மழைக்காலத்தின் நடுவில் குருதியை நாங்கள் பயிரிட்டபொழுது அது
இத்தனை பெரிதாக வளருமென்று நாங்கள் நினைத்துக்கொண்டதில்லை
ஒரு ஆற்றின் வளைவு அந்த குருதியில் இருந்தது, ஒரு கடலின் உவர்ப்பும்
கூட, குருதியோ பெரும் புரட்சியை பேசிக்கொள்ளவில்லை
வாழ்தலே போதும் என்று அது நிலமெங்கும் பரந்து
அதன்
உயிர்த்தல் நிகழ்ந்தது
மழைக்காலம் எத்தனை கல்லறைகளை சுத்தம் செய்யும்
அந்த மழைக்காலம் நிகழ்ந்தது
எத்தனை பயிர்களின் முன் முனையை துளிர்க்க செய்யும்
அது நிகழ்ந்தது
அந்த மழைக்காலத்தின் வறண்ட நிலங்களில்
நான் ஒரு தீபத்தை வைத்தேன்
அதன் சூடு
குளிர்ந்து போயிருந்த அந்த குருதியை கொஞ்சமேனும் சூடாக்க தவறவில்லை..
000000000000000000000000000
அதையும் தாத்தாவே சொன்னார்
மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த எனது அண்ணாவின் துப்பாக்கியொன்றை தூசு தட்டுவதற்கு கூட
அனுமதிக்கவில்லை யாரும்
அது எனது மூதாதையின் கறள் பிடித்த வேல்கம்பை போல
வரலாறொன்றை
தொடுவதைப்போல கஷ்டம் யாருக்கு தான் இருக்கும் – எங்களுக்கு
ஒரு அழைப்பை கூட, ஒரு குழந்தையின் பெயரைக்கூட, நமது வயல் நிலங்களின்
நெல் முனைகளின் வெல்வெட் கதகதப்பை பற்றி பேசிக்கொள்ள
கால்கள் சிதைந்த சிலைகளின் தன்மையை பேசிக்கொள்ள
அதன்
வரலாறொன்றை
தொடுவதைப்போல கஷ்டம் யாருக்கு தான் இருக்கும் – எங்களுக்கு.. அதனால்
நூதனமாக எங்கள் கதைகளை நாங்கள் தான் சொல்லியாகவேண்டும் யாருக்கு?
யாருக்கு சொல்ல தோன்றுகிறதோ சலிக்காமல் சொல் என்றார் தாத்தா அல்லது
வரலாறு இந்த நூற்றாண்டில் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டது
என்று முடிவடைவோம் என்றார்
ஆதி பார்த்திபன்-இலங்கை