நமக்கான ஒரு சினிமா!-கட்டுரை-அஜீவன்

அஜீவன் தமிழ் திரைப்படங்கள் அல்லது தமிழ் வீடியோ திரைப்படங்கள் என்றதும் தமிழர்கள் மனதில் திரையாக விரிவது தென்னிந்திய அதாவது தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் என்ற எண்ணம்தான். நாம் பழக்கப்பட்ட அல்லது வளர்ந்த வாழ்க்கை முறையிலிருந்து எப்படி உடனடியாக விடுபட முடியாதோ அதே போல்தான் இதுவும்.

எனக்குத் தெரிந்த விதத்தில் இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி , சிங்கப்பூரிலும் சரி, தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் சரி, உருவாக்கப்பட்ட தமிழ் வீடியோ – டிஜிடல் – எச்டீ மற்றும் பிலிமில் வந்த  திரைப்படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய பாணியைத் தழுவியதாகவே இருந்திருக்கின்றது. ஒரு சில படங்கள் வித்தியாசமாக இருக்க முற்பட்டாலும் முழுமையாக என்று கூறமுடியாது.

இலங்கையில் உருவான ஒரு சில தமிழ் பேசும் சினிமாக்கள் சிங்கள சினிமாவின் தாக்கத்தைப் பெற்றிருந்ததையும் குறிப்பிட்டேயாக வேண்டியுள்ளது. அதற்கு காரணம் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்கள் அப்படங்களில் முக்கிய பங்கு வகித்ததும், அவற்றை தமிழ் – சிங்களம் எனும் இரு மொழிகளிலும் வெளியிட எத்தனித்ததும்தான். இலங்கையில்  தற்போது உருவாகும் பல  தமிழ் குறும் படங்கள் மாறுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இக் கருத்துக்கள் சில சமயம் ஆரம்பத்திலேயே தென்னிந்திய – உலக சினிமாக்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்க முற்படுவதாக எண்ணத்தோன்றும். பிரச்சனை இதுவல்ல. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஏனைய புலம்பெயர் சமூகங்கள் போல நாமும் புலம் பெயர் தமிழ் சினிமா ஒன்றை ஜெனிக்கவைப்பதற்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த தருணமொன்று – சற்று தட்டுத் தடுமாறி  மீண்டும்  உயிர் பெற  தளிர்விடும்  நல்லதொரு சமயத்தில் , சமயமறிந்து  தேவையான  சில உண்மைகளை தெரிந்து கொள்வதும், அவற்றின்பால் தெளிவு பெறுவதும் இன்றியமையாதது.

சாதாரணமாகவே பொழுதுபோக்கான சினிமாவுக்கு கொடுக்கும் வரவேற்பை யதார்த்த சினிமாவுக்கு மக்கள் கொடுக்காதது வருத்தத்திற்குரியதுதான். ஏனைய சமூகங்களை விட தமிழ் சமூகம் பொழுதுபோக்கிற்கான சினிமாவைத்தான் விரும்புகின்றது. யதார்த்த அல்லது  பரிசு பெற்ற படம் என்றாலே திரையரங்கு பக்கமே தலை காட்டாத காலமும் இருந்ததை எவரும் மறுக்க முடியாது. தொலைக்காட்சி நாடகங்கள் தமிழில் தயாரிக்கப்படத் தொடங்கிய பின் இந்நிலையில் சற்று மாறுதல் ஏற்பட்டுத்தான் இருக்கின்றது.

ஆனால் தென் இந்திய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளோடு போட்டி போடும் ஒரு நிலை இல்லை. அதற்கு காரணம்  , எதற்கும்  துணிந்த தயாரிப்பாளர்கள் இல்லாமைதான்.  அப்படி எவராவது முன்வந்தால் அவரால் போட்ட  பணத்தை மீள பெறவே முடியாது. ஆசையில் அள்ளிக் கொட்ட வரும் யாராவது கிடைத்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் காசு போடுபவர் கதை சொல்லவும் தொடங்கி ,  நடிகராகவும்  ஆகி விட நினைக்கும்  போது  , சில அபத்தமான முடிவுகள் நிகழ்ந்து விடுகின்றன. இதை அனைத்து படைப்பாளிகளும் நன்கு அறிவார்கள்.

யதார்த்த சினிமா பற்றி ஏனோ  தானோ என்ற மனோ நிலையில் சிந்திக்க மறந்து விட்ட சிலர் , தற்போதைய சூழலில் மன மாற்றம் பெற்றிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. அதற்கு இன்றைய எமது அரசியல் மற்றும் புலம்பெயர் மாற்றங்களும் , புதிய சிந்தனைகளும் , இணைய வழிகளும் ஒருவகையில் காரணிகளாகியுள்ளன.  இணையத்தினூடாக  உலக சினிமாக்களை பார்க்க கூடிய வாய்ப்புகளும் இப்போது அதிகம். தவிர சோஸல் மீடியாக்கள் மூலம்  கருத்துகளை பரிமாறிக் கொள்ளக் கூடிய வசதிகள்  நல்ல வாய்ப்புகளாகி விட்டன. அது மட்டுமல்ல இணையத்தின் பலனாக ஒரு இடத்தில் உருவாகும் ஒரு படைப்பை , வேவ்வேறு  இடத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி எடிட்டிங் – கலர் கரெக்சன் – இசையமைத்தல் – டைட்டில் – ஸ்பெசல் எபெக்ட் என எத்தனையோ வேலைகளை செய்ய வசதிகள் கைக்குள் வந்து விட்டன. அது மட்டுமல்ல ஒரு படைப்பை வெளியிட முன் துறை சார்ந்த நண்பர்களோடு கருத்து பரிமாற்றங்களை நடத்த முடிந்த ஒரு காலமாகவும் இவ்விஞ்ஞான வளர்ச்சி நமக்கு உறுதுணையாகி உள்ளது. ஆனால் இவற்றை நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை என்பது நமக்கு தெரியும்.

இந்த நேரத்தில் புலம்பெயர் மற்றும்  ஈழத்து தமிழ் சினிமா எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராய முற்படும்போது முதன்முதலாக நம் எண்ணத்துக்குள்  வருவது தென்னிந்திய வியாபார தமிழ் சினிமாவும், அதன் பாதிப்பும்தான்.

தென்னிந்திய கனவுலக சினிமாவுக்கு பழகிப்போன சாதாரண மக்களை யதார்த்த அல்லது உலக சினிமாவுக்குள் தள்ளி , உடனடியாக அதை ரசிக்க வைப்பது மிக மிக கடினமான ஒன்று என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது சர்க்கரையை அதிகமாக உட்கொண்டு பழக்கப்பட்டவரிடம், இப்போதிருந்து சர்க்கரையை நிறுத்திவிடுங்கள் என வைத்தியர் அறிவுறுத்துவது போன்றதுதான் இதுவும்.

உண்மை கசக்கலாம். அதற்காக உண்மைகளை மறைத்து , உணர்வு அடிப்படையில் துவேசமாக செயல்பட்டு மனித நேயத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் எண்ணாது, இக் கட்டுரை பற்றி யதார்த்தமாக சிந்தித்தால் பெரிய நன்மை இல்லாவிட்டாலும் , ஓரளவு நன்மை கிடைக்கலாம்.

புலம்பெயர் – ஈழ  தமிழ் சினிமா ஒன்று உருவாக வேண்டுமென்று ஆதங்கப்படுபவர்கள், தமிழக சினிமாவை எதிர்ப்பதா, ஆதரிப்பதா, அங்கிருந்து எதையாவது கற்றுக் கொள்வதா எனும் கேள்வியை முதலில் தமக்குத் தாமே எழுப்ப வேண்டிய தருணம் இது?

இந்தியாவிலும் , உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்துவாழும் இந்தியத் தமிழர்களை மட்டுமல்ல, ஏனைய நாட்டுத் தமிழ் பேசும் மக்களையும் கவரும் விதத்தில் தென்னிந்திய தமிழ் படங்கள் வரவேற்பையும் , வளர்ச்சியையும் பெற்றிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. தமிழக ஒளிப்பதிவாளர்களும் – இசையமைப்பாளர்களும் கூட ஆங்கில படங்களில் பணியாற்றுமளவுக்கு சர்வதேச தகுதி பெற்றிருக்கின்றார்கள். தமிழர்களை ஏளனமாக எண்ணி வந்த , வட  இந்தியர்கள் கூட சிறந்த தொழில் நுட்பத்திற்காக தமது படங்களை சென்னையில் உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எனவே இன்று அது தொழில் நுட்ப ரீதியாக சர்வதேச தரத்துக்கு உயர்ந்துள்ளது என்பது பொய்யல்ல. தென்னிந்திய தமிழ் படங்களில் நடித்தால் புகழ் பெறலாம் எனும் நிலை பிறமொழி நடிக – நடிகையர் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழகத்தின் தலைநகரான சென்னை  மற்றும்  ஆந்திராவின்  ஹத்ராபாத்   ஆகிய  சினிமா தொழில் நுட்பக்கூடங்கள் ஆசியாவிலேயே சிறந்த தொழில் நுட்பக் கூடங்களாகத் திகழ்கின்றன. இங்கே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் ஆங்கிலப் படங்களுக்கு கிடைக்கும் வசூலை பெறாவிடினும், ஆங்கிலப் படங்களிற்கு நிகரான தொழில் நுட்பத்தை பெற்றிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. சர்வதேச அளவிலும் ஒரு சில படங்கள் பேசப்படுகின்றன.

ஆனாலும் யதார்த்த சினிமா , சர்வதேச அளவில் பேசப்படுவது போல், கனவுலக சினிமா சர்வதேச அளவில் பேசப் படாமையால், இந்தியாவில் தயாராகும் சினிமாவின்  எண்ணிக்கையின் அடிப்படையில் , யதார்த்த சினிமாவின் எண்ணிக்கை போதாதென்றுதான் கூறத் தோன்றுகின்றது.

இந்தியர்களின் பொழுதுபோக்கே சினிமா என்பதால் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலான பாமர இந்தியர்களின் மிக முக்கிய பொழுது போக்கு சினிமாவே தவிர வேறெதுவும் இல்லை. புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் முக்கிய பொழுது போக்கும்   வீடியோ – தொலைக்காட்சி படங்கள் பார்ப்பதுதான். எனவே யதார்த்த சினிமாவை விட , கனவுலக சினிமாவின் தயாரிப்பு பார்வையாளர்களின் ஏற்றுக்கொள்ளல் மூலம் அதிகரித்து இருக்கின்றது.

ஆகவே நாம் , தென் இந்திய திரைப்படங்களை ஆதரித்தாலும் , எதிர்த்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பு  ஏற்படப்  போவதில்லை. எதிர்ப்பு என்பது குரோத மனப்பன்மை ஒன்றை வளர்க்குமே தவிர , வேறு எந்தவொரு சாதனையையும் படைத்துவிடாது.  தமிழ்பேசும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் எமது சகோதர இன மக்கள் எனும் எண்ணமில்லாவிடில் , நாம் நம்மை ஏமாற்றும் விதத்தில் வாழ்வதாகவே ஆகிவிடும்.

இதுதவிர புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்பேசும் மக்களை, தென்னிந்திய தமிழ் படங்களைப் பார்க்காதீர்கள் என்றால், அவர்களுக்காக உருப்படியாக ஏதாவது படைப்புக்களை கொண்டு வருகிறோமா என்றால் , வாய்மூடி மெளனமாவதைத் தவிர வேறு வழி கிடையாது. தமிழ்படங்களை தவிர்த்தால், நாம் வாழும் நாடுகிளில் திரையிடப்படும் ஆங்கில அல்லது நாம்  புலம் பெயர்ந்து வாழும் நாட்டின் திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டிவரும்.

அநேகமான படித்த தமிழர்கள் கெளரவத்துக்காக ஆங்கிலத்தில்தான் வீட்டிலும் உரையாடுகின்றார்கள். புலம்பெயர்ந்த பின் , நாட்டின் பிரச்சினை காரணமாக வெளியேறிவிட்ட , ஆங்கிலம் பேசாத நாடுகளில் குடியேறிய   அநேக தமிழர்களுக்கு , ஆங்கில அறிவு குறைவுதான். ஆனால் , அவர்கள் தாம் வாழும் நாட்டின் மொழியைத் தெரிந்து கொள்கின்றார்கள். குழந்தைகள்  தாம் வாழும் நாட்டின் மொழியில்தான் அதிகமாக உரையாடுகிறார்கள். பெற்றோருக்கும் , குழந்தைகளுக்குமான  உறவு மிக சொற்பமாகவே இருக்கிறது. வாழும் சமூகத்தோடுதான் அவர்கள் அதிக நேரத்தை செலலவழிக்கிறார்கள். பெற்றோர்கள் தமிழ் மொழியை மறக்காவிடினும்  ,  குழந்தைகள் நிச்சயம் எமது மொழியையும் , கலாச்சாரத்தையும் மெதுவாக மறந்து விடுவார்கள் எனத்  உணர முடிகிறது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேகமாகவும் ,  ஏனைய மொழி பேசும் நாடுகளில் மெதுவாகவும்  மொழி மறக்கடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆங்கிலம் பேசாத நாட்டு குழந்தைகளே தமிழில் பேசுகிறார்கள். அதற்கு காரணம் பெற்றோர் வீட்டில் தமிழில் உரையாடுவதேயாகும்.

நாம் எங்கு எப்படி வாழ்ந்தாலும் நமது அடையாளம் மாறப்போவதில்லை. ஆனால் குணம் – பண்பு போன்றவையும் நடைமுறைகளும் மாறிவருவதை உணர முடிகிறது.

எனவே தென்னிந்திய – மற்றும் உலக சினிமாக்களை எதிர்ப்பது எனும் மனநிலைக்கு போகாமல்  , நமக்கான   சினிமா ஒன்றை படைக்கவும், அதை வேறுபடுத்திப் பார்த்து  ஆதரவளிக்கவும் அனைவரும் நம்மவர்கள் முன் வர வேண்டும்.

சொல்வது சரிதான். இவை மக்களுக்கு போய்ச் சேருமா ?

இல்லை! உடனடியாக போய் சேராதுதான். ஆனால் பத்திரிகைகள், வானொலிகள், புத்தகங்கள், இணையம் ,  கருத்தரங்குகள் வழி போய் சேர வகை செய்யலாம்.

தன்னை சுய விமர்சனம் செய்து கொள்பவனும், ஏனையோரின் விமர்சனங்களை திறந்த  மனதுடன் ஏற்றுக் கொண்டு செயல்படுபவனும் மட்டுமே ஒரு நல்ல கலைஞனாக – படைப்பாளியாக பரிணமிக்க முடியும். அப்படியில்லாவிடில் எப்போதும் போல் பழைய பல்லவியைத் தொடர வேண்டியதுதான்.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலிருந்து அத்தி பூப்பது போல், ஆண்டொன்றுக்கு ஏதோ ஒன்று இரண்டு படைப்புகள் வந்து, வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சாதனை என எண்ணுவது மடமையானது. அனைத்துப் பகுதியிலிருந்தும் படைப்புகள் புதிது புதிதாக உருவாக்கம் பெற வேண்டும். வேறுபட்ட நாடுகளில் இருந்து, மாறுபட்ட அனுபவங்களாக அவை அமையும்போது,  அவை வித்தியாசமாகவே இருக்கும். புதிதாக இருக்கும். அது நாம் வாழும் நாடுகளில் , நமது பிரச்சனைகளை பேசுவனவாக இருக்கும். அப்போது , அவை நிச்சயம் மக்களால் வரவேற்கப்படும்.

இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் சினிமாக்களில் பணியாற்றிய பல கலைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு சினிமாதுறை பற்றிய கல்வி அறிவு அல்லது அனுபவம் இருக்கிறது. இவர்களது பெரிய குறை அனைத்தும் தமக்குத் தெரியும் என்று தமக்குத் தாமே கிரீடம் சூடிக் கொண்டு , வாழ்ந்த இடத்தின் நிலையில் வாழ நினைப்பதுதான். இதனால் இவர்கள் ஏனைய திறமையுள்ள கலைஞர் ஒருவருடன் சேர்ந்து எதுவும் செய்யாது, தனது தலையில் அனைத்தையும் போட்டுக் கொண்டு செயல்படத் துடிக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் தான் அடுத்தவன் முன் தாழ்ந்து விடுவேனோ எனும் தாழ்வு மனப்பான்மைதான். அத்துடன் ஒரு குழுவாக சேர்ந்து செய்யும்போது,  அனைத்துக்கும் தானே முழு உரிமையும் கோர முற்பட்டு, அடுத்தவர்களை மலினப்படுத்தி படைப்புகளை புஸ்வாணமாக்கி விடும் நிலையும்தான். அப்படியும் இல்லாவிட்டால் எதுவுமே தெரியாத அப்பாவி புதிய கலைஞர்களை , தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தன் சுய விளம்பரத்துக்காக அவர்களை பலிக்கடாவாக்கி தப்பிக் கொள்வதுதான். இப்படிப் பட்டவர்களுக்கும் மூன்றாம் தர அரசியல்வாதிகளுக்கும் எந்த வேறுபாட்டையும் நான் கண்டதில்லை. இன்னுமொருசாரார், கதை – திரைக்கதை – இயக்கம் ஆகியவற்றோடு கதாநாயகனாகவும் நடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள். இப்படியான  சிலர் கதை சொல்லி ஒரு இயக்குனர் போல், பல பகுதிகளை சொல்லிக் கொண்டு வரும்போது,   எங்கோ பார்த்த சில படங்கள் ஞாபகத்துக்குள் வந்து சிரிப்பை வரவழைக்கும்.

எமது கலைப் படைப்புகள் , எவருக்கு போய்சேர நாம் செய்கிறோம் என்பதைக் கூட சிந்திக்காமல்,  ஒரு பெரிய இயக்குனர் போல் பேசுவது பரிதாபத்துக்குரியது. இவர்கள் திருமண பிறந்தநாள் விழாக்களை படம் பிடிப்பது போல் சினிமாவையும் நினைப்பது கேலிக்குரியது. ஒளிப்பதிவுக் கருவியால் பொம்மை வந்தால் போதும் என்று மட்டும் நினைபோராக இருக்கின்றார்கள்.

சினிமா என்பது , சில நெறி முறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உருவாகும் ஒரு கலை. நினைத்ததை நினைத்த இடத்தில் புகுத்தும் ஒரு கலையல்ல. அப்படியான விதிமுறைகளை தவிர்த்தால் ஏதோவொரு படைப்பாக இருக்குமே தவிர, அது எவராலும் பேசப்படாததாகப் போய், படைத்தவர் வீட்டில் வைத்து , தானே போட்டுப் பார்த்து ரசிக்க வேண்டியதாகிவிடும்.

இதுதவிர மேடை நாடகத்துக்கும் – சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட பலரால் வேறு படுத்திப் பார்க்க முடியாமலிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் சினிமா என வந்த படைப்புகளில் உள்ள பெரியதொரு குறை, இலங்கைத் தமிழையும், இந்தியத் தமிழையும், நாடக வசன நடைகளையும் புகுத்தி, பார்வையாளனை பைத்தியக்காரனாக்க முற்படுவதை உணர முடிகிறது. இப்படியான ஒரு சில படங்களை பார்வையிடும் , பார்வையாளர்கள் படும் அவஸ்தையும் , நகைப்பும் புலம்பெயர் சினிமா ஆர்வலர்களை புண்படுத்துகின்றது.

பணபலமும், ஆர்வமும் மட்டுமே ஒருவனை படைப்பாளியாக்கி விடுவதில்லை. ஒரு திரைப் படத்தை பார்த்து விட்டு அப்படத்தின் கதையைச் சொல்வது கடினமல்ல. ஒரு கதைக் கருவை பார்வையாளன் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் திரையில் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, ஒருவர் படைப்பாளியாக முடியும். மனித எண்ணங்களில் தோன்றும் அனைத்தையும் திரையில் காட்ட முடியாது. உதாரணமாக மாலைப்பொழுதின் மயக்கத்தில் தத்தளிக்கும் ஆதவனுக்கு ஆறுதலளிக்கும் எண்ணத்தில் அவள் தன் பொன்னிற கூந்தலை மேனியில் படரவிட்டவாறு அன்னமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் என்பதை பாட்டிலோ – எழுத்திலே வடித்துவிடலாம். ஆனால் அதை திரையில் வடிப்பது மிக கடினம். ஏன் முடியாது எனக் கேட்கத் தோன்றும் ?

சற்று முயன்று பார்த்தால் மட்டுமே விபரீதம் புரியும். மாலைப் பொழுதில் ஆதவன் மறைவதையும், அவள் நடந்து வருவதையும் காட்டலாம். அது ஒரு பெண் கூந்தலை மேனியில் படரவிட்டவாறு, மாலை நேரத்தில் நடந்து வருவதைத்தான் சொல்லுமே தவிர, ஆதவன் மயக்கத்தில் தத்தளிப்பதையோ, அவள் அன்னமாக ஆதவனுக்கு ஆறுதல் தர வருவது போன்றோ ஒருபோதும் எடுத்துக்காட்டாது. கற்பனைக்கும் சினிமாவுக்கும் நிறையவே வித்தியாசமுண்டு. எந்தவொரு நிகழ்வையும் மூளை கிரகித்துக் கொள்ள சில  நொடிகளான  காலமெடுக்கின்றது. அது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது. சினிமா பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்க்கும் ஒரு கலை. எனவே எல்லா ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு ஏற்பவே ஒரு படைப்பை மக்கள் முன் வைக்க வேண்டியிருக்கின்றது. சமூகத்துக்கு போய் சேராத, பார்வையாளனின் ஏற்றுக் கொள்ளல் மூலம் அங்கீகரிக்கப்படாத, எந்த ஒரு கலை வடிவமானாலும் அது பயனற்றது.  எனவே செய்யும் கலை பற்றிய கல்வியறிவும், அனுபவமும், சிந்தனையும் நிச்சயம் தேவை. அதை விடுத்து விலையுயர்ந்த சாதனங்கள் பிரமாண்டமான வெற்றிகரமான திரைப் படமொன்றை தரும் என்ற கருத்து  உடன் பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது.

பல்வேறு இடையூறுகள் மத்தியில், ஒரு சில படைப்புகள் அத்தி பூத்தாற்போல் பூக்க முயன்று மொட்டிலேயே கருகிவிடுவது மிக மிக வேதனையானது. அப்படி வரும் படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் கூட மிகவும் அரிதாகவே எழுதப்படுகின்றன. சிலர் படைப்பை விமர்சிப்பதை விடுத்து படைப்பாளியை விமர்சிக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஒரு சிலர் படைப்பாளியின் படைப்பை விட அவனது பூர்வீகத்தை தெரிந்து கொள்ளவே பிரயத்தனப் படுகிறார்கள்.

இங்கே அந்தக் கலைஞன் எந்த சாதியில் பிறந்தான் என்பதிலிருந்து,  அவனது தற்போதைய அரசியல் நிலைப்பாடுவரை தேடிக் கண்டுபிடித்து ஒரு புதிய கலைஞனின் வரவை தடுப்பதை முக்கிய குறிக்கோளாக கொள்கிறார்களே தவிர, புதிய வரவொன்றாக ஆதரிப்பதை தவிர்த்து வருவதால், இன்றுவரை சிறந்த புதிய கலைஞர்கள் முகம் நினைவில் நிற்கும் முன்னே முகமிழந்து விடுகின்றார்கள்.

பணவசதி படைத்த ஒரு சிலரும், எதையாவது சாதித்தே ஆகவேண்டும் என்ற ஒரு சிலரும், மின்மினிகள் போல் தலைகாட்டி உதிர்ந்து போய்விடுகிறார்கள். இதற்கெல்லாம் பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் மேல் பழி – பாவத்தை போட்டு விட முடியாது.  எமக்கான , மக்கள் தொடர்பு சாதனங்கள், மற்றும் ஊடகங்கள் இவற்றை மக்கள் முன் கொண்டு வந்திருந்தார்களேயானால் , இன்று பெருவாரியான கலைஞர்களும், கலைப்படைப்புக்களும் எம் கண் முன்   காண கூடியதாக இருந்திருக்கும்.  எனவே இனியும் இக் குறுகிய  நோக்கத்தை மாற்றும் பொறுப்பு எமது புலம்பெயர், மக்கள் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும், விமர்சகர்களுக்கும் உண்டு. இவர்களுக்கிடையிலும் புதுப் புதுப் படைப்புகள் உருவாக அவா கொள்ளும் மனதநேயமிக்க ரசிகர்களும் ,விமர்சகர்களும் பல கலைஞர்களுக்கு உரமாக இருப்பது ஆறுதலான விடயம்தான்.  அவர்கள் செய்யாததை தற்காலத்து இணையத்தின் மற்றும் சோசல் மீடியாக்கள் மூலம் கொண்டு செல்லலாம். அது தற்போதைய அனைவர் கையிலும்  இருக்கிறது.

எனவே கலைஞர்களில் பயிற்சியும், தேர்ச்சியுமுள்ள கலைஞர்கள்,   தான் என்ற ஈகோ மாயையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு கூட்டமாக , கலைப் படைப்புக்களை  மக்கள் முன் கொண்டு வர முயல வேண்டும். கூட்டாகப் பணிபுரியும்போது கருத்து மோதல்கள் ஏற்படத்தான் செய்யும். அதற்காக ஜால்ரா அடிப்பதைத் தவிர்த்து உண்மைகளை விமர்சித்து உண்மைகளையும், நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு கரம் கோர்த்து படைக்க நினைப்பவர்களாக இருப்போர் மட்டுமே உண்மை கலைஞர்கள் ஆக முடியும். தனி மனிதனாக எதையும் சாதித்தவர்கள் உலகில் இல்லை என்பதை மறக்கக்கூடாது. ஒருவனின் வெற்றிக்குப் பின்,  பலர் நிழல்போல் துணையாக இருக்கின்றார்கள். மனம் விட்டுப் பேசுங்கள். பணம் படைத்தவர்கள் முன்வந்து புது வரவுகளுக்கு உதவுங்கள்.

இவை வியாபார நோக்கமாகி விட்டால் தோல்வியையும், மன உழைவையும் ஏற்படுத்தும்.  உலகில் தன் படைப்பு மட்டும் தெரிய வேண்டும், வரவேண்டும் என்னும் நிலை மாறி ஏனைய புதிய படைப்புகளும் , வரவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் ஏற்பட்டால் மட்டுமே தொடர்ந்தும் படைப்புகள் வெளிவர வாய்ப்பாக அமையும்.

எனவே ஏனைய உலக படைப்புகளை வரவேற்று அவர்களிடமிருந்து புதியவற்றை கற்றுக்கொண்டே எமது படைப்புக்களை உருவாக்க முயல வேண்டும். சினிமா பற்றிய அறிவைப்பெற புத்தகங்கள், கல்லூரிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆரம்ப அறிவை தெரிந்து கொள்ளாமல் ஒரு உருப்படியான திரை வடிவத்தை உருவாக்க முடியாது. அதை சினிமாத்துறை சார்ந்தோர் உடனடியாக செய்ய வேண்டும். புலத்தில் வாழும் இளையோர் தம் கல்வியறிவை வைத்து இங்குள்ள திரைப்படக் கல்லூரிகளில் இணைந்து எதையாவது கற்றுக் கொள்ள முன் வரவேண்டும். பகுதி நேர சினிமா பாட திட்டங்கள் கூட உண்டு. தேட கற்று தேறலாம்.

விசயம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து படைப்புகளை உருவாக்குவதன் மூலமும், புதியவர்களுக்கு வழிகாட்டியாக  அல்லது உதவியாக இருப்பதன் மூலமும், விசயம் தெரிந்தவர்களை ஆதரிப்பதன் மூலமும் எமது படைப்புகள் , புலம் பெயர் தேசங்களில் வெளிவரக் கூடிய நிலையை உருவாக்கலாம்.

புது வரவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் மட்டுமே எமது புலம்பெயர் படைப்புக்களுக்காக மக்களையும் , ரசிகர்களை ஏங்க வைக்கலாம். அது தவறும் பட்சத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு பக்கம் திரும்பி விடும்.

அஜீவன் -சுவிஸ்சர்லாந்து

அஜீவன்

 

(Visited 169 times, 1 visits today)