வட்டத்திற்கு வெளியே- சிறப்புஎழுத்துகள்-ப.ஆப்டீன்

ப.ஆப்டீன்திருமலைப் பிரதேசம் இருட் போர்வைக்குள் ஆள் நடமாட்டமின்றி, ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட ஊரடங்கு போல் காட்சியளித்தது.

அந்த நேரத்தில். அது –அனுராதபுரத்திலிருந்து ஹொரவப்பொத்தான ஊடாக வந்த கடைசி பஸ்.

நிலையத்திற்குப் போய் ஆறுதலாக நிற்க முன்னமே மூட்டை முடிச்சுகளுடன் விழுந்தடித்துக்கொண்டு இறங்கிய அந்த விரல்விட்டு எண்ணக் கூடிய பிரயாணிகளுக்கு எப்படித்தான் இறகுகள் முளைத்தனவோ!

அப்படி என்ன அவசரம்?

பஸ்ஸை விட்டு இறங்கிய முனாஸ் மாஸ்ட ‘கிட்பேக்’ சுமையுடன் கடைத்தெருவை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

அவரால் வேகமாக நடக்க முடியவில்லை.

வானத்திலிருந்து இலேசான தூறல். தொடர்ந்து ஒரு மின்வெட்டு, பாதைக்கு ‘டோர்ச்’ அடிக்க, மறுகணம் எங்கோ இடி முழக்கம். அது இடி முழக்கமா அல்லது வேறு எதுவுமா? ஆசிரியருக்கு பிரமை தட்டியது. இடி முழக்கம்தான் என்பதற்கு மின்னல் சாட்சியமளித்துள்ளதால், அவர் உள்ளத்தில் எழுந்த ஐயத்தை அந்தக் கணமே பொசுக்கிக் கொண்டார்.

எனினும் ஜன சந்தடியற்ற ரோடு.

உள்ளம் பதட்டப் படாமல் இல்லை.

‘ஹூய்….ய்…’ என்ற இரைச்சஓடு சுகாதாரப் பகுதியில் அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் வண்டியின் திகிலோசை வேறு.

இனம் புரியாத ஒரு’டென்சன்’தான்.

மூடியிருந்த கடையோரங்களில் சற்று நின்று, நிதானித்து, தூறல் நின்றவுடன் போக அவருக்குத் தைரியமில்லை.

நிலைமை சூழலை மாசடையச் செய்து விட்டிருந்தது.

நடையில் சற்று வேகத்தைக் கூட்டிவிட்டோம் என்ற நினைப்பில் அதே வேகத்தில்தான் நடக்கிறார், நனைந்து கொண்டே.

நிலைமை இப்படி ஆளைக்கொல்லும் என்றிருந்தால் நாளைக்குக் காலையில் ஆறுதலாகப் புறப்பட்டிருக்கலாமே!

இப்படியும் அடிமனம் குத்திக் காட்டுகிறது. அத்தோடு இனிமேல் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தால், இரண்டுங் கெட்ட நேரத்தில் புறப்படக் கூடாது. காலங் கெட்டுப் போயிருக்கிற சங்கட வேளையில்.

ஒரு தீர்க்கமான முடிவையும் எடுத்தாகி விட்டது.

என்ன செய்வது? காசோலை மூலம் ஆசிரிய வேதனம் என்ற நிலை வந்ததும், மூனாஸ் மாஸ்டரின் பாடு படு சிக்கல்தான். பெரும் அலைச்சல்கள்க்கும் ஆக்கிவிட்டிருந்தது.

பாடசாலையிலிருந்து பல மைல் தூரத்திலுள்ள வங்கியில் தமது சேமிப்புக் கணக்கில் காசோலையைப் போட்டுவிட்டு ‘இன்றுபோய் நாளை வா!’ என்று எத்தனை அலைக்கழிப்பு!

இருபது வருடங்களுக்கு மேலாக இருபதாம் திகதியையே மையமாக வைத்து, சம்பளப் பணத்தைப் பெற்று தமது பொருளாதரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அவருக்கு ஊரில் உள்ள கொடுக்கல் வாங்கல் உட்பட, எதையுமே திட்டமிட்டுக் கருமமாற்றி முடியாத சங்கடங்கள்.

ஹொரவப்பொத்தான சந்தியிலிருந்த் சில மைல் தொலைவில் ஒரு கிராமிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், ஒரேயொரு விசேஷ பயிற்சி பெற்ற கணித ஆசிரியரே முனாஸ் மாஸ்டர்.

பயிற்சி முடிந்ததும் சொந்த மாவட்டத்திற்கு வந்த மாற்றல் கடிதத்தை ரத்துச் செய்து, நாட்டின் எப்பகுதியிருந்தாலும் பரவாயில்லை. தனக்கு ஒரு ‘முஸ்லிம் பாடசாலை மட்டுந்தான்’ வேண்டும் என்று காரசாரமாய் நின்று வெற்றி கொண்ட மகாவித்தியாலயம் இது.

பின் தங்கிய கிராமப் பாடசாலைகளில் விசேஷ தராதரம் பெற்ற ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொள்வது கடினமாதலால்,அதிபரின் பூரண அனுசரணையும், ஏனைய ஆசிரியர்கள், ஊர்மக்கள் போன்றோரின் ஒத்துழைப்பும் உதவிகளும் அவருக்கு எப்போதும் காத்திருந்தன.

அதே கிராமத்தைச் சார்ந்த அதிபருக்குப் பெரிய கல்வீடு இருப்பதால் விடுதியை இரு ஆசிரியருக்கு ஓர் அறை என்ற விகிதத்தில் பகிர்ந்தளித்திருந்தார். ஆனால் முனாஸ் மாஸ்டருக்கு வசதி கூடிய ஒரு தனி அறை.

இரு தஸாப்தங்களுக்கு மேலாக அதே ஊரில் காலம் கடத்தியதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது.

வருடாந்தம் இரண்டு ஏக்கர் வயல் உழுவதற்கு நெருக்கமான சிலர் கைகொடுத்து உதவுகின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறை மேலதிக வயல் வருமானம் அவரைப் பொறுத்தவரையில் ஒரு வரப்பிரசாதம்.

ஆனால், முனாஸ் மாஸ்டர் வயலுக்குப் போனதாகச் சரித்திரம் இல்லை. உரிய முதலீடு செய்துவிட்டால் எல்லாமே அவரது நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவிகளால் வெற்றிகரமாக நடந்து முடியும்.

விதை நெல், கிருமிநாசினி, உரம், உழவு இயந்திரம் அது இதுவென்று வெறுமனெ ஒரு மனக்கணக்குப் போட்டுப் பார்ப்பதோடு சரி. ஒரு காலத்திலும் நட்டம் போனதில்லை.

ஒரே வித்தியாலயத்தில் இரு தஸாம்தங்களுக்கு மேலாக கடைமையாற்றுவதற்கு அவர் எந்த வித யுக்திகளையும் கையாளவில்லை.

அவரிடம் ஓர் ஆசிரியருக்கேயுரிய, மிக நேர்மையான யுக்தி, பிறவிப்பலனாக அமைந்திருந்தது.

தனது கணித பாட போதனையை மிக அற்புதமாகச் செய்து ஒவ்வொரு வருடமும் நல்ல பெறு பேறுகளை ஈட்டிக் கொண்டிருந்தார். இது அவருக்கே உரித்தான ஓர் சிறப்பம்சம்.

பிறந்த ஊருக்கு மாறிப் போகவேண்டும் என்ற எண்ணம் துளிகூட இல்லை.

சொந்த ஊரில் போட்டியும் பொறாமையும் இன சன விரோதங்களும் தவிர வேறு என்ன இலாபம்.

சொந்த வீடும், வீட்டைச் சுற்றிய வளைவும்தான் அவருடைய பரம்பரைச் சொத்து.இதுபோன்ற பின்தங்கிய கிராமங்களில் ஆசிரியனுக்கு எப்போதும் மந்திரிக்குரிய கௌரவம்தான்.

கல்வி முடித்ததும் வெறுமனே இரண்டு வருடங்கள்தாம் சொந்த ஊர்ப் பாடசாலையில் சேவை செய்துள்ளார். பின்னர் இரு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் முடங்கிக் கிடந்த பின்னர் கிடைத்த இந்தக் ஹொரவப்பொத்தான மாற்றத்தைத்தான் அவர் வாழ்க்கையில் விமோசனம் கருதி வருகிறார். அது தவிர மாஸ்டருக்கு வெளியூர் அனுபவங்கள் கிட்டவில்லை.

பல இன மக்கள் வாழும் இடங்களில் சேவை செய்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை. அவருடைய ஆசிரிய உள்ளம் ஒரு சிறு வட்டத்தினுள்ளேயே அமிழ்ந்து விட்டது. இது துரதிர்ஷ்டம்தான்.

சூழல் அவரை அப்படி ஆளாக்கி விட்டிருந்தது.

சுமையோடு நடந்து கொண்டிருந்தவருக்கு மீண்டும் ஒரு மின்வெட்டு அவர் பாதையைத் தெளிவாக்கியது. எங்கேயோ இடி முழக்கம் கேட்டது.

ஒரு சிறுவன் அரைக்குடையில் வந்து கொண்டிருந்தான்.

‘தம்பி மெடீனா ஓட்டல் திறந்திருக்கா?’

‘நான் காணல்ல ஐயா, பக்கத்தில் சைவக் கடை திறந்திருக்கு…’

பையன் எதிர்த்திசையில் நடந்து விட்டான்.

சைவ ஓட்டல் திறந்திருந்தால் நிச்சயம் மெடீனாவும் திறந்திருக்கும்.

சில நிமிடங்கள் நடை.

அவர் எதிர்பார்த்ததுபோல் மெடீனாவும் திறந்திருந்தது.

மிக நீண்ட தேநீர்க் கடை அவருக்குப் பழக்கப்பட்டதால், உள்ளுக்கே நுழைந்து, ஈர ‘கிட்பேக்கை’ மேசை மீது வைத்து களைப்பாறினார்.

முகம் கைகளைக் கழுவி, நனைந்த பாகங்களைத் துடைத்து விட்டு தலையைச் சீப்பினால் வாரிவிட்டார்.

வெயிட்டர் வந்து ‘என்ன சாப்பிடப் போறீங்க..?’ என்ற தோரணையில் முன்னால் நின்றான்.

வயிற்றுக்குள் ‘கர்முர்’ரென்று போர் தொடுத்த கோரப் பசிக்கு, கோதுமை ரொட்டியும், மீன் கறியும் கொடுத்து சமாதானப் படுத்தி தேநீரும் அருந்தி இராப் போசனத்தை முடித்து விட்டு, பணம் செலுத்த வந்தபோது –

வெளியில் முற்றாக ஓய்வெடுத்திருந்த தூறல் மீண்டும் மாஸ்டருக்குப் பன்னீர் தெளிக்க ஆரம்பித்தது. ‘மட்டக்களப்பு மெயில் ரெயில் இன்றைக்கு..?’

காசாளராக இருந்த இளைஞனுக்கு எந்தவித அக்கறையுமில்லை. ‘தெரியாது’ என்ற சொல்லை மட்டும் உதிர்த்தான். மேசையின் பக்கத்தில் ‘டெலிபோன்’ பூட்டப்பட்டுக் கிடந்தது.

முனாஸ் மாஸ்ரர் புகைவண்டி நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

மீண்டும் ஒரு மின் வெட்டு.

வானம் ‘சோ’வென்று கதற ஆரம்பித்தது சோகமாக.

நிலையத்தை அடைவதற்குள் தூறலில் ஊறித் தெப்பமாகி விட்டார்.

‘….. இரவு ரெயில் இன்றைக்கு இல்லை. நாளை காலை ஐந்து முப்பதுக்கு ஒரு எக்ஸ்பிரஸ் இருக்கு…’

ஸ்டேஷன் மாஸ்டரின் அழுத்தம் திருத்தமான மறுமொழியால் நிலை குலைந்து நின்றவர், மேலும் தாமதிக்கவில்லை.

இராத் தொழுகைக்கும் இராத் தங்கலுக்காகவும் ‘தக்கியா’ என்னும் பள்ளி வாசலை நோக்கி நடந்தார்.

அந்தச் சிறு ஆலயம்தான் இப்போதைக்குத் தஞ்சமளிக்கக்கூடிய ஒரேயொடு இடம்.

முனாஸ் மாஸ்டருக்கு என்றால் இன்றைய பிரயாணம் ‘சீ’யென்று’ வெறுத்து விட்டது.

ஆனால் அடுத்த மாதத்திலிருந்து இந்தப் பிரச்சினை இருக்கது. ‘கரன்ற் அகவுன்ற்’ வைத்திருப்பவர்கள் அடுத்த மாதம் தொடக்கம் உதவுவதாக வாக்களித்துள்ளார்கள். ‘செக்கை’ ஒப்படைத்த மறுகணமே பணத்தைத் தருவார்களாம்.

அப்படியே அவர்கள் தந்தாலும் இனியும் இப்படியான இரண்டும் கெட்ட நேரத்தில் புறப்பட்டு வந்து மாட்டிக் கொள்ளக் கூடாது.

முன்யோசனையற்ற மடத்தனமான தன்னுடைய அவசரச் செய்கைக்காக மனம் இடித்துக் கூறியது.

வானத்தின் சோககீதம் சற்று அடங்கியிருந்தது.

நன்றாக நனைந்தாலும் நிறைய நடந்தாலும் களைத்துப் போய் அந்தப் புனிதமான வணக்க ஸ்தலத்தை அடைந்தார்.

கூட்டுத் தொழுகை முடிந்து நீண்ட நேரமாகை விட்டிருந்ததை பள்ளிவாசலில் சுவர்க்கடிகாரம் படீரென்று அறைந்து உறுத்தியது.

தன்னைத் தொழுகைக்காக சுத்திகரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

தொழுகைகளை செவ்வனே நிறைவேற்றிவிட்டு சுவரில் சாய்ந்திருந்தவர், இலேசான நித்திரையில் சில கணங்கள் தன்னை மறந்து விட்டார்.

அதற்குள் அந்த மனிதன் வந்து அந்த ஆட்டம் ஆடுவானென்று அவர் எதிர்பார்க்கவில்லைத்தான்.

வார்த்தைகளைப் பிரயோகிப்பதற்கும் ஒரு இங்கிதமான முறை இருக்கிறதுதானே!

‘இது.. யார் இங்க…? எழும்புங்க…! எழும்புங்க்…! பத்து மணிக்கு ஊரடங்குச் சட்டம். நேர காலத்தோடை இடத்தைக் காலி பண்ணுங்க…’

‘தொழுது போட்டு , விறாந்தையில் தங்கி காலையில் போகத்தான் வந்தன். முந்தியும் இப்படித் தங்கிப் போறது வழக்கம்’

‘இந்தாங்க… அந்தக் காலமெல்லாம் இப்ப இல்ல. யாரையும் தங்கவிட வேண்டாமென்று ரஸ்டிமார் முடிவு. சுணங்காம போங்க..’

‘மரியாதையாக வெளியே போ… ப்ளீஸ் கெட்டவுட்’ என்று சொல்லாமல் சொல்கிறான்.

முனாஸ் மாஸ்டரின் உள்ளத்துள் எரிமலை வெடித்தது.

‘இது ஒரு ஜடம். இதனிடம் பேசிப் பிரயோசனம் இல்லை. இவன்களெல்லாம்..?’

முனாஸ் மாஸ்டரின் உள்மனம் முதன் முறையாகக் கேள்வி எழுப்பியது.

மீண்டும் ஒரு மின் வெட்டு.

பாதை தெள்வி. இலேசான தூறல். சமீபத்தில் எங்கோ இடி முழக்கம்தான். கால்போன போக்கில், அவருடைய நடையின் முடிவு. மீண்டும் புகைவண்டி நிலையத்திற்கே கொண்டு வந்து விட்டிருந்தது.

இரண்டொரு உத்தியோகத்தரைத் தவிர நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. போனதும் முன்னால் போடப்பட்டிருந்த நீண்ட இருக்கை ஒன்றில் ‘கிட்பேக்கை’ வைத்துவிட்டு, கால்களை நீட்டி அமர்ந்து கொண்டார். தலையில் உடைகளிலிருந்தெல்லாம் மழை நீர் வடிந்து கொண்டிருந்தது. தலையை மட்டும் கையால் நீவி விட்டுக் கொண்டார்.

தற்செயலாக ஸ்டேஷன் மாஸ்டரின் கண்களில் பட்டு விட்டார்.

‘ஓ.. நீங்களா? நல்லா நனஞ்சிப் போட்டீங்கள் போலிருக்கு.. சாப்பிடப் போனீங்களே?’

‘சாப்படும் முடிந்துவிட்டது, குளிப்பும் முடிந்துவிட்டது’ என்று நகைச்சுவையாகக் கூறிய முனாஸ் மாஸ்டர், துவாலையை இழுத்தெடுத்து மீண்டும் தலையைத் துடைத்தார்.

இருவரும் சற்றுநேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

‘இருங்க மாஸ்ரர் ஒரு நிமிஷத்தால் வாறன்’ என்று அப்பால் நகர்ந்தார்  எஸ். எம். நொந்து போன முனாஸ் மாஸ்டருக்கு எரிச்சலாக இருந்தது. மீண்டும் வெளியேற்றினால் எங்கே போவது என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

‘மாஸ்ரர் வாருங்கோ..’

ஒன்றும் புரியாமல் அவர் பின்னால் நடந்தார்.

வெளியில் ஒரு மின்வெட்டு.

‘மாஸ்ரர் இதைக் கவனமா வைத்திருங்க. இது முதலாம் வகுப்புப் பிரயாணிகள் தங்கும் அறைத் திறப்பு. உள்ளே உங்களுக்கு எல்லா வசதிகளும் கிடக்கு. உடுப்பை மாற்றி பயமில்லாம நித்திரை கொள்ளுங்க. விறாந்தையில் குளிர். பாதுகாப்பும் இல்லை. காலையில் அறையைப் பூட்டி திறப்பைத் தர மறந்து விடாதீங்க’

அந்தக் குளிரிலும் முனாஸ் மாஸ்டருக்கு வியர்த்து விட்டது.

நிம்மதியான நித்திரைக்குப் பின் விடியல் பிறந்தது.

புகைவண்டி நிலையக் ‘கன்றீனில்’ ஆள் நடமாட்டம் காணப் பட்டது. பிரயாணிகள் மிகச் சிலரே.

மாற்றுடையில் முனாஸ் மாஸ்டர் தூய்மையாக புது மலர்ச்சியுடன் காணப்பட்டார்.

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வந்து, ஸ்ரேஷன் மாஸ்டருக்குத் தமது மனம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பித்து திறப்பை ஒப்படைத்து, தயங்கித் தயங்கி –

‘உங்களது பெயர்…?’

‘தியாகராசா’

வானம் தெளிவாக இருந்தது.

விசேஷ கடிகதிப் புகைவண்டி முனாஸ் மாஸ்டரைச் சுமந்து கொண்டு ஒரு புதுப்பொலிவுடன் கிழக்கு மாகாணம் நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது.

000000000000000000000000000000000000

ப. ஆப்டீன் பற்றிய சிறு குறிப்பு :

ப.ஆப்டீன்11 நவம்பர் 1937 -இல் நாவலப்பிட்டியில் பிறந்த பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் மலாய் வம்சாவளியைச் சேர்ந்தவர்.9 அக்டோபர் 2015 -ல் இவர் காலமானார்.

1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் புகுந்தார். 1960 களில் வேலை காரணமாக நாவலப்பிட்டியில் பணியாற்றிய எழுத்தாளர் நந்தி அவர்களின் ஊக்குவிப்பாலும், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தொடர்பாலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து செயற்பட்டு வந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பன்முக வடிவங்களின் மூலம் தனது படைப்பிலக்கிய பங்களிப்பினை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்து இலக்கியம் வழியாக பணியாற்றி வந்தவ இவரது பல படைப்புக்கள் ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இரவின் ராகங்கள்- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் வெளியீடு, 1987, NCBH, தமிழ்நாடு மீள்பதிப்பு 1990),கருக்கொண்ட மேகங்கள்- (நாவல், ஆசிரியர் பதிப்பித்தது 1999),நாம் பயணித்த புகைவண்டி- (சிறுகதைத் தொகுப்பு, மல்லிகைப்பந்தல் 2003),கொங்காணி (சிறுகதைத் தொகுப்பு, கொடகே வெளியீடு, 2014) என்று இதுவரை மொத்தம் 05 நூல்கள் இதுவரை ஈழத்து இலக்கியப்ப பரப்புக்கு இவரால் கிடைத்துள்ளன.

இதுவரை இவருக்கு கிடைத்த விருதுகளாக, :

1968 ஆம் ஆண்டு இலங்கை Y.M.M.A நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சாந்தமும் சகிப்பும் எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.

1975 ஆம் ஆண்டு பண்பாட்டு அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.

1980 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது நீந்தத் துடிக்கும் மீன்குஞ்சுகள்எனும் சிறுகதை பரிசினைப் பெற்றது.

1987 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது இரவின் ராகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசினைப் பெற்றது.

1999 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய தேர்வில் இவரது கருக்கொண்ட மேகங்கள் அவ்வாண்டுக்கான சிறந்த நாவலுக்கான பரிசினைப் பெற்றது.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசு இவருக்கு கலாபூஷண விருது வழங்கியது.

(Visited 40 times, 1 visits today)