புகையிலைத் தோட்டங்களுக்குள்
புதைந்திருக்கும்
கல்லறை வாசியான பூனை
மடிந்த குறுவால் சுழற்றி
தன் தோற்றங்களை பன் மடங்காக்குகின்றது
ஆந்தையின் கண்களில் விடிந்திருக்கின்ற
பௌர்ணமியைப் பிராண்டுகின்றது
கரும் சுருள்களாய்
முகில்கள் சூழும் வேளை
ஆபத்தான சமிக்ஞைகளை
கூறுபோடும் தந்திரங்களை
வேட்கை வாடைகளை மோப்பம் பிடிக்கின்றது
பார்வைக் கூர்மையால்
மன உறுத்தலை அறியும்
பச்சைக் கண் பூனை
பலியின் இரத்தத்தை விடாய் கொண்டு நக்கிடும்
கைகளால் வருடி அளைதல் பொழுதுகளில்
உள்ளங்கை மேலே
மென் பாதம் பதிந்து
“மியா“ என்கின்றது மென்மையாக……
நீல இருளில் உலவும்
வசீகரப் பேயுருப்பூனை விசுவாசமற்றது
அனார்-இலங்கை
261 total views, 1 views today