ஒரு சொட்டுத் தேன்-சிறப்பு எழுத்துகள்-அ பாலமனோகரன்

அ பாலமனோகரன்காடு இருண்டு கிடந்தது.  அடிக்கடி பெருமழை பெய்ததால் மரங்களெல்லாம் ஈரங்குடித்துக் கறுத்துப்போய்க் காணப்பட்டன. மாரிகாலந்தான். இருப்பினும் கந்தனுடைய முகத்திலும் உடலிலும் வியர்வை ஆறாக வழிந்து கொண்டிருந்தது. வெறிபிடித்தவன் போலக் கோடரியைக் கையில் ஏந்தியபடி அவன் செடிகளையும் புதர்களையும் விலக்கியவாறு  காடேறிக் கொண்டிருந்தான்.

அவனுடைய நடையில் வேகமிருந்தாலும் அவன் விழிகள் மட்டும் எந்தவொரு மரத்தையும் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தன. கலங்கிச் சற்றுச் சிவந்து போயிருந்த அவ்விழிகளில் தீவிரம், ஏமாற்றம், சோகம் இவையெல்லாம் குழம்பிப் போய்க்கிடந்தன. ஈரஞ்சுவறி இளகியிருந்த பாதங்களில் சுருக்கென்று தைக்கும் முட்களையும் பொருட்படுத்தாமல்  அவன்  எதையோ தேடிச் சென்றுகொண்டிருக்கிறான். ஆனால் அவன் தேடி வந்ததன் சுவடு எந்த மரத்திலுமே காணப்படவில்லை. ஆனாலும் அவன் சோர்ந்துவிடவில்லை. எதிரே குறுக்கிட்ட காட்டாற்றில் முழங்காலளவுக்கு இறங்கி முகத்தில் சில்லிடும் நீரை அடித்துக் கழுவி, இரண்டு வாய் நீரையும் பருகிக்கொண்டு ஆற்றைக் கடந்து அப்பாற் கிடந்த காட்டினுள் நுழைகிறான்.

000000000000000000000000000000000

வவுனியா மாவட்டத்தின் காடுகளில் காணப்படும்  இந்தக் காட்டாறுகள் கோடையிலே வரண்டுபோய் மணற்படுக்கைகளாகக் கிடக்கும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குளங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால் மாரிகாலம் வந்தாலே காய்ந்துபோய்க் கிடக்கும் காட்டாறுகள்   சிலமணிநேரம் மழை வீழ்ந்ததுமே   கட்டுக்கடங்காமல் பிரவகிக்கும்.  குளங்கள் நிறைந்து தளும்பும். ஆனால் இச்சிறு குளங்களையொட்டி அமைந்திருக்கும் சின்னக் கிராமங்களிலுள்ள விவசாயிகளின் வாழ்க்கையோ மாரியில் வறண்டுவிடும்.

மார்கழி பீடைபிடித்த மாதம் என்பர்.  மனைவியின் ஒரே நகையான தாலிக்கொடி, வித்துக்கென்று வைத்திருந்த நெல், அங்குமிங்கும் சில்லறையாக வாங்கிய கடன் எல்லாமே மாரியில் குடிசைகளை விட்டு வெளியேறிவிடும். நெல், அடைவுவைத்து எடுத்த பணம் அத்தனையையுமே  அவரவர் வயல்களுக்குள் புதைத்துவிட்டு அண்ணாந்து  வானத்தைப் பார்த்த வண்ணமே இருப்பார்கள். கோதுமை மாவும், மரவள்ளிக் கிழங்கும் வயிறுகளை அரைகுறையாக நிரப்பிக் கொண்டிருக்கும்.

வயல்கள்  ஒருபடியாக  விளைந்து மாசி, பங்குனியில் அறுவடை முடிந்ததும் கைக்குவரும்   பணத்தைக்கொண்டு கொடியை மீட்பார்கள், கடனை அடைப்பார்கள். வருடப் பிறப்பு வந்தால்  ஒருசில துணிமணிகள்,  இரண்டு போத்தல் சாராயம்  இவற்றுடன் வந்த பணம் சென்றுவிடும். வைகாசி போய் ஆனி வருவதற்குள் மீண்டும் கடன், அடைவு என்ற ரீதியில் சகடயோகமாகச் சுழன்று கொண்டிருக்கும்  வாழ்க்கை.

இடையில் தப்பித்தவறி வானம் பொய்த்துவிட்டால் அல்லது தண்ணியைப் போட்டுவிட்டுச் சில்லறை அடிதடியில்  இறங்கி  வழக்குக் கணக்கென்று வந்துவிட்டால் அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் பழைய வாழ்க்கை வட்டத்தினுள் நுழைவதென்றால் மிகவும் சிரமந்தான்.

கந்தனும் இவர்களில் ஒருவன். அவனுக்கும் மனைவி  மக்களுண்டு. பிரச்சனைகளுண்டு.காலை நடந்த நிகழ்ச்சியை நினைத்தாலே கந்தனுக்கு நெஞ்சு குமுறியது.

அவனுடைய நான்காவது குழந்தையான ராணிக்கு நான்கைந்து நாட்களாகவே சுகவீனம். எதைத் தின்றாளோ தெரியவில்லை. ஒரேயடியாக வயிற்றால் போகத் தொடங்கிவிட்டது.   இரண்டொருநாள் அதையும் இதையும் கொடுத்துப் பார்த்தாள் கந்தனுடைய மனைவி. குணமில்லை.   கடந்த இரவு முழுவதும் குழந்தைக்கு நினைவேயில்லை.

விடியற்காலையில்  கந்தன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு அயற்கிராமத்துப் பரியாரியாரிடம் ஓடினான். அவர்  குழந்தையின் கையைப் பிடித்துப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டு,  ஒரு தூளைக் கையிலெடுத்து  ’இதை மூண்டு நேரம் சுத்தமான தேனிலை குடு,  நாளைக்குத்தான் பொடி தப்புமோ இல்லையோ எண்டு சொல்லலாம்!’  என்று கூறியபோது கந்தனுக்கு வயிற்றை என்னவோ செய்தது.

இருப்பினும் மிகவும் நம்பிக்கையுடன் மருந்தை வாங்கிக்கொண்டு சந்தியிலிருக்கும் சங்கக்கடையருகில் வந்துதான் அவனுக்குத் தன்வீட்டில் மருந்துக்குக்கூட தேனில்லை என்பது நினைவுக்கு வந்தது. நான்கு மாதங்களுக்கு முன்னர் அவனுடைய குக்கிராமத்திலே தேனாறு பாய்ந்தது. அந்நாட்களில் கந்தன் தினமும் தன் ஊரவருடன் சேர்ந்து காட்டுக்குச் செல்வான். கிடைக்கும் தேனைப் பிழிந்து பகிர்ந்து கொள்வார்கள். அந்தமுறை கந்தனுடைய வேலிக்கு முட்கம்பி அவசியமாகத்  தேவைப்பட்டது.

எனவே தனக்குக் கிடைத்த முப்பது போத்தல் தேனையும் அப்படியே மொத்தமாக அயற்கிராமத்தில் கடை வைத்திருக்கும்  ஒருவருக்கு  விற்றுவிட்டான். … சை! மருந்துக்குக்கூட ஒருசொட்டுத் தேன் வைக்காமல் விற்றது எவ்வளவு பிழையாய்ப் போயிற்று! ….. என்று சிந்தித்த வண்ணம் நடந்து கொண்டிருந்த கந்தனுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. அவனிடமிருந்து தேனை மொத்தமாக வாங்கிக் கொண்டவரின் கடை அருகில்தானே இருக்கின்றது. மருந்துக்குக் கொஞ்சம் தேன் கேட்டால் நிச்சயமாகக் கொடுப்பார் என்று எண்ணியவன்,  வேகமாகச் சென்று அக் கடை வாசலில் ஏறினான்.

கல்லுப்பிள்ளையார் போல்  உட்கார்ந்திருந்த கடை முதலாளியின் பின்னே உயரமான   விறாக்கிகளில் தேன் போத்தல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட கந்தனின் மனம் ஆறியது.

‘ புள்ளைக்குச் சுகமில்லை முதலாளி! மருந்துக்குக் கொஞ்சத் தேன் வேணும்!’

‘ ஒரு போத்தல் பன்னிரண்டு ரூபாய் கந்தன்!’

கந்தன் திகைத்துப் போனான்.  என்னிடமிருந்து  ஒருபோத்தல் நான்கு ரூபாவிற்குக் கொள்வனவு செய்த தேன் இப்போ பன்னிரண்டு ரூபாவா!’ அவனால் பேசவே முடியில்லை.

‘ எத்தினை போத்தில் வேணும் கந்தன்?’

‘ இப்ப கையிலை ஒருசதமும் இல்லை முதலாளி! புள்ளைக்கு மருந்து குடுக்க ஒரு சின்னக் குப்பிப் போத்திலுக்கை   ஐஞ்சாறு சொட்டுத் தேன் தந்தாக் காணும்!’ கந்தன் கூனிக் குறுகிக் குழைந்தான்.

‘ நான் கடன் குடுக்கிறேல்லை எண்டு உனக்குத் தெரியுந்தானே கந்தன்!’

‘ முதலாளி! கொஞ்சம் தயவு பண்ணுங்கோ!’

ஆனால் அந்த முதலாளி அதற்குமேல் எதுவுமே பேசவில்லை. அவன் அங்கு நிற்பதையே உணராதவர்போல்   பழைய பத்திரிகை  ஒன்றில் மூழ்கினார்.

கந்தன் ஊரை நோக்கி நடந்தான்.  தோளில் துவண்டு கிடந்த குழந்தையின் உடல் தகித்தது.  அதைவிட அதிகமாக அவன் நெஞ்சு கொதித்தது.

கிராமத்தை அடைந்ததும் மனைவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு, அங்குள்ள   ஆறேழு குடிசைகளுக்கும் சென்றான்.   ஆனால்  அங்கும்  ஒரே பதில்தான்.

‘ இஞ்சையும் ஒரு சொட்டுத் தேனும் இல்லை கந்தன்! உன்னோடைதானே நாங்களும் தேன் வித்தனாங்கள்.  மருந்துக்குக்கூட  இல்லாமல் பொடியள் குடிச்சிட்டுதுகள்!’

தேனாறு பாய்ந்த அந்தக் கிராமத்தில் மருந்துக்குக்கூடத் தேனில்லை.  குமுறும் நெஞ்சுடன் திரும்பிவந்த கந்தன் தாயின் மடியில் வதங்கிப்போய்க் கிடந்த குழந்தையின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான். நெருப்பாய்ச் சுட்டது. கால்கள் சில்லிட்டுப் போய்க் கிடந்தன.

ஒன்றுமே பேசாமல் கோடரியையும் எடுத்துக் கொண்டு நண்பகல் நேரம் காட்டில் நுழைந்தவன்  கிராமத்தை விட்டு வெகுதூரம் வந்;துவிட்டான். பொழுது சாய்வதற்கு இன்னும் அதிக நேரமில்லை. தேன்  இன்னமும் கண்ணிற்படவில்லை.

ஆங்காங்கு  அவர்கள் முன் தேன்தறித்த மரங்களில் இருந்த தேன்குடிகள் எல்லாம் எங்கோ சென்றுவிட்டன. போதாக்குறைக்கு நிலவெறிக்கும் நாட்கள். தேன்குடி கண்ணில் பட்டாலும் அந்த வதைகளில் தேனிருப்பது  அசாத்தியம். நிலவுக்கு தேனீக்கள் தேனைக் குடித்துவிடும்.

கந்தன் நம்பிக்கையை இழந்து விடவில்லை. அதோ!…….அந்தச் சரிந்த வேலமரத்தில் கரடி ஏறிய அடையாளங்கள் தென்படுகின்றனவே! கரடி தேன் எடுப்பதற்காகத்தான் மரங்களில் ஏறும்.  கந்தன் நெருங்கிச் சென்று  கரடியின்  நகங்கள் மரத்தில் ஏற்படுத்தியிருந்த   அடையாளங்களைக் கவனிக்கின்றான். அவை எத்தனையோ  நாட்களுக்கு முன் ஏற்பட்டவை!  அவன்  சோர்ந்துவிடாமல் சட்டென்று  மரத்தில் ஏறி தேன்கொட்டருகில் நெருங்குகிறான்.  பூவாசல் கறுத்துக் கிடக்கிறது. இதழ்களைக் குவித்து பூவாசலினுள் ஊதிவிட்டுக் காதைக் கொடுத்துக் கேட்கிறான். தேன்பூச்சிகள் இரையும் ஓசை கேட்கவில்லை! ஏமாற்றத்துடன் கீழே இறங்கியவன்  மிகவும்  வேகமாக நடக்கிறான்.

ஐயோ! பொழுதுபட முதல் ஒரு சின்னத் தேன்குடி எண்டாலும் சந்திச்சுதேயெண்டால் ….

000000000000000000000000000

மகள்  ராணியின்  முகம்  மனக்கண்ணில்  தெரிகிறது. பொழுது சாய்ந்துவிட்டது. நன்றாக இருட்டிவிட்டால் காட்டில் வழி தெரியாது. இனி எப்படித் தேன்பார்க்க முடியும் என்று நினைத்து,   தன் கிராமம் இருந்த திசையில் திரும்பி,   நாலைந்து பாகங்கள் நடந்தவன்  காதில் குளவி இரைவது கேட்டது.   கண்களை   இடுக்கிக் கொண்டு பார்த்தான்.   ஒரு பாலை மரத்தில் மொக்காக இருந்த ஒரு பகுதியைச் சுற்றிக் குளவிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

குளவிகள்   தேன்கூட்டில் நுழைந்து  தேன்குடிக்க முயல்வது வழக்கம்.   அந்தக் கொட்டில் தேன் இருக்க வேண்டும் என்று நினைத்து,  விறுவிறென்று மரத்தில் ஏறிப் பூவாசலை அவதானித்த   கந்தனின் முகம்  மலர்ந்தது.  தேனீக்கள் பூவாசலில் நுழைவதும், வெளிப்படுவதுமாகக் காணப்பட்டன. மரத்தைக் கோடரியால் தட்டிப் பார்த்து,  கொட்டு எவ்விடம் என்பதை நிச்சயம் செய்துகொண்டு,   கந்தன் விரைவாகத் தறிக்கத் தொடங்கினான்.

சில நிமிடங்களுக்குள்ளாகவே பூவாசலின் கீழ் ஒரு  நீள்சதுரமான பகுதி அப்படியே ஒரு கதவுபோலப் பெயர்ந்து விழுந்தது.   அந்தத் துவாரத்தினுள்   கந்தன் வாயால் ஊத ஊத, தேனீக்கள்   தாம் மொய்த்திருந்த  வதைகளை விட்டு மேலே கொட்டுக்குள் போய் அடங்கிக் கொண்டன. கந்தன் நம்பிக்கையுடன் கொட்டினுள் கையைவிட்டு ஒவ்வொரு வதையாகப் பிய்த்தெடுத்தான். வதையில் தேனிருந்தால் ஈயம் போலக் கனக்கும். கந்தனின் கையில் வந்தவையோ காற்றுப்போல் இலேசாக இருந்தன. வெள்ளை வெளேரென்று இருந்த அந்த வெற்று வதைகளை எறிந்துவிட்டு மீண்டும் கொட்டுக்குள் கையைவிட்டுப் பதற்றத்துடன் துழாவினான்.  கொட்டின் மேலே,  தேனீக்கள் மொய்த்திருந்த பகுதியில் இருந்த  ‘கணக்கன் வதை’ அவனுடைய   நடுங்கும் விரல்களுக்குள்   அகப்பட்டது.  அதைப் பிய்த்தெடுத்ததுமே   தேனீக்கள் மொய்த்துக் கொட்டின.  சுரீரென்று  கடுக்கிய விஷத்தின்  வேதனையையும்  பொறுத்துக் கொண்டு அவன் அந்தக் கணக்கன் வதையை எடுக்கின்றான்.  உள்ளங்கை அகலமிருந்த அந்த வதை குண்டுபோலக் கனத்தது.

தேன்  பிலிற்றும் அந்த வதையைக் கைக்குள் அடக்கியபடியே கந்தன் தன் கிராமத்தை நோக்கிப் புயலென விரைகிறான். இதோ, வலது கையினுள் தேன் கசியும் அந்த வதையைக் கொண்டுபோய் ஒரு பேத்தி இலையில் பிழிந்துவிட்டு அதனுள் பரியாரியார் கொடுத்த தூளைக் குழைத்து ராணியின் நாவில் தடவவேண்டும் என்ற தவிப்பில் அவன் காட்டில் மூச்சிரைக்க ஓடுகின்றான். சூரை முட்கள் தோலைப் பிய்க்கின்றன.  கரம்பை முட்கள் காலில் ஏறுகின்றன. மேனியில் காயம்பட்ட இடங்களில் வியர்வை வழிந்து சொல்லொணா எரிவை ஏற்படுத்துகின்றது.  இருப்பினும் கந்தன் தன் குழந்தையின் உயிரைத் தடுத்து நிறுத்தி விடுவதற்காக மரங்களில் மோதிக் கொண்டும், கொடிகளில் இடறுப்பட்டும் தன் குடிசையை நோக்கி ஓடுகின்றான்.

தேனில் குழைத்த மருந்தைத் தின்றதும் குழந்தை கண்ணைத் திறப்பாள். மனைவியின் முகம் மலரும். மற்றப் பிள்ளைகள் மறுபடியும் சிரித்து விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை அவன் கால்களுக்கு வலுவைக் கொடுக்கின்றது. ஓடி, ஓடி அவன் கிராமத்து எல்லைக்கு வந்தபோது நிலவு பகலாய்ப் பொழிகிறது.   நிலவொளி தேங்கித் ததும்பும் அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு  அவனுடைய மனைவியின்   ஒற்றைப் பிலாக்கணம்  அவன் காதுகளில்   நாராசமாய்ப் பாய்கின்றது.

ஓடிவந்த பாதையில் சட்டென்று  நின்றுவிட்ட கந்தன்  ஆத்திரத்தில் பற்களை இறுகக் கடித்துக் கொள்கிறான்.   இரைக்கும் மூச்சு கனலாகத் தகிக்கின்றது. எந்த நிலமை ஏற்படினும் இலகுவில் மனதைத் தளரவிட்டுவிடாத அந்தக் கிராமத்தானுடைய கண்கள் கலங்குகின்றன.

அந்தச் சின்னஞ்சிறு  கணக்கன் வதை அவனுடைய பலம் மிக்க வலதுகை விரல்களுக்குள்  நசுக்கப்பட்டுக் கசங்குகிறது. தேன் துளிகள் சொட்டுச் சொட்டாக மண்ணில் சிந்திக் கொண்டிருக்கின்றன.

000000000000000000000000000000000000000000000

ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பு :-

அ பாலமனோகரன்முல்லை மண்ணில் தண்ணீர் ஊற்றுக்கிராமத்தில் ஜூலை மாதம் 1942 ஆம் ஆண்டு பிறந்த அண்ணாமலை பாலமனோகரன் ஈழத்து இலக்கிய ஆளுமைகளில் போற்றப்படுகின்றவர். அடிப்படையில் ஆசிரியராக இருந்த அ பாலமனோகரனின் ‘நிலக்கிளி ‘ நாவல் 1973 ஆம் ஆண்டு சாகித்திய மண்டல பரிசு  கிடைத்தது. இவர் ‘இளவழகன் ‘ என்ற புனைபெயரில் பல சிறுகதைகளை எழுதினாலும் காலப்போக்கில் ‘நிலக்கிளி ‘ பாலமனோகரன் என்றே தமிழ் எழுத்துப்பரப்பில் அறியப்பட்டார்.இவரால் நிலக்கிளி ,கனவுகள் கலைந்த போது , வட்டம்பூ, குமாரபுரம், தாய்வழித் தாகம், நந்தாவதி என்று மொத்தம் ஆறு நாவல்களும் , தீபதோரணங்கள், நாவல் மரம் ( டேனிஷ் மொழிபெயர்ப்பு ) என்று மொத்தம் இரண்டு சிறுகதை தொகுதிகளும்  டேனிஷ்- தமிழ் அகராதி என்று பல நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்புக்கு கிடைத்துள்ளன. அ பாலமனோகரனை இந்த இதழில் ‘சிறப்புக்கதை சொல்லியாக’ கௌரவம் செய்வதில் நடுகுழுமம் மகிழ்வடைகின்றது.

அ பாலமனோகரன் -டென்மார்க் 

30.09.1973

வீரகேசரி வாரமஞ்சரி

(Visited 148 times, 1 visits today)