேரர்.
– தம்பிலாக்கள் இரகசியமாக எமது நாட்டில் ஜிஹாத் படை உருவாக்குகின்றனர். ஸ்ரீலங்காவை ஜெய்லான் என மாற்றத் திட்டமிட்டுள்ளனர். சிங்கள பௌத்த மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுகிறார்கள்.
-ஞானதார தேரர் அவர்கள்.
-ஜனாதிபதி அவர்கள் தலையிட வேண்டும்…
-ஆலிமு சபை.
– இந்தக் கறுப்பு கோணி பில்லாக்கள் ஏழு கல்யாணம் முடித்து ஒவ்வொருத்தியும் பதினாலு பிள்ளைகளைப் பெறுகிறார்கள். ஆனால் எமது சிங்களப் பெண்களோ இரண்டொரு பிள்ளைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர். குருநாகலில் ஒரு பௌத்த விகாரையை பள்ளிவாயிலாக மாற்றி விட்டனர். முஸ்லிம்களுக்கு இது தாய்நாடு அல்ல. இது உண்மையான பௌத்த சிங்கள நாடு. வியாபாரம் செய்ய வந்த தொப்பி மரக்கலயாகளே.யாவரும் வெளியேறி ஓடிவிடுங்கள். இனி இந்த தம்பிலாக்கள் எந்த ஒரு பௌத்த சிங்களவன் மீதும் கைவைக்க முடியாது.
-ஜாதிக பிக்கு பெரமுன சங்கமய.
-ஜனாதிபதி அவர்கள் தலையிட வேண்டும். நாட்டு நிலமை சீராக தொழுது வணங்கி குனூத் ஓதுங்கள்.
-ஆலிமு சபை.
-பாருங்கள் பௌத்த மக்களே…….. இன்று கொழும்பு கண்டி அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் சனத் தொகை கூடிவிட்டது. இம்மாவட்டங்களில் காக்காமாரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் சிங்கள , தமிழரை விட 10வீதம் அதிகரித்துச் செல்கிறது. நாம் இதைக் கவனியாது விட்டால் எமது சந்ததி வாழ ஒரு அங்குல இடமும் இந்த பௌத்த நிலத்தில் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.
-அத்தே விகார ஹாமி தேரர்.
-பள்ளிவாசல்களைத் தாக்குகிறார்கள். மேலிடத்தில் முறையிட்டும் தீர்வு கிட்டவில்லை. 3 நாட்கள் இடம்பெற்ற கலவரத்தில் கோடிக்கணக்கான சொத்திழப்களும் 4 பெறுமதிமிக்க உயிர்களும் பறிபோயின. எனினும் எதற்கும் நீதி கிடைக்கவில்லை. நீதிவானாக இருப்பதில் வெட்கப்படுகின்றேன்…
-ரமிஸ் ரக்கீப்.
பாமர முஸ்லிம்களுடன் எமக்குப் பிரச்சினை இல்லை. முஸ்லிம் மத அடிப்படைவாதிகளே எமது இலக்கு. இவர்களே மதப் போதனை என்ற போர்வையில் போருக்குப் பயிற்சியளிக்கின்றனர். ஜமாஅத் என்ற பேரால் வெளிநாடுகளுக்கு அழைத்துப் போகிறார்கள். அங்கு ஆயுதப் பயிற்சி நடக்கிறது. திரும்பி வரும் போது போதைப் பொருள் கொண்டு வருகிறார்கள். இதற்கு நமது சிங்கள அரசியல்வாதிகளும் உதவுகிறார்கள்.
– ஞானதார தேரர் அவர்கள்.
-ஜனாதிபதி அவர்கள் தலையிட வேண்டும்…
-ஆலிமு சபை.
இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை. சிறுசிறு தகராறுகளை பெரிதுபடுத்தத் தேவையில்லை. முஸ்லிம் நட்புறவுச் சங்கத்தின் தலைவரே நம் ஜனாதிபதிதான்.
-சிரேஷ்ட அமைச்சர் அப்துல் மாதர் ஹாஜியார்.
-பிக்குகள் கண்ணியமானவர்கள், ஒரு சில பிக்குகளே தீவிரமானவர்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படல் வேண்டும்.
-அமைச்சர். றிபாத் ஸரியுதீன்.
– தலைவரைப் போல இனத் துவேச உரைகளை விட்டுக் கொண்டிருக்காமல் உள்ளிருந்து அழுத்தம் கொடுப்பதிலும் உட்சென்று நடவடிக்கை எடுப்பதிலும் எமது கட்சித் தலைமை செயற்பட்டு வருகிறது..
-தேசியத் தவிசாளர் நிதாவுல்லாஹ் அவர்கள்.
– விரைவில் இங்கு விஜயம் செய்யவுள்ள பர்மிய பிக்கு விராது ஹிமிய்ன் இயக்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளோம். அவரது 568 இயக்கம் புனிதமானது. மத அடிப்படையை மதமாற்றத்தை எதிர்ப்பது. தர்ஹாடவுன் அளுத்கம அசம்பாவிதங்களுக்கு நாம் பொறுப்பல்ல..
– அத்தே மைத்ரீ தேரர்.
-ஜனாதிபதி அவர்கள் தலையிட வேண்டும்…
-ஆலிமு சபை.
-காருண்ய விகாரைக்கு முழுவதும் டைல்ஸ் ஒட்டிக் கொடுத்து சுற்று மதிலும் கட்டிக் கொடுத்த என் வீட்டை தாக்கி கொள்ளையடித்து விட்டனர். அந்த விகாரைக்கு பொறுப்பான மதகுருவே தாக்குதலுக்கு சில வெளியூர் ஆசாமிகளுடன் முன்னின்றார்.
– பிரபல வர்த்தகர் ரிள்வான் மக்தூம் ஹாஜியார்.அளுத்கம வர்த்தகர் சங்கம்.
– விடயம் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது. தூதுவர் ராஜதந்திரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. அரசிலிருந்து வெளியேறுவதில் பலனில்லை..
-ரமிஸ் ரக்கீப்.
– பர்மிய முஸ்லிம் மக்களின் படுகொலைக்குக் காரணமான பிக்கு விராதுவை நாட்டுக்குள் வர அனுமதிக்க் கூடாது…
-சிறிலங்கா முஸ்லிம் சங்கம்.
– ஒரு பௌத்த தேரரை ஒரு பௌத்த நாட்டுக்குள் வரக் கூடாது என உத்தரவிடுவதற்கு யார் இந்தச் சோனகர்கள்? இது என்ன சவுதி அரபியாவா……. ஈரானா..?
– ஜாதிக பிக்கு பெரமுன சங்கமய.
-ஜனாதிபதி அவர்கள் தலையிட வேண்டும்… குனூத் ஓத வேண்டாம்.
-ஆலிமு சபை.
– மத அடிப்படை வாதம் ஒழிக்கப்பட வேண்டும். கிழக்காசியாவில் பௌத்த மா கண்டம் உருவாக வேண்டும். பௌத்த மதம் ஒன்றே பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்
-பர்மிய பிக்கு விராது தேரர்.
– இந்த மாநாட்டிலே ஏழாயிரம் பிக்குகள் கூடியிருக்கின்றர். இங்கு கூறப்படும் போதனைகளைக் கேட்டுச் சென்று உங்கள் ஊர் விகாரைகளில் பரப்புரை செய்யுங்கள். பத்து லட்சம் சுத்தமான பௌத்த வாக்குகளே எமது இலக்கு. அதன் மூலம் பௌத்த ஜனாதிபதியை நாமே தீர்மானிப்போம். தேசியச்சிங்களவர், சிங்களத் தமிழர்கள், சிங்களக் கிறிஸ்தவர்கள், சிங்கள முஸ்லிம்கள் என்றே அனைவரும் பதியப்படல் வேண்டும். பௌத்த சிங்கள சட்டம் மட்டுமே அமுலாக்கப்படல் வேண்டும்;
-ஞானதார தேரர் அவர்கள்.
-ஜனாதிபதி அவர்கள் தலையிட வேண்டும்…
-ஆலிமு சபை.
00
– ”இதெல்லாம் ஒரு சிறுகதையா…?” என்று முகத்தில் வீசினார் பத்திரிகை ஆசிரியர்.
– இதெல்லாம் ஒரு சிறுகதையல்ல. பெரும்பெரும் கதைகள்.
என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினேன்.
(யாவும் கற்பனையல்ல.செய்தி ஊடகங்களே.)
தீரன் நௌஷாத்-இலங்கை