உயிர்த்த ஞாயிறு-2020-கவிதை-நிலாந்தன்

நிலாந்தன்

உயித்தெழுந்த போது
கிறீஸ்து
முரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார்
தோமஸ்
திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும்
கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான்

பூமியின் பாரம் குறையலானது
நாடு
முதியவர்களை
நாய்களைப் போல சாக விட்டது
சைரனும் சேமக்காலை மணியும்
ஒலிக்காத பொழுதுகளில்
இத்தாலியர்கள்
ஆளரவமற்ற தெருக்களை
இசையால் நிரப்பினார்கள்

கள்ளத் தீர்க்கதரிசிகள்
ஓடியொளித்த காலமொன்றில்
மருத்துவர்களே
சமூகத்தின் பேச்சாளர்களாக மாறினார்கள்

காற்றைப் பட்டங்கள் கைப்பற்றின
கடலை மீனினங்கள் கைப்பற்றின
வானத்தைப் பறவைகள் கைப்பற்றின
ஜலந்தரின்
மாசற்ற வானில்
இமயமலை
ஒரு நிலக்காட்சி ஓவியம் போல படர்ந்து கிடந்தது

கிறீஸ்து
மாஸ்க் இல்லாமல்
உயிர்த்தெழும் காலமொன்றுக்காக
பூத்திருக்கிறது கொன்றை

00000000000000000000000

வேட்டைப்பாடல்

வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப் பாடல்களோடு

காட்டுவாசத்தில், கிறங்கி
காட்டுப்புறாக்களின் கழுத்தசைவில்
மன மழிய
வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப்பாடல்களோடு

இனிக் குளங்கள் முறித்துப் பாயாது
ராங்கிகள் நெரித்து
நாயாறு
தாகமாயிராது
வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப்பாடல்களோடு

காடு மாறிய பறவைகளே
வீடு திரும்புங்கள்
அரசர்கள்
ஆற்றங்கரையில்
காலாற நடப்பாரினி
அரண்மனை மேட்டில்
யானைகள் பிளிறுமினி

வேட்டைக்காரர் வருகிறார்
புதிய வேட்டைப் பாடல்களோடு.

18-09-2000

நிலாந்தன்-யாழ்ப்பாணம் – 12.04.2020

நிலாந்தன்

(Visited 377 times, 1 visits today)