நேர்காணல்- லெ முருகபூபதி -கே எஸ் சுதாகர்-அவுஸ்திரேலியா

“படைப்பாளி போதகன் அல்ல. அறநெறி சொல்லும் பிரசங்கியும் அல்ல”

 ‘அரசியலைத் தெரிந்து வைத்துக் கொண்டு எழுதும் எழுத்தாளர்களில் நீங்கள் குறிப்பிடத் தகுந்தவர்’ – எனது இந்தக் கருத்துப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?

மனிதர்களிடத்தில் நாகரீகம் பரவத்தொடங்கிய காலம் முதலே அரசியலும் அறிமுகமாகிவிட்டது. அரசியல்தான் தேசங்களின் தலைவிதி. மக்கள் தேர்தலில் யாருக்கோ வாக்களிக்கிறார்கள். யாரையாவது ஆதரிக்கின்றார்கள். அத்துடன், அரசியல் கருத்தியல் சார்ந்தது. எனவே எவருமே தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை எனச்சொல்லமுடியாது. நான் பத்திரிகையாளனாக உருவாகி படைப்பாளியாக மாறியவன். பத்திரிகையாளனுக்கும் படைப்பாளிக்கும் அரசியல் தெரிந்திருக்கவேண்டும். அரசியலைத் தெரிந்துவைத்துக்கொண்டு எழுதும் எழுத்தாளர்கள்தான் எம்மத்தியில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்கின்றார்கள். கம்பருக்கும் வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் பாரதிக்கும் அரசியல் தெரியும். எனவே நான் விதிவிலக்கல்ல.

ஒப்புநோக்காளர், துணையாசிரியர் என்று ஒரு பத்திரிகையாளராக பணியைத் தொடங்கியவர் நீங்கள். பத்திரிகை உலகம், இலக்கிய உலகம் இந்த இரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாடுகள் எவை ? ஆரம்பத்தில் இதை எப்படிச் சமாளித்தீர்கள்?

பத்திரிகையாளனாகவும் படைப்பாளியாகவும் சமகாலத்தில் இயங்கிவருகின்றேன். நிருபராக பத்திரிகையில் செய்தி மற்றும் செய்தி அறிக்கை எழுதுவது, நேர்காணல்களை பதிவுசெய்வது முதலான பணிகள் இருந்தன. துணை ஆசிரியராகியதும் ஏனைய நிருபர்கள் எழுதியவற்றை செம்மைப்படுத்துவது (Editing), தலைப்பிடுவது முதலான பணிகளில் ஈடுபட்டேன். வாசகருக்கும் சமுதாயத்திற்கும் எது முக்கியம் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு செய்திகளை செம்மைப்படுத்துவது முதலான பணிகள்.அதனால் பத்திரிகையாளன் பணி ஒருவகையில் Team work. படைப்பாளியின் நிலை அப்படியல்ல. அது ஆக்க இலக்கியம் சார்ந்தது. (Creative writing) அது ஒருவகையில் தவம். பாத்திரங்களை சிருஷ்டிப்பது. கதை சொல்லியாக படைப்பு மொழியை உருவாக்குவது. முழுமையாக தன்னிலை சார்ந்து இயங்குவது. படைப்பாளி சிறுகதையிலும் நாவலிலும் சிருஷ்டிக்கும் பாத்திரங்களிலெல்லாம் அவனே இருப்பான். பல்வேறு குணாதிசயங்களை இயல்புகளை வெளிப்படுத்துவான்.
அதேசமயம் ஒரு ஆபத்தும் இருக்கிறது. அதனை நான் உணர்ந்தேன். தொடர்ச்சியாக செய்திகளையே எழுதி செய்திகளை செம்மைப்படுத்திய காலப்பகுதியில்,சிறுகதை எழுதியபொழுது, சில சந்தர்ப்பங்களில் நடைச்சித்திரமாகிவிட்டதையும் அவதானிக்க முடிந்தது. அதனால் மீண்டும் மீண்டும் படித்து திருத்தி எழுத நேர்ந்தது.

வீரகேசரியில் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலப்பகுதியில் எனது ஒரே ஒரு சிறுகதைதான் வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமானது.ஆனால், அங்கு இணைவதற்கு முன்னர் நீர்கொழும்பு பிரதேச நிருபராக பணியாற்றிய வேளையில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கின்றேன்.1972 ஆம் ஆண்டுதான் பத்திரிகை நிருபராகவும் இலக்கியப்பிரதியாளனாகவும் உருவாகி வெளியே எனது பெயர் அறியப்பட்டது. குறிப்பிட்ட 1972 ஆம் ஆண்டில் மல்லிகை, பூரணி, புதுயுகம் முதலான இதழ்களில் எனது முதல்கட்ட சிறுகதைகள் வெளிவந்துவிட்டன.

1975 இல்முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் வெளியானது.1977 இற்குப்பின்னர்தான் கொழும்பில் வீரகேசரி அலுவலகத்துள் ஒப்புநோக்காளராக (Proof Reader) பிரவேசித்தேன்.1972 – 1975காலப்பகுதியில் நான் எழுதிய சில சிறுகதைகளை வீரகேசரியோ, தினகரனோ ஏற்கவில்லை. நான் எழுதிய சிறுதைகளில் பிரதேச மொழிவழக்கு சற்று தூக்கலாக இருந்ததே அதற்குக்காரணம் என்று குறிப்பிட்ட ஆசிரிய பீடங்களில் சொல்லப்பட்டது.

ஆனால், எனது சில சிறுகதைகளை மல்லிகை, பூரணி, புதுயுகம் ஆகியவற்றில் படித்த எம். சிறிபதி எழுத்துலக இளம் பங்காளி என்ற தலைப்பில் எனது சிறுகதைகளை சிலாகித்து தினகரனில் விமர்சனம் எழுதியிருந்தார். ரத்னசபாபதி அய்யர் , அநு. வை. நாகராஜன் உட்பட சிலர் மல்லிகை, பூரணி முதலானவற்றில் தமது கருத்துக்களை எழுதினார்கள்.

எனது சிறுகதைகளைபுறக்கணித்த வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் 1976 ஆம் ஆண்டு எனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய விருது கிடைத்ததும் எனது படத்துடன் செய்திகளை வெளியிட்டன.

ஒரு நூலை வெளியிட்டு இரண்டு வருடங்களின் பின்னர்தான் எனக்கு வீரகேசரி தலைமை அலுவலகத்தில் வேலையே கிடைத்தது.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளர் நீங்கள். அதன் செயலாளராகவும் இருந்துள்ளீர்கள். நீங்கள் கடந்துவந்த இந்தப் பாதையில் தற்போதைய உங்களின் நிலை என்ன? இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடர்ந்தும் தீவிரமாக இயங்கி வருகின்றதா?

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதில் நான் 1973 இல் இணைந்தேன். நான் செயலாளர் அல்ல. தேசிய சபை உறுப்பினராகச் சேர்ந்து பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த 1987 வரையில் அதன் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் கடமையாற்றினேன். அந்த அமைப்பின் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தில் இணைப்பாளராகவும் – சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், தலைமைக்குழுவிலிருந்த சோமகாந்தன் ஆகியோரின் அழைப்பில் சங்கத்தின் முழுநேர ஊழியனாகவும் கடமையாற்றினேன். அப்பொழுது எனக்கு நிரந்தர வேலை ஏதும் கிடைக்கவில்லை. சுமார் நான்கு வருடங்கள் வருவாய்க்காக சிரமப்பட்ட காலம்.

அவர்கள் இருவரும் எனக்கு மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தார்கள். எனது பஸ் போக்குவரத்துக்குத்தான் உதவியது. எனினும் சங்கத்தின் அர்ப்பணிப்புள்ள தொண்டனாகவே இயங்கினேன். மாநாடுகள், கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், கொழும்பில் மாதாந்த கருத்தரங்குகள், சிங்களப்பிரதேசங்களில் தமிழர் உரிமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் கூட்டங்கள் என மிகவும் உற்சாகமாகவும் செயலூக்கத்துடனும் இயங்கினோம். எனது ஊர் நீர்கொழும்பில் இலக்கிய வட்டம் அமைத்து, பேராசிரியர் கைலாசபதி, மல்லிகை ஜீவா, கவிஞர் முருகையன், மு. கனகராஜன், சோமகாந்தன், தெணியான், மொஹிதீன், ராஜஸ்ரீகாந்தன், திக்குவல்லை கமால், உட்பட பல முற்போக்கு எழுத்தாளர்களையும் ‘பூரணி ‘மகாலிங்கம், மு.நித்தியானந்தன், ஸ்ரீபதி, தகவம் இராசையா, வேல் அமுதன், கவிஞர் அம்பி, அன்னலட்சுமி இராஜதுரை, தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, குப்பிழான் சண்முகன், சில்லையூர் செல்வராசன், கமலினி செல்வராசன், மு. பஷீர் முதலானோரையும் அழைத்து பேசவைத்திருக்கின்றேன். மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழும் 1972 இல் வெளியிட்டோம்.

சங்கத்தில் கடலும் வானமும் போன்று இணைந்திருந்த அந்தக்காலம் மறக்கமுடியாதது. அதனை எனது வசந்த காலம் என்றுதான் சொல்வேன். நான் 1987 இல் நாட்டைவிட்டு வெளியேறியதை சங்கத்தினர் பேரிழப்பாகவே கருதினார்கள். எனினும் சங்கத்துடனான தொடர்பு நீடித்தது. அவுஸ்திரேலியாவிலிருந்து சுமார் 11 வருடங்களின் பின்னர் இலங்கை சென்றபொழுது சங்கம் என்னை வரவேற்று உபசரித்தது. 1997 இல் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் சங்கம் நடத்திய முழுநாள் கருத்தரங்கிலும் கலந்துகொண்டேன். சங்கம் மேற்கொண்ட பல ஆக்கபூர்வமான பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கினேன்.

சுருக்கமாகச் சொன்னால் சங்கம் எனது மற்றுமொரு தாய்வீடு. ஆனால் – இன்று சங்கம் முற்றாக இயங்காமல் தேங்கிவிட்டது. அதன் முக்கிய தூண்களாக விளங்கிய பலர் மறைந்துவிட்டார்கள். நான் 1987 இல் புலம்பெயர்ந்த பின்னரும் சங்கம் சிறப்பாகத்தான் இயங்கியது. சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் கனடாவுக்கும் காவலூர் ராஜதுரை அவுஸ்திரேலியாவுக்கும் புலம்பெயர்ந்தனர். எச்.எம்.பி. மொஹிதீன், இளங்கீரன், மு. கனகராஜன், ராஜஸ்ரீகாந்தன்,சோமகாந்தன் ஆகியோர் மறைந்தனர். இடையில் பிரேம்ஜி இலங்கை சென்று சங்கத்தை புனரமைத்து திக்குவல்லை கமாலை செயலாளராக்கினார்.

ஆனால், நீர்வை பொன்னையன், மல்லிகை ஜீவா, பேராசிரியர் சிவத்தம்பி, முகம்மது சமீம் முதலான தலைமைக்குழு உறுப்பினர்களினால் இணைந்து இயங்க முடியாது போய்விட்டது. சங்கம் இயங்கியிருக்க வேண்டும். துர்ப்பாக்கியவசமாக அது செயல் இழந்துவிட்டது. நான் தொடர்ந்தும் இலங்கையில் இருந்திருந்தால் இயங்கவைத்திருப்பேன் என்ற திடமான நம்பிக்கையும் எனக்குண்டு.
ஒரு சங்கத்தை தொடர்ச்சியாக இயங்கவைப்பதற்கு தியாக மனப்பான்மையும் அர்ப்பணிப்புணர்வும் செயலூக்கமும் வேண்டும்.

நீங்கள் இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். உங்களின் முதல் தொகுப்பான ‘சுமையின் பங்காளிகள்’ சிறுகதைத்தொகுதிக்கு இலங்கையின் சாகித்தியமண்டலப் பரிசு கிடைத்தது. அதன் பின்னர் பல சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தும் , ஒரு தொகுதிக்குத்தன்னும் சாகித்தியமண்டலப் பரிசு கிடைக்கவில்லையே…! அப்போது அறிமுகப் படைப்பாளியாக இருந்த காரணத்தினால் உங்களுக்கு அந்தப் பரிசைத் தந்தார்களா…? அல்லது அதன்பின்னர் வந்த தொகுதிகள் அனைத்துமே அந்தப் பரிசுக்குத் தகுதியில்லையா…? இந்த சாகித்திய மண்டலப் பரிசு பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

இந்தக்கேள்வி எனக்கு விநோதமாகப்படுகிறது. முதல் சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் 1975 ஆம் ஆண்டு வெளியானது.வெள்ளீய எழுத்து அச்சுக்கள் கோர்த்து அச்சிடப்பட்டது.அதில் சில கதைகளுக்கு நானே அச்சுக்கோர்த்தேன். எனது நண்பர்கள் நடத்திய நீர்கொழும்பு சாந்தி அச்சகத்தில் வெளியானது. இன்று அவ்வாறு நூல்கள் அச்சிடப்படுவதில்லை. நாம் கணினி யுகத்திற்கு வந்துவிட்டோம்.

அக்காலப்பகுதியில் கொழும்பில் தேசிய சுவடிகள் திணைக்களம் இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. இலங்கையில் எந்த மொழியிலும் வெளியாகும் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகளின் பிரதிகளை இந்தத்திணைக்களத்திற்கு அனுப்பவேண்டும். இன்றும் அந்த நடைமுறை இருக்கும் என நம்புகின்றேன். எனது நூலின் பிரதிகள் சில இந்தத்திணைக்களத்திற்கு அச்சகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்டு அந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட நூல்களை கலாசாரத் திணைக்களம் வாங்கும்.சாகித்திய மண்டலத்தில் தமிழ்ப்பிரிவு, சிங்களப்பிரிவு இயங்கும். அதில் அங்கம் வகிப்பவர்கள் நூல்களை தேர்வுசெய்து, முதலில் சில இலக்கிய விமர்சகர்களின் பார்வைக்கு பரிந்துரைக்காக அனுப்புவார்கள். அவர்களின் பரிந்துரையுடன் சாகித்திய மண்டல உறுப்பினர்களும் கூடி ஆலோசித்த பின்னரே பரிசுக்கு தெரிவுசெய்வார்கள்.

இந்த நடைமுறைகளையெல்லாம் சாகித்திய மண்டலப்பரிசுபெற்றதன் பின்னரே நான் தெரிந்துகொண்டேன். ஒருநாள் மாலை 6 மணிக்கு இலங்கை வானொலி தமிழ்த்தேசிய சேவையில் ஒலிபரப்பான செய்தியில் எனது நூலுக்கும்சாகித்திய பரிசு கிடைத்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை நான் செவிமடுக்கவில்லை. எங்கள் வீட்டில் அப்பொழுது வானொலிப்பெட்டியும் இருக்கவில்லை. குடும்பம் பொருளாதார நெருக்கடியில் தவித்த காலம். நண்பர் செல்வரத்தினம் ( இவர் தற்பொழுது பிரான்ஸில் இருக்கிறார்.)செய்தி கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் என் வீடு நோக்கி ஓடிவந்து சொன்னார். அப்பொழுதும் நான் அதனை நம்பவில்லை.பின்னர் இரவு 9 மணிக்கு அயல்வீட்டு வானொலியில் செய்தியை கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அச்சமயம் சிறுகதைக்காக எனக்கும் நண்பர் சாந்தனுக்கும் சாகித்திய பரிசு கிடைத்தது. செங்கை ஆழியானுக்கு பிரளயம் நாவலுக்கு கிடைத்தது.அத்துடன் ஆத்மஜோதி முத்தையா, மகாஜனா கல்லூரி அதிபர் சண்முகசுந்தரம் ஆகியோருக்கும் அவர்கள் எழுதிய நூல்களுக்காக சாகித்திய பரிசு கிடைத்தது.

விருது என்பது சிறிய அங்கீகாரமே. என்னைப் பொறுத்தவரையில் எனது முதல் கதைத்தொகுதியில் முற்றிலும் புதிய பிரதேச மண்வாசனை இருந்தது. ஈழத்து இலக்கியத்திற்கு அச்சமயம் புதிய வரவாகும். பரிசு கிடைக்கும் முன்னரே அந்தத்தொகுதி பற்றி இலங்கை வானொலி கலைக்கோலம் நிகழ்ச்சியிலும் விமர்சிக்கப்பட்டதாக அறிந்தேன். ஆனால் அதனையும் நான் கேட்டதில்லை. அந்தப்பரிசு எதிர்பாராத நிகழ்வுதான்.

1987இன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள். 1989 இல் வெளியானது. அடுத்து வெளிச்சம், எங்கள் தேசம், நினைவுக்கோலங்கள் என்பனவும் அவுஸ்திரேலியாவிலிருக்கும் காலத்தில் வெளியானவை. கங்கை மகள் 2005 இல் இலங்கையில் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்தது.

ஒரு படைப்பாளி எழுதும் அத்தனை நூல்களுக்கும் சாகித்திய பரிசு வழங்கமுடியுமா…?

சாகித்திய பரிசுபெற்றால்தான் சிறந்த படைப்பு இல்லையேல் சிறந்த படைப்பு அல்ல எனச்சொல்லத்தான் முடியுமா…? எத்தனையோ சிறந்த படைப்புகளுக்கு – சிறந்த படைப்பாளிகளுக்கு இன்னமும் இந்த சாகித்திய பரிசு கிடைக்கவில்லையே….! அதனால் அவர்களை இலக்கிய உலகம் புறக்கணித்துவிட்டதா…? நான் எழுதத்தொடங்கிய காலத்தில் பல படைப்பாளிகள் அறிமுகமானார்கள். ஆனால், அறிமுகமான எல்லாப் படைப்பாளிகளுக்கும் இந்தப்பரிசு கிடைத்ததா…? எனவே நான் அந்தப்பரிசை எதிர்பார்த்து எழுதவில்லை. கிடைத்தவரையில் மகிழ்ச்சி.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் நான் எழுதி வெளியிட்ட எந்தவொரு நூலையும் பரிசுகளுக்காக அனுப்பவில்லை. ஆனால் 2001 இல் வெளியான எனது முதல் நாவல் பறவைகளுக்கு சாகித்திய பரிசு 2002 இல் கிடைத்தது.இலங்கையிலிருந்த எனது மனைவி மாலதி கொழும்பு இசுருபாயாவில் விண்ணப்ப படிவம் பெற்று நூலின் பிரதிகளை அங்கு சேர்ப்பித்தார். அதற்கு அவ்வாண்டுக்குரிய சாகித்திய விருது கிடைத்த செய்தியை எனது அம்மா, ரூபவாஹினி தொலைக்காட்சியில் கேட்டுவிட்டு எனக்குத் தெரிவித்தார். இந்நிகழ்வும் எதிர்பாராதது. அம்மாவின் விருப்பத்திற்காக விமானம் ஏறி, அம்மாவுடன் சென்று பெற்றுக்கொண்டேன். முதல் தடவை முதலாவது ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவவிடமும் இரண்டாவது தடவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடமும் பெற்றுக்கொண்டேன். இரண்டுமேஎதிர்பாராத நிகழ்வுகள்தான்.

சிறுகதைப் படைப்பில் நீங்கள் அடைந்துள்ள உச்சங்கள் எவை எனச் சொல்வீர்கள்.. .?

உச்சங்கள் என்று எதனைத்தான் சொல்வது….? பரிசுகள் உச்சங்களை தீர்மானிப்பதில்லை. வாசகர்களிடம் பெறும் வரவேற்புத்தான் உச்சம். சிறுகதைகளை படிக்கும் வாசகனின் சிந்தனையில் அது ஊடுருவவேண்டும். படித்த பின்னர் சில காலம் ஏன் நெடுங்காலம் என்றும் சொல்லலாம்.வாசகரின் மனதில் ஒரு சிறுகதை நின்றால் அதுதான் உச்சம். எனது சில கதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றை மொழிபெயர்த்தவர்கள் பார்வையில் அவை உச்சமாக இருந்திருக்கலாம்.

தொகுப்புகளுக்காக தேர்வு செய்பவர்கள் உச்சமான கதைகளைத்தான் தெரிவு செய்வார்கள். அவ்வாறு பனியும் பனையும் தொகுப்பு – இலங்கை சுதந்திரம் பெற்று 50 ஆண்டு நிறைவில் வெளியிடப்பட்ட தொகுப்பு,செங்கை ஆழியான் தொகுத்த நூல் ஆகியனவற்றிலும் எனது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. படைப்பதுடன் படைப்பாளியின் பணி முடிந்துவிட்டது. அதன் பின்னர் அதனை வாசகர்தான் உச்சமா, தாழ்வா என்பதை தீர்மானிக்கின்றனர்.

உங்கள் படைப்புகளில் வட்டார மொழி வழக்கின் தாக்கம் எத்தகையது?

நான் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த பிரதேசம் நீர்கொழும்பு. எனது வீட்டின் அருகே கடல். அலையோசை கேட்டுக்கொண்டிருக்கும். எமக்காக நடு இரவில் ஆழ்கடல் சென்று மீன்பிடித்துவரும் கடற்றொழிலாளர்கள் எனது நண்பர்கள். அவர்களின் பேச்சுமொழி வழக்கு இனிமையானது. சுவாரஸ்யமானது. அவர்கள் பேசுவது தமிழ்தான். அவர்களின் மொழியை சரளமாகப்பேசுவேன்.அவர்களுடன் உரையாடும் வேளையில் அவர்களின் மொழியில் எனது பேச்சைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

வெளிநாடுகளில் எமது தமிழர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும்வெள்ளை இனத்தவர்கள், முதலில் வணக்கம் எனச்சொன்னதும் எம்மவர்கள் கைதட்டி சிரித்து வரவேற்பதைப் பார்ப்பீர்கள். அதுபோன்றது அவர்களின் மகிழ்ச்சி என வைத்துக்கொள்ளுங்கள். எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம். நீர்கொழும்பு மீனவ மக்களின் பிரதேச மொழி வழக்குடன் வெளியானது. அதனை தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீனுடன் நினைவுபடுத்தி மீனவ மக்களின் கனவுகளையும் ஒப்பிட்டு எழுதினார் ரத்னசபாபதி அய்யர்.

தமது பல்கலைக்கழக ஆய்வேட்டில் எனது கதைகளின் மாந்தர்களின் பேச்சுமொழிவழக்கையும் பதிவுசெய்தார் வன்னியகுலம். அந்தப்பிறவிகள் சிறுகதையை மூதுபுத்து சிங்கள நாடகத்திற்கும் மகாகவி உருத்திரமூர்த்தியின் புதியதொரு வீடு கவிதை நாடகத்திற்கும் ஒப்பிட்டனர். புலப்பெயர்வு வாழ்வில், தொடர்ந்தும் அந்தப் பிரதேசமொழி வழக்கில் எழுத முடியாமல் புதிய களத்தை சித்திரிக்க வேண்டியதாகிவிட்டது. மீண்டும் அங்கு சென்று சில மாதங்கள் தங்கினால் அம்மக்களின் மொழியில் எழுத முடியும். நான் இழந்தது அதிகம்.

நீங்கள் இலக்கியப் பிரவேசம் செய்ய காரணமாக இருந்தவர் டொமினிக் ஜீவா. 48 வருட காலமாக வெளிவந்த ‘மல்லிகை’ சஞ்சிகை இடையில் நின்றுபோய் விட்டது. நீங்கள் அதிகம் நேசிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜீவா. மல்லிகை செயலிழந்தபோது அதைத் தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவில்லையா…? குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களாவது அது வெளிவந்திருந்தால் இலங்கையில் அது பெரும் சாதனையாகப் பேசப்பட்டிருக்கும் அல்லவா..?

இலங்கையில் மல்லிகையின் வரலாற்றை அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களுடன்தான் பார்க்க வேண்டும். முதலில் யாழ்ப்பாணத்திலிருந்தும் பின்னர் கொழும்பிலிருந்தும் மல்லிகை வெளியானது. ஜீவாவின் இடப்பெயர்வுக்கு யாழ்ப்பாணத்தில் நிலவிய அரசியல் கொந்தளிப்பும் காரணம். ஒரு தடவை அவர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்றும் ஒரு செய்தி வெளியாகி, அவுஸ்திரேலியாவில் ஒரு மாநிலத்திலிருந்து நண்பர் ஒருவர் ஊர்ஜிதப்படுத்த என்னுடன் தொடர்புகொண்டார்.

நான் பதறியடித்து, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் தொடர்புகொண்டு உண்மையை அறிந்தேன். மல்லிகை ஜீவாவை இறுதியாக இந்த (2015 இல்) ஆண்டு தொடக்கத்திலும் சந்தித்துவிட்டு வந்து, மல்லிகை ஜீவாவும் டொமினிக்ஜீவாவும் என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றேன். நீங்கள் அதனைப்படித்தீர்களா என்பது தெரியவில்லை. மல்லிகை வெளியானதற்கும் 48 ஆண்டுகளின் பின்னர் மல்லிகை வெளிவராமல் நின்றுவிட்டதற்கும் ஜீவாவே காரணம். அவர் கொழும்பு வந்த பின்னர் பொருளாதார ரீதியில் அவருக்கு போதிய ஆதரவு இருந்தது. வெளிநாடுகளிலிருந்து செல்லும் எமது எழுத்தாளர்கள் அவரை சந்தித்து திரும்புவார்கள். கொழும்பு கதிரேசன் வீதியில் கணினியில் மல்லிகை இதழ்களை பதிவுசெய்வதற்கு முழு நேர ஊழியர் இருந்தார். மேமன் கவி, ம. பாலசிங்கம், ப. ஆப்தீன் முதலான இலக்கியவாதிகள் மற்றும் பூபாலசிங்கம் புத்தக நிலைய அதிபர் ஸ்ரீதரசிங் உட்பட பலர் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள்.

எதிர்பாராத விதமாக ஜீவா சுகவீனமுற்றார். ஜீவா பொதுவுடமையில் நம்பிக்கைவைத்து அரசியல் பிரவேசம் செய்திருந்தாலும் , மல்லிகையை பொறுத்தமட்டில் அவருக்கு இந்த பொதுவுடமையில் நம்பிக்கை இல்லை. கூட்டாக இணைந்து இலங்கையில் வெளியான சில இலக்கிய சிற்றிதழ்கள் கருத்து வேறுபாடு – குழுவாதங்களினால் நின்றுவிட்டன. அச்சகம் வைத்து இதழ்கள் வெளியிட்டவர்களும் இந்தத்துறையில் தோற்றுப்போனார்கள். தமது சுகவீனத்தை காரணமாக்கி, தன்னுடன் தொடர்ந்து நின்று இயங்கியவர்களிடம் ஒப்படைத்து, மல்லிகையை அவர் வெளியிட்டிருக்கலாம். ஆனால் – அவருக்கு இந்தக் கூட்டணிகளில் நம்பிக்கை இல்லை.

இன்றைய கணினி யுகத்தில் அதனை இணைய இதழாக வெளியிட்டிருக்கலாம். ஆனால், ஜீவாவுக்கு இணைய இதழ்கள் – கணினி முதலானவற்றில் பரிச்சயம் இல்லை. தமது மகன் திலீபன் மல்லிகையை நடத்துவார் என்று நம்பியிருந்தார். திலீபன் கொழும்பில் தமக்குச்சொந்தமான இரண்டு பிரபலமான ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அதனால் அவராலும் மல்லிகை வெளியாவது சாத்தியமில்லை. தமிழகத்தின் தாமரை இதழை தோழர் ஜீவானந்தம் தொடக்கினார். அது கம்யூனிஸ்ட் கட்சியின் இதழ். அவர் மறைவின் பின்னரும் அவ்வப்பொழுது வருகிறது. நிறுவனர் தோழர் ஜீவானந்தம் என்று ஒவ்வொரு இதழிலும் பதிவுசெய்துவருகிறார்கள். அவ்வாறாகிலும் நண்பர்களை வைத்து ஜீவா மல்லிகையை வெளியிட்டிருக்கமுடியும். இந்த ஆலோசனைகள் அவருக்கு சொல்லப்பட்டது.

ஆனால், பயனில்லை. மல்லிகை ஒரு சகாப்தம். அவ்வளவுதான். ஜீவா பற்றி ஒரு நூலும் பல கட்டுரைகளும் ஏற்கனவே எழுதிவிட்டேன். பழைய மல்லிகை இதழ்களை நீங்கள் நூலகம் இணையத்தில் வாசிக்கலாம்.

நான் உங்களிடம் கேட்பது அதுவல்ல. நண்பர்களை வைத்து ஜீவா மல்லிகையை வெளியிட்டிருக்க முடியும்| என்று நீங்கள் சொல்கின்றீர்கள். நண்பர் முருகபூபதி மல்லிகையைத் தொடர்ந்து நடத்துவார் என்று ஜீவா உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாக அறிகின்றேனே!

என் மீது ஜீவா இதுவிடயத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் என்று எதனை வைத்துச்சொல்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம்….? நான் இருப்பது அவுஸ்திரேலியாவில். அவர் கொழும்பில். இந்நிலையில் சாத்தியமேயில்லை. அவர் என்னிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கலாம் என்பது வெறும் ஊகம் என்றே நான் நினைக்கின்றேன். ஆனால் சிலவேளை நான் இலங்கையில் இருந்திருப்பின் அவர் என்னுடன் ஆலோசித்திருக்கலாம். அவரை 2011 இல் சந்தித்த பின்னர் மீண்டும் 2015 தொடக்கத்தில்தான் சந்தித்தேன். மல்லிகை 2012 இல் நின்றிருக்கவேண்டும். இறுதியாக நான் அவரைச் சந்தித்தபொழுது நாம் மல்லிகை பற்றியே பேசவில்லை. அவரது உடல் நலன் பற்றித்தான் உரையாடினோம். ஆனால், அவர் மல்லிகை வெளியீடு விடயத்தில் என்னை நம்பியிருந்தார் என்பது நீங்கள் சொல்லித்தான் அறிகின்றேன்.

அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பவற்றை ஸ்தாபித்ததில் நீங்கள் பெரும் பங்கு கொண்டுள்ளீர்கள். அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு நீங்கள் செய்த இலக்கியம் சார்ந்த – சாராத முயற்சிகள் எவை…?

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பன கலை, இலக்கியம் சார்ந்த அமைப்புகள். கல்வி நிதியம் கல்வி சார்ந்தது. அகதிகள் கழகம் அகதிகள் நலன் சார்ந்தது. எனது புலப்பெயர்வு எதிர்பாராதது. எனது தம்பிமார் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றபோதிலும் நான் அவ்வாறு வெளியே செல்ல விரும்பியிருக்கவில்லை. எனக்கு எனது நாட்டின் மீதும் பிறந்த ஊரின் மீதும் அளவுகடந்த நேசம். ஆனால், அரசியல் நெருக்கடியிலிருந்து நானும் தப்பவில்லை. இதுபற்றி ஏற்கனவே எனது கட்டுரைகளில் எழுதிவிட்டேன்.

பத்திரிகையிலிருந்தபொழுது, போர்க்காலச் செய்திகளையே எழுதினேன். தினமும் வடக்கு – கிழக்கு மாகாண நிருபர்களுடன் தொடர்பில் இருந்தேன். இறுதியாக போர்நெருக்கடி தொடர்பான செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக வடமராட்சிக்கு பயணித்தேன். (இதுபற்றியும் எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் பதிவு செய்துள்ளேன்.) நீடித்த போர் பெண்களை விதவைகளாக்கும் – குழந்தைகளை பெற்றவர்களை இழந்த அனாதைகளாக்கும். மக்களை அகதிகளாக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன். நீடித்த போர் தரப்போகும் வெகுமதிகள் அவைதான் என்பதை தெரிந்துகொண்டேன்.

உள்நாட்டுப்போர் நெருக்கடியை காரணம் காண்பித்து இந்நாட்டில் அகதியாக இணைவதற்கு விண்ணப்பித்தபொழுது எனக்குரிய தார்மீகக்கடமையையும் உணர்ந்துகொண்டேன். பத்திரிகையாளன், படைப்பாளி எப்பொழுதும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்கவேண்டும்.பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கவிதை எழுதுவதைவிட அம்மக்களுக்கு பயன்தரக்கூடிய பணியில்ஈடுபடுவது மேலானது. அவர்களின் வாழ்வாதாரம் முக்கியமானது.

ஏற்கனவே சொன்னதுபோன்று குழந்தைகள் போரிலே தமது தந்தையரை இழந்திருந்தனர். சிலர் காணாமல் போய்விட்டனர்.அக்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவி, அவர்களை தூக்கிவிட்டால் அவர்கள் தமது குடும்பத்தை தூக்கிவிடுவார்கள். அதனால் நண்பர்கள் சிலருடைய ஆதரவுடன் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை 1988 இல் உருவாக்கினேன். அப்பொழுது நான் நிரந்தர வதிவிட உரிமையற்று ஒரு அகதியாகத்தான் இந்த நாட்டில் வாழ்ந்தேன். எனது குழந்தைகளை அழைத்துப்பார்ப்பதற்கு சுமார் நான்கு வருடங்கள் ஏக்கத்துடன் காத்திருந்தேன். என்னைப்போன்று பல குடும்பத்தலைவர்கள் தமது குடும்பத்திற்காக காத்திருந்தார்கள்.

இங்கிருந்த தமிழ் அமைப்புகள் தமிழ் ஈழக்கனவுடன் இயங்கின. ஆனால்,வந்த அகதிகள்,தமது வதிவிட உரிமை பற்றிய கனவுடன் வாழ்ந்தனர். அவர்களின் நலன்களை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்டது தமிழ் அகதிகள் கழகம்.

இந்தக்கழகம் இங்கு வந்த அகதிகளின் நலன் பற்றி மாத்திரம் சிந்திக்காமல் தமிழ்நாடு மண்டபம் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் அகதிகளுக்காக உடைகள் சேகரித்தும் அனுப்பியது. கல்வி நிதியமும் அகதிகள் கழகமும் ஒரே காலப்பகுதியில் உருவாகி சிறப்பாக இயங்கின.ஆனால் – எனக்கிருந்த வேலைச்சுமைகளினால் நான் அகதிகள் கழகத்தின் பணிகளை குறைத்து கல்வி நிதியப்பணிகளில் மூழ்கினேன். இன்னமும் இதிலிருந்து வெளியே வரவில்லை. வரமுடியவில்லை.

அகதிகள் கழகம் பல பயனுள்ள பணிகளை முன்னெடுத்தது.ஆயினும் காலப்போக்கில் அது செயல் இழந்தது. கல்வி நிதியத்தை எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவை மெல்பனில் 1989 ஆம் ஆண்டு நடத்தியபொழுது அறிமுகப்படுத்தியதுடன் நூல் விற்பனையில் கிடைத்த பணத்தை நிதியத்திற்கே வழங்கி அதனை வளர்த்தெடுத்தேன். அதனை இன்று பலர் முன்மாதிரியாகக் கொண்டிருப்பதையும் அவதானிக்கின்றேன். கல்வி நிதியம் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வத்தொண்டு நிறுவனமாக 27 ஆண்டுகாலமாக தங்கு தடையின்றி இயங்கிவருகிறது.

இங்கிருந்த தமிழ்ச்சங்கம் தமிழ் உணர்வோடு இயங்கினாலும் கலை, இலக்கியப் பிரக்ஞையற்றவர்களின் கைகளில்தான் தங்கியிருந்தது. அவர்கள் எதனையும் தமிழ் ஈழக்கனவுடன்தான் அணுகினார்கள். அது சார்ந்த பேச்சாளர்களைத்தான் அழைத்துப் பேச வைத்தார்கள்.  எமது தமிழ்க்குழந்தைகளுக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்யும் நிகழ்ச்சிகளையும் கலை, இலக்கிய விழாக்கள், நாவன்மைப்போட்டிகள் நடத்துவதற்கும் ஒரு களம் தேவைப்பட்டது. அதனால் உருவானது தமிழர் ஒன்றியம். இந்த அமைப்புத்தான் அவுஸ்திரேலியாவில் முதல் தடவையாக கலை விழாவையும் பாரதி விழாவையும் முத்தமிழ் விழாவையும் நாவன்மைப் போட்டிகளையும் நடத்தியது. மெல்பனில் கலை, இலக்கியப்பிரக்ஞையை அறிமுகப்படுத்தியது. ஆனால் – அதன்பின்னர் பலரும் உதிரிகளாக செயல்படத்தொடங்கியதும் அந்த அமைப்பும் செயல் இழந்துபோனது.

சுமார் ஐந்து ஆண்டுகள் நீடித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு காத்திருந்து, இந்நாட்டில் வாழும் கலை, இலக்கிய , ஊடகவியலாளர்களை இணைத்து கருத்துப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழாவை ஏற்பாடு செய்தேன். பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். சிட்னி, கன்பராவிலிருந்தும் கலை, இலக்கியவாதிகள் வருகைதந்தனர்.மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரும் வெளியிட்டோம். இன்று கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் ஞானசேகரனும் அவரது மனைவியும் வருகை தந்தார்கள். அவருக்கும் ஞானம் என்ற இதழைத்தொடங்குவதற்கு அவருக்கு கிட்டிய மெல்பன் சந்திப்பு அனுபவங்களும் தூண்டுகோலாக இருந்திருக்கும். அவர்கள் இருவரதும் நூல்களின் வெளியீடும் மெல்பனில் நடந்திருக்கிறது. அவர் மெல்பன், சிட்னி ,கன்பரா மாநில எழுத்தாளர் விழாக்களிலும் கலந்துகொண்டார்.ஞானம் அவுஸ்திரேலியா சிறப்பிதழும் வெளியாகியிருக்கிறது.ஞானசேகரன் அவுஸ்திரேலியா பற்றிய பயண இலக்கிய நூலும் எழுதியுள்ளார்.

இலக்கியம் சார்ந்தும் இலக்கியம் சாராதும் இரண்டு தளங்களில் தொடர்ந்து இயங்கிவருகின்றேன். அதற்குப்பக்கபலமாக இருந்தவர்கள்,இருப்பவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்துகொண்டிருப்பேன்.  படைப்பாளி தானும் இயங்கி மற்றவர்களையும் இயங்கவைக்கவேண்டும். பதவிகளுக்காக அமைப்புகள் உருவாகக்கூடாது. அமைப்புகளை இயங்கவைப்பதற்குத்தான் நிருவாகத்திற்கு பதவிகள் தேவை.

எழுத்துத் துறையைப் போல பல காலமாக நீங்கள் பயணித்துச் செல்லும் இன்னொரு அமைப்பு ‘இலங்கை மாணவர் கல்வி நிதியம்’. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்த மா.க.நி அமைப்பினால் எட்டப்பட்ட சாதனைகள் எவை..? சந்தித்துக் கொண்ட சங்கடங்கள் எவை?

கல்வி நிதியம் தொடங்கப்பட்டதன் காரணத்தை இதற்குமுதல் சொல்லிவிட்டேன். நிதியம் தொடங்கப்பட்ட காலத்தில் என்வசம் பயணிப்பதற்கு கார் இருக்கவில்லை. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை காலத்தில் ஒரு பேக்கையும் தூக்கிக்கொண்டு புறப்பட்டுவிடுவேன். தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று நிதியத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து அன்பர்களை திரட்டுவேன். பாதிக்கப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள், பெற்றவர்களின் மரணச் சான்றிதழ்களை காண்பித்தபொழுது, ” இலங்கையில் விதானைமாருக்கு ஐம்பது ரூபா கொடுத்தால் போலி மரணச்சான்றிதழ்களும் தருவார்கள் “எனவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களில் அவர்களின் கழுத்தில் – காதில் மின்னினால் வசதிபடைத்தவர்கள் என்று சொன்னவர்களும் எரிச்சலூட்டியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அய்ரோப்பா மற்றும் கனடா அமெரிக்காவிலிருந்தும் அன்பர்கள் உதவினார்கள். ” தமிழ் ஈழம் விரைவில் அமையும்.அப்பொழுது இந்த நிதியங்கள் அவசியமற்றது. வீணாக நேரத்தை செலவிடுகின்றேன் ” என்று கடிதம் எழுதியவர்களும் இருக்கிறார்கள். எனினும் எமது பணிகளை அவதானித்த நல்லெண்ணம் படைத்த பல அன்பர்கள் தாமாக முன்வந்து உதவினார்கள். சிட்னியில் இயங்கிய தமிழர்களுக்கான மனித உரிமை அமைப்பு 25 ஆயிரம் அவுஸ்திரேலியன் ($25,000-00) வெள்ளிகளை வழங்கியது. அதனை வங்கியில் நிரந்தரவைப்பிலிட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டியிலிருந்தும் உதவும் அன்பர்கள் கிடைக்காத மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கினோம். பின்னர் எமது நிதியமும் காலத்துக்காலம் நிதி சேகரித்து தற்பொழுது மொத்தமாக 35 ஆயிரம் ($35,000-00) வெள்ளிகளை நிரந்தர வைப்பிலிட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டியையும் மாணவர்களுக்காக பயன்படுத்துகின்றோம்.

போர் 2009 ஆம் ஆண்டு முடிவுற்றதும் பல அன்பர்கள் எமது நிதியம் ஊடாக உதவிபெறும் மாணவர்களை நேரில் சென்று பார்த்துவருகின்றனர். நானும் வருடந்தோறும் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குச்சென்று உதவி பெறும் மாணவர்களை நேருக்கு நேர் சந்தித்து தகவல் அமர்வு – ஒன்று கூடல் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றேன். வருடந்தோறும் கல்வி நிதியத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. ஆண்டறிக்கை – நிதியறிக்கை பரிசீலிக்கப்படுகின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை புதிய பரிபாலன சபை தெரிவுசெய்யப்படுகிறது. எவரும் போட்டி மனப்பான்மையுடன் பதவிகளுக்கு வருவதில்லை.1988 இல் இந்த நிதியத்தை தொடக்கினேன். கடந்த 2014 ஆம் ஆண்டு நிதியத்தின் வெள்ளி விழாவையும் நடத்தினோம். ஆனால், இதுவரையில் நான் இந்த அமைப்பின் தலைவராகவில்லை. தொடர்ந்தும் ஒரு தொண்டனாகவே இயங்குகின்றேன்.

இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்துள்ளனர். பலர் பல்கலைக்கழகம் சென்று பட்டதாரிகளாகியுள்ளனர். தனியார் துறைகளில் அரச பணிகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பாடசாலை அதிபர்களாக ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்றனர். ஒரு மாணவி தற்பொழுது பிரதிக்கல்விப்பணிப்பாளர். ஒரு மாணவன் தற்பொழுது வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் செயலாளர். மற்றும் ஒரு மாணவர் இலங்கையில் World Vision இல் பணியாற்றுகிறார். இப்படி பல நல்ல செய்திகள். கடந்த ஆண்டு இறுதியில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்ற எமது நிதியத்தின் உதவிபெற்ற இருபது மாணவர்கள் பட்டதாரிகளாகியுள்ளனர். அவர்களை கடந்த பெப்ரவரியில் நேரில் சந்தித்து பிரியாவிடை நிகழ்ச்சியையும் நடத்திவிட்டுத்தான் திரும்பினேன்.

இது இவ்விதமிருக்க 2009 மே மாதம் போர் முடிவுற்ற நிலையில் அகதி முகாமிலிருந்து வவுனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவான பத்து மாணவர்களுக்கு உதவியதுடன் அவர்களின் போக்குவரத்துக்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கினோம். இம்மாணவர்களும் தமது பல்கலைக்கழக பயற்சி நெறியை முடித்து பட்டதாரிகளாகிவிட்டனர்.அத்துடன் 350 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளி மாணவர்களை புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவித்து, அவர்களுக்கும் கல்வி வழங்கி பெற்றோர்களுடன் இணைத்துவிட்டோம். இந்தப்பணியில் நாம் ஈடுபட்டு ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு நண்பர் டொக்டர் நடேசன் முக்கிய காரணம். அவரது தூண்டுதலினால்தான் நிதியம் இந்தப்பணியிலும் ஈடுபட்டது.

2004 ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தின் பின்னர் இரண்டு பெரிய கொள்கலன்களில் உடைகள், பாய்கள், உலர் உணவுகள் சேகரித்துக்கொண்டு இலங்கை சென்று வன்னிக்கும் கிழக்கிலங்கைக்கும் விநியோகித்தோம். சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு புலமைப்பரிசில் வழங்கி அவர்களையும் பட்டதாரிகளாக்கிவிட்டோம்.
நிதியத்தின் தோற்றம் வளர்ச்சி பயன்பாடு பற்றிய விரிவான நீண்ட கட்டுரையை கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நிதியத்தின் வெள்ளிவிழாவின்பொழுது எழுதியிருக்கின்றேன்.

அத்துடன் எங்கோ யாரோ யாருக்காகவோ என்ற சிறுகதையையும் முன்னாள் போராளி மாணவர்கள் பற்றியும் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றியும் எழுதியுள்ளேன். அச்சிறுகதை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ‘உதயம்’ என்ற இருமொழி மாதப் பத்திரிகை பல வருடங்களாக வெளிவந்து,இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னர் நின்று போய் விட்டது.’உதயம்’ ஒரு புலி எதிர்ப்புப் பத்திரிகை.நீங்கள் துணை ஆசிரியராக இலக்கியப் பிரிவுக்கும் பொறுப்பாக இருந்தீர்கள். டாக்டர் நடேசன் தீவிர புலிஎதிர்ப்பாளர். அப்படி புலிஎதிர்ப்பாளராக மாறுவதற்கு அவருக்கு ஒரு காரணம் இருந்தது.புலிகளால் எந்தவொரு பாதிப்பிற்கும் ஆளாகாத நீங்கள் ஏன் அவருடன் இணைந்து செயற்பட்டீர்கள்…?

இந்தக்கேள்வியும் விநோதமானது. இக்கேள்வியின் தொனி நீங்கள் புலிகளின் ஆதரவாளர் என அர்த்தப்படுகிறதே. உங்கள் பார்வையில் உதயம் பத்திரிகை ஒரு புலி எதிர்ப்பு ஊடகமாக இருந்தால்அதில் நீங்கள் ஏன் சுருதி என்ற பெயரில் எழுதினீர்கள்…?- என்று நான் பதில் கேள்வி கேட்க முடியும். உதயம் உருவானதன் பின்னணி பற்றி நான் சற்று விளக்கவேண்டியிருக்கிறது.

1996 இற்கு முன்னர் 1987 இற்குப்பின்னர் சுமார் ஒன்பது ஆண்டுகாலத்தில் மெல்பனிலிருந்து வெளிவந்த இதழ்கள்: மக்கள் குரல் (கையெழுத்து இதழ்) மரபு, அக்கினிக்குஞ்சு. இரு மொழிப்பத்திரிகை தமிழ் உலகம்) (Tamil World) ஆனால் -அவை காலப்போக்கில் நின்றுவிட்டன. இணையத்தளங்களும் இல்லாதிருந்த அக்காலப்பகுதியில் ஏற்பட்ட வெற்றிடத்தை எவ்வாறு நிரப்பலாம்…? அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழின் அவசியம் குறித்து விரிவான ஆலோசனைக்கூட்டம் மெல்பன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. நண்பர் மாவை நித்தியானந்தன் நெறிப்படுத்தலில் நண்பர் நடேசனின் ஏற்பாட்டில் நடந்த அந்தக்கூட்டத்தில் ஏற்கனவே மெல்பனில் தமிழ் இதழ்கள், பத்திரிகை நடத்தி கைவிட்டவர்களும் தமிழ் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகளும் கலந்துகொண்டு நீண்ட நேரம் கலந்துரையாடி ஆலோசித்தனர்.

பின்னர் Tamil News Pty Ltd என்னும் பெயரில் நண்பர் நடேசன் ஒரு கம்பனியை பதிவுசெய்தார். அதில் பலர் பங்குப்பணம் செலுத்தி இணைந்தனர். அவ்வாறு பங்குப்பணம் செலுத்துவதாக முதலில் வாக்குறுதி வழங்கிய சிலர் சொன்னவாறு வழங்கவில்லை. எனினும் சிலரது உதவியுடன்உதயம் மாத இதழ் வெளியானது. அதுவரையில் நடேசன் எதுவும் எழுதியதில்லை. ஆனால், அவர் தீவிர வாசகர். தமிழ், ஆங்கில நூல்களை படித்துக்கொண்டிருந்தவர். தானும் எழுதிப்பார்ப்போம் என்ற எண்ணத்துடன் அவர் எழுதிய முதல் கட்டுரைதான் நடுக்காட்டில் பிரேத பரிசோதனை. காட்டில் யானைத் தந்தத்திற்காக சிலரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு யானைக்காக நடந்த விசாரணையில் – இலங்கை பதவியாவில் மிருக வைத்தியராக பணியாற்றியபொழுது பெற்ற தொழில் சார்ந்த அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய முதல் ஆக்கம்.

நடேசனுக்கு உதயம் இதழ் தமிழில் எழுத்துப்பயிற்சியை வழங்கியது. உதயம் இதழில் புலிகள் டத்தும் மாவீரர் நிகழ்ச்சி சம்பந்தமான செய்திகளும் படங்களுடன் வந்திருக்கின்றன. புலிகளின் வீரதீரச்செயல்கள் பற்றிய செய்திகளும் வந்துள்ளன. புலிகளின் செயல்களை விமர்சிக்கும் எழுத்துக்களும் வந்துள்ளன. என்னைப்பற்றிய நேர்காணலில் மற்றும் ஒருவர் பற்றி அவரது பெயர் குறிப்பிட்டு கேள்வியை தாங்கள் முன்வைப்பதனால் நானும் அவர் பற்றி எழுத நேர்ந்துள்ளது.

நடேசன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்திலேயே அரசியல் பணிகளிலும் ஈடுபட்டவர். தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு தேர்தலில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியாக உடுப்பிட்டி தொகுதியில் இராசலிங்கம் அவர்களை நிறுத்தியபொழுது அவருக்காக மாத்திரம் பிரசாரம் செய்வதற்காக தமது நண்பர்களை அழைத்துக்கொண்டு வடமராட்சிக்குச் சென்றவர். 1983 வன்செயல்களின் பின்னர் தமிழகம் சென்று அங்கே இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த எம்மவர்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைத்து பணியாற்றியவர். அவரது மனைவி சியாமளாவும் ஒரு மருத்துவர். அங்கு அச்சமயம் முகாமிட்டிருந்த புலிகள் இயக்கம் உட்பட அனைத்து ஆயுதம் ஏந்திய இயக்கங்களுடனும் அவற்றின் தலைவர்களுடனும் இணைந்து வேலை செய்தவர். ஆனால் எந்தவொரு இயக்கத்திலும் அங்கத்துவம் பெறவும் இல்லை – ஆயுதம் ஏந்தி களத்தில் குதிக்கவும் இல்லை.முடிந்தவரையில் இயக்கங்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, முடியாத பட்சத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். நான் மேலே குறிப்பிட்ட தமிழ் அகதிகள் கழகத்தை உருவாக்குவதிலும் நடேசன் முக்கிய பங்காற்றினார்.

புலிகள் எமது தாயகத்திலும் தமிழ் நாட்டிலும் இதர இயக்கங்களை அழித்தனர். தமிழ் தலைவர்களை கொன்றனர். தமிழ் மக்களின் ஏகபோக சத்தி தாமே என்று துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அடக்கினர். அத்தகைய இயக்கம், பேரினவாத அரசுகளின் ஆயுத முற்றுகைக்கு ஏட்டிக்குப்போட்டியாக அப்பாவி சிங்கள முஸ்லிம் மக்களையும் கொன்றனர். யாழ்ப்பாணத்தில் கல்லூரி அதிபர்கள், மருத்துவ பேராசிரியர் ரஜனி திராணகம மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் விஜிதரன், விமலேஸ்வரன் உட்பட பல பெறுமதியான மனிதர்களையும் செல்வி என்ற இலக்கியப் படைப்பாளியையும் ஈவிரக்கமின்றி கொன்றனர்.முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து 24 மணிநேர அவகாசத்தில் வெளியேற்றினர். கிழக்கில் மசூதிகளில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்களை கொன்றழித்தனர். யாழ்ப்பாணம் கந்தன்கருணை இல்லத்தில் அறுபதிற்கும் மேற்பட்ட மாற்று இயக்கப்போராளிகளை கொன்று குவித்தனர்.

இவ்வளவும் புலிகளின் பாஸிசம் அன்றி வேறு என்னவென்று சொல்லமுடியும். நல்லூரில் சாத்வீகமான முறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்த்தலைவர்களை அச்சுறுத்தி அவர்களின் நோக்கத்தை குழப்பினர். பல்கலைக்கழக மாணவர்கள் வெளிமாவட்ட பல்கலைக்கழகத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக செல்லமாட்டோம் என்று ஜே.ஆரின் அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபொழுது அவர்களை இரவோடு இரவாக கடத்திச்சென்று தமிழ்நாட்டுக்கு படகில் ஏற்றி அனுப்பினர். பின்னர் அதில் இருந்த ஒரு மாணவியையே புலிகளின் தலைவர் திருமணம் செய்துகொண்டார்.
தற்கொலைப்போராளிகளை உருவாக்கி இளம் தலைமுறையின் உடல்களை சிதறடித்தவர்கள். கழுத்திலே சயனைற் குப்பிகளுடன் இளம் தலைமுறையை நடமாட விட்டுவிட்டு இறுதியில் சரணாகதி அடைந்து அழிந்த வரலாறுதான் புலிகளின் சரித்திரம்.

இவ்வளவும் புலிகளின் வரலாற்றில் சுருக்கமான தகவல்களே. மனித நேயமும் நோயுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மனோபாவமும் உள்ள ஒருவர் புலிகளை விமர்சித்ததில் எந்தத்தவறும் இல்லை. அவர் இப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித்தான் பேசவேண்டும்… எழுத வேண்டும்…எனச்சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை. உதயம் பத்திரிகையில் மாத்திரம் நான் ஆசிரியர் குழுவில் இருந்தவன் இல்லை. இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) செஞ்சக்தி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர் குரல் மற்றும் வீரகேசரி ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளேன்.

எனது உதவியை உதயம் கோரியபொழுது நானும் அதில் இணைந்து நிறைய எழுதினேன்.வீரகேசரி பத்திரிகையில் பிரதம ஆசிரியர்களாகவும் செய்தி ஆசிரியர்களாகவும் இருந்த பலரதும் அரசியல் கொள்கையிலிருந்து நான் வேறுபட்டிருந்தேன். அதுபோன்று நடேசனின் அரசியல் கருத்தியல்களிலிருந்தும் நான் வேறுபட்டவன். நான் வீரகேசரியில் பணியாற்றியதனால் ஒரு முற்போக்குவதி எப்படி முதலாளித்துவ சக்திகளின் பத்திரிகையில் ணியாற்ற முடியும்..? என்று ஒரு புலம்பெயர்ந்த எழுத்தாளர் முன்னர் ஒருதடவை தமது கட்டுரையில் மொக்கையான கேள்வி எழுப்பியிருந்தார். அதுபோன்று கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்தமையினால், ஒரு சோஷலிஸவாதி எப்படி ஏரிக்கரை (Lake House) முதலாளி வர்க்கப்பத்திரிகையில் இணைந்தார் என்றும் கேள்வி கேட்டவர்கள் இருக்கிறார்கள். அதுபோலத்தான் உங்கள் கேள்வியும்.

புலிகளினால் பாதிக்கப்படாத நான் எவ்வாறு ஒரு புலி எதிர்ப்பாளருடன் இணைய முடிந்தது…? எனக்கேட்கிறீர்கள். எனது பிள்ளைக்கு காய்ச்சல் வந்தால் எனக்கு காய்ச்சல் வரவில்லைத்தானே என்று எனது பிள்ளையை நான் கவனிக்காமல் இருக்கமுடியுமா…? புலிகள் இயக்கம் மட்டுமல்ல ஆயுதம் ஏந்திய அனைத்து தீவிரவாத தமிழ் இயக்கங்களும் 1987 – 1989 காலப்பகுதியில் தென்னிலங்கையில் ஆயுத முனையில் பல கொலைகளைப் புரிந்த மக்கள் விடுதலை முன்னணியும் விமர்சனத்திற்குரியவை. மக்கள் விடுதலை முன்னணி 1983 இல் தடைசெய்யப்பட்டபொழுது அதன் தலைவர்கள் தலைமறைவானார்கள். என்னையும் தலைமறைவாகச் சொன்னார்கள்.அந்தத்தலைமறைவு அதிதீவிர தாக்குதல்களுக்குத்தான் வழிகோலும் என்பதனால் நான் அதற்கு உடன்படவில்லை. நாட்டை விட்டே வெளியேற நேர்ந்தது. வீரகேசரியில் பணியாற்றிய காலத்திலேயே இந்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களில் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை.இந்த இயக்கங்கள் தமிழ் மக்களை தற்கொலைப்பாதைக்குத்தான் இட்டுச்செல்லும் என்பது எனது தீர்க்கதரிசனம்.

அதேசமயம் இலங்கையில் மாறி மாறி பதவிக்கு வந்த ஐக்கியதேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவற்றையும் விமர்சித்து வந்துள்ளேன். யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டவுடன் அங்குசென்று பார்த்துவிட்டு வந்து கண்டனக்கூட்டங்களில் கலந்துகொண்டேன்.1977 இல் அரசியல் கைதிகளை விடுவிக்கும் போராட்டங்களில் மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்தேன். உதயம் பத்திரிகை இலங்கையில் போர் முடிவடைந்தமையால் நிறுத்தப்பட்டது என்ற தங்கள் கருத்து ஏற்புடையது அல்ல. இணைய இதழ்களின் வருகை அதிகரித்தது. மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்தது. அனைவரும் கணினியில் தரவிரக்கம் செய்து படிக்க பழக்கப்பட்டுவிட்டனர்.

இன்று மெல்பனில் உதயம் பத்திரிகை மட்டுமல்ல -அது தொடங்கப்பட்டு வெளியானதன் பின்னர் வெளிவரத் தொடங்கிய புலிகளின் பத்திரிகை ஈழமுரசுவும் நின்றுவிட்டதே. அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் என்ற எனது நீண்டகட்டுரையை எனது இலக்கிய மடல் நூலில் பார்க்கலாம். போர் முடிந்து ஆறுவருடங்கள் கடந்துவிட்டன. புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் புலிகளை நிராகரித்துவிட்டது.புலி ஆதரவு – புலி எதிர்ப்பு என்று மொக்கையாகவே தொடர்ந்தும் சிந்திப்பதைவிடுத்து, புலிகளினாலும் ஆயுதப்படைகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், புலிகளை நம்பிச்சென்று சிறைகளில் வாடுபவர்களுக்கும் , முன்னாள் போராளிகள்,மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் குரல் கொடுப்பதும் அவர்களின் நலன்களுக்கு உதவுவதுமே இன்று முக்கியமானது எனக்கருதுகின்றேன்.

எல்லா இயக்கங்களும்தான் மாறி மாறி சுட்டுக் கொன்றொழித்தனர். எண்ணிக்கை வேண்டுமானால் இயக்கங்களுக்கு இயக்கம் வேறுபடலாம். நீங்கள் புலிகள் இயக்கம் கொன்றவர்களை மாத்திரம் பட்டியலிட்டுள்ளீர்கள். மற்றய இயக்கங்கள், அரசு செய்தவற்றை விட்டுவிட்டீர்கள்.

உண்மையான போர் என்பது ஒரு யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கின்றது என்று சொல்லுவார்கள். உங்கள் பதிலும் அதைத்தான் சொல்கின்றது. அந்த நிலையில் ‘உதயம்’ பத்திரிகையை நீங்கள் நிறுத்தியது சரியானதுதானா என்பதுதான் எனது கேள்வி?

நீங்கள் புலிகளைப்பற்றித்தான் கேட்டீர்கள். (அதாவது புலி ஆதரவு – எதிர்ப்பு என்ற தொனியிலிருந்து)அதனால் புலிகள் பற்றிச் சொல்ல நேரிட்டது. என்னைப்பொறுத்தவரையில் நீங்கள் குறிப்பிடும் நான் இலங்கையில் அறிந்த ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். நிரூபிப்பதற்கு பெரிய பட்டியல் இருக்கிறது. ஒரு புத்தகமே எழுத முடியும். அரசுகள் செய்த அநியாயங்கள் பற்றியும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அதற்குத்தனியாக ஒரு நேர்காணலை தொடருங்கள். பதில் சொல்லத்தயார். இலக்கியவாதியை பட்டியல்வாதியாக்கிவிடாதீர்கள்.

உதயம் பத்திரிகையில் ஊதியம் இன்றி நான் பணியாற்றினேன். ஆனால்,அதனை மூலதனமிட்டு நடத்தியவர் நடேசன்.அவரிடம்தான் நீங்கள் ஏன் நிறுத்தினீர்கள்…? என்ற கேள்வியை கேட்டு தெளிவு பெறல் வேண்டும். போர் முடிந்தபின்னர் நாம் மேற்கொண்ட பணிகள் உங்களுக்கும் தெரியும். மக்களின் வாழ்வாதாரத்திற்கான போர் இன்னமும் தொடருகின்றது. போர் முடிவுக்கு வந்த பின்னர் வருடந்தோறும் இலங்கை சென்று பாதிக்கப்பட்டவர்களை குறிப்பாக குழந்தைகளை விதவைத்தாய்மாரை பார்த்துவருகின்றேன். பல பணிகளில் ஈடுபடுகின்றேன். முன்னாள் போராளி குடும்பங்களையும் சந்தித்தேன்.என்னுடைய சொல்ல மறந்த கதைகள் நூலை ஒரு தடவை படியுங்கள். நான் மட்டுமல்ல பலரும் தன்னார்வத்தொண்டர்களாக அங்கு சென்று இயங்குகின்றனர்.

இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை நடத்தியவர்களில் நீங்களும் ஒருவர். அப்பொழுது இலங்கையில் அந்த மாநாடு நடைபெறுவதையிட்டு பலரும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார்கள். இப்பொழுது யோசித்துப் பார்க்கும்போது – அப்பொழுது இருந்த நிலைப்பாட்டில்தான் இப்பொழுதும் இருக்கின்றீர்களா…? அல்லது மாறுபட்டு உள்ளீர்களா…?

தொடர்ந்தும் விநோதமான கேள்விதான் கேட்கிறீர்கள். மாநாடு இலங்கையில் பலரதும் விருப்பத்தின் பேரில் நடந்தது. திடுதிப்பென்று ஒழுங்கு செய்யப்பட்ட மாநாடு அல்ல. 2005 ஆம் ஆண்டளவில் இலங்கை சென்றபொழுது மல்லிகைப்பந்தலின் சார்பாக என்னை வரவேற்று உபசரித்த மல்லிகை ஜீவா, நாம் அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் தமிழ் எழுத்தாளர் விழாவை உதாரணம் காண்பித்து, அவ்வாறு முருகபூபதி இலங்கையில் எழுத்தாளர் ஒன்றுகூடலை நடத்தவேண்டும். எல்லோராலும் அவுஸ்திரேலியா விழாவுக்கு வரமுடியாது. இலங்கையில் நடத்தினால் பல நாடுகளிலிருந்தும் எமது இலக்கிய நண்பர்கள் வந்து கலந்து கொள்ளமுடியும். அதற்கு உலகில் பலபாகங்களிலும் வதியும் எழுத்தாளர்களுடன் தொடர்புள்ள முருகபூபதி ஆவன செய்யவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

ஆனால், இலங்கையில் தொடர்ச்சியாக போர் நீடித்தமையினால் அவரது எண்ணத்தை என்னால் ஈடேற்ற முடியாதிருந்தது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுற்றதும் உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் இலங்கை சென்று திரும்பியதை அவதானித்தேன். இந்நிலையில் 2010 ஜனவரி மாதம் இலங்கை சென்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினேன். நூறுக்கும் அதிகமான எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பிட்ட சந்திப்புக்கு முதல்வாரம் இலங்கை தலைநகரிலிருந்து வெளியாகும் வீரகேசரி, தினகரன், தினக்குரல் முதலான பத்திரிகைகளில் நடத்தவுள்ள மாநாடு பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் நான் எழுதிய கட்டுரைகள் ஒரே நாளில் வெளியானது. அதனைப்படித்த பலர் இலங்கையின் நாலா திசையிலிருந்தும் ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டு தமது கருத்துக்களைச் சொன்னார்கள். அவுஸ்திரேலியா இங்கிலாந்திலிருந்து அச்சமயம் வருகை தந்து கொழும்பில் நின்ற சிலரும் கலந்துகொண்டார்கள்.

தினக்குரல் பத்திரிகை மாநாட்டை வரவேற்று ஆசிரியத்தலையங்கமும் எழுதியது. இதுபற்றிய செய்தி தமிழ் நாட்டில் யுகமாயினி இதழிலும் வெளியானது. நான் மெல்பன் திரும்பியதும் வானமுதம் வானொலியில் பாடும்மீன் சிறிகந்தராசாவும் நடத்தவுள்ள மாநாடு பற்றிய எனது கருத்துக்களை நேர்காணலாக பதிவுசெய்து நேரடி ஒலிபரப்புச்செய்தார். ஞானம் ஆசிரியர் டொக்டர் ஞானசேகரன் தலைமையில் ஒரு குழுவும் அன்றைய கூட்டத்தில் தெரிவானது. இவ்வாறு திட்டமிட்டு கட்டம் கட்டமாக நாம் இயங்கினோம்.

2010 ஜனவரியில் நடந்த ஒன்றுகூடலில் 2011 ஜனவரியில் மாநாட்டை நடத்துவது எனத்தீர்மானிக்கப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து உரையாற்றினார். இலங்கையில் அந்த மாநாட்டின் தேவை உணரப்பட்டிருந்தமையால் ஏற்பாடுகளில் ஈடுபட்டோம். அவ்வேளையில் தமிழகத்தில் தங்கியிருந்த மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஆலோசகராக விளங்கிய யுகமாயினி இதழில் மாநாடு தொடர்பான எனது கட்டுரையை பார்த்துவிட்டு ” முருகபூபதி நல்லதொரு பணியை தொடங்கியுள்ளார் ” என்றுதான் யுகமாயினி ஆசிரியர் சித்தனிடம் சொன்னார். ஆனால் – டென்மார்க் ஜீவகுமாரன் என்பவர் எமது பணிகளில் இணைய விரும்பி தாம் தொகுத்து வெளியிடவிரும்பும் புகலிட படைப்பாளிகளின் சிறுகதைத்தொகுப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இலவசமாக வழங்கவிருக்கும் ஆலோசனையை சொன்னபொழுது அவருக்கும் எஸ்.பொ.வுக்கும் இடையில் மித்ர பதிப்பகம் தொடர்பான முறுகல் நிலைமை தெரியாத நாம் ஜீவகுமரானின் நோக்கத்தை வரவேற்றோம்;.

வந்தது வினை. பொன்னுத்துரை எமது மாநாட்டுக்கு எதிராக சன்னதம் ஆடப்போகிறார் என்பதை அறிந்து அவருடன் கலந்து ஆலோசிப்பதற்காக பல தடவை சென்னையிலிருந்த அவருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். அவர் சாமர்த்தியமாக என்னை தவிர்த்துவிட்டு, கீற்று இணையத்தளத்தில் மாநாட்டுக்கு எதிராக எதிர்வினையாற்றினார். கருத்துச்சொல்வது வேறு அவதூறு பரப்புவது வேறு.

சுமார் ஏழு மாதங்களின் பின்னர் எம்முடன் எதுவித கலந்துரையாடலும் நடத்தாமல் எமது தொலைபேசித்தொடர்புகளை புறக்கணித்துவிட்டு, நாம் இலங்கை அரசிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடத்தும் மாநாடு என்று அறிக்கை விட்டார். பின்னர் ஒன்றுக்குப்பின் ஒன்று முரண்பாடான கருத்துக்களுடன் குமுதம் தீராநதியிலும் எழுதி மாநாட்டுக்கு முதல் கொள்ளிவைத்தார். இதுபற்றியெல்லாம் விரிவாக எனது உள்ளும் புறமும் நூலில் எழுதியிருக்கின்றேன். தமிழ்நாட்டில் சென்னையில் எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களையெல்லாம் அழைத்து கண்டனக்கூட்டம் நடத்தினார். குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களிலிருந்தெல்லாம் காலம் நேரம் தெரியாமல் என்னுடன் தொலைபேசியில் நிருபர்கள் தொடர்புகொண்டு கருத்துக்கேட்டனர். புலம்பெயர் எழுத்தாளர்கள் சிலரும் உடனே கண்டன அறிக்கை விட்டு மாநாட்டுக்கு எதிராக கையொப்பம் திரட்டி மாநாடு பற்றி பாரிய அளவில் விளம்பரம் தேடித்தந்தனர். ஆனால், இலங்கையில் மாநாட்டுக்கு ஆதரவு தொடர்ந்து நீடித்தது. எமக்கு நிதிவளம் குறைவாக இருந்தாலும் வெளிநாடுகளிலும் இலங்கையிலும் பல அன்பர்கள் உதவினார்கள். வீரகேசரி, தினக்குரல் நிருவாகங்களும் உதவி வழங்கின. நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள் பேராளர்களாக பதிவுசெய்துகொண்டு வருகை தந்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து ஐம்பதிற்கும் அதிகமான பிரதிநிதிகளும் அவுஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து முதலான நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் வருகை தந்தார்கள். நான்கு நாட்கள் சிறப்பாகவும் தரமாகவும் நடந்த இம்மாநாட்டில் எந்தவொரு அரசியல்வாதியும் மேடை ஏறவில்லை. பொன்னாடைகள், பூமாலைகள், வெற்றுப்புகழாரங்கள் இல்லாத மாநாடாக அமைந்தது.

அன்று அந்த மாநாட்டுக்கு எதிராக எதிர்வினையாற்றியவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு போர்க்குற்றம் நிகழ்ந்த மண்ணில் தமிழ் எழுத்தாளர் மாநாடு தேவையா…? என்பதாகவே இருந்தது.
போர்க்குற்றத்தில் இரண்டு தரப்பும் பங்கேற்றன. ஆனால், ஒரு தரப்பு இலங்கை – இந்தியா – அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளினால் அழித்தொழிக்கப்பட்டது. எஞ்சியிருந்த அரச தரப்புக்கு ஆயுத உதவி வழங்கிய நாடுகளே போர்க்குற்றம் சுமத்தி ஆறு ஆண்டுகாலமாக சதுரங்கம் விளையாடிக்கொண்டிருக்கின்றன.

இலங்கையில் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது என்று சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்களை தமிழகத்திலிருந்து அச்சுறுத்திவரும் தமிழ் உணர்வாளர்கள் எனச்சொல்லிக்கொள்பவர்கள் இலங்கையில் திரையிடப்படும் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, தல அஜித் ஆகியோரின் படங்களை தடுப்பதில்லை. தமிழகத்திற்கு அனைத்து விடயங்களிலும் நாம் குறிப்பாக இலங்கையர் தொங்குதசைகளாகவே இருக்கவேண்டும் என விரும்புகின்றனர்.

எமது மாநாட்டுக்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர்கள் தற்பொழுது இலங்கை சென்று தமது நூல்களுக்கு விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பொன்னாடை அணிந்துகொள்கிறார்கள். தமது தனிப்பட்ட அலுவல்களுக்காக அடிக்கடி இலங்கை செல்கிறார்கள். அப்படியாயின் அங்கு போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஐ.நா. சபையும் சர்வதேச சமூகமும் தண்டனை வழங்கிவிட்டது எனக்கருதித்தான் பயணிக்கின்றார்களா….? தற்போதைய ஜனாதிபதியுடன் நல்லிணக்கம் கொண்டிருப்பதாகச்சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள், இவர்தான் இறுதிக்கட்ட போரின் பொழுது பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்பதை மறந்துவிட்டார்களா…?

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பும் எமக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டது. ஒபாமா விரைவில் வீட்டுக்குச் செல்கிறார். இனி ஹிலரி கிளிண்டனுக்கான தமிழர் அமைப்பு உருவாக்குவார்கள்.
ஆனால் – நாம் தமிழுக்காக இலக்கியத்திற்காக ஒன்றுகூடியபொழுது கண்டித்தார்கள், அவதூறு பொழிந்தார்கள். முருகபூபதி கொழும்பில் மாநாடு நடத்திவிட்டு திரும்பிச் செல்வதையும்தான் பார்ப்போமே…! என்றும் அச்சுறுத்தினார்கள். ஆனால், எமது மாநாடு பலருக்கும் கதவு திறந்துவிட்டுள்ளது. எமது மாநாட்டின் பின்னர் யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கலந்துகொண்ட பிரசித்தி பெற்ற இலக்கிய சந்திப்பு நடந்தது.

இந்த ஆண்டு இறுதியில் புகலிடத்தமிழர்களின் கலை, இலக்கிய விழா இலங்கையில் நடக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சொல்கிறார். அரசியல்வாதிகள் நடத்தும் மாநாட்டில் அரசியல் ஆதாயம்தான் இருக்கும். இலக்கியவாதிகளின் மாநாட்டில் இலக்கிய ஆதாயம் இருக்கும். நிலைப்பாடு பற்றிக் கேட்கிறீர்கள். நாம் எமது நிலைப்பாட்டில் தெளிவாகவே இருந்தோம். இருக்கின்றோம். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு எழுத்தாளர்கள், கலைஞர்களுக்காவும் ஊடகவியலாளர்கள், இலக்கிய பிரதி மொழிபெயர்ப்பாளர்களுக்காகவும் நடத்தப்பட்டது. மீண்டும் நடக்கும். தொடர்ந்து நடக்கும்.

எதற்கும் நிதிவளம் தேவை. பச்சைத்தண்ணீரில் பலகாரம் பொரிக்க முடியாது. மாநாட்டுக்கான தேவை இன்றும் இலங்கையில் உணரப்படுகிறது. நான் 2011 இன் பின்னர் இலங்கை சென்ற வேளைகளில் பலரும் மீண்டும் நடத்துங்கள் என்றுதான் சொன்னார்கள். அதற்கான காலம் கனியும் வரையில் மாநாட்டின் அமைப்பாளர் என்ற முறையில் காத்திருக்கின்றேன். எவரும் மாநாடு நடத்த முடியும். தமிழ் யாருடையதும் முதிசம் அல்ல. ஆனால், எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம்.  எம்மை எதிர்த்தவர்களினால் இதுவரையில் ஒரு மாநாடு நடத்த முடிந்ததா…? பிரான்ஸிலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நடந்த மாநாடுகளின் இலட்சணம் நான் அறிவேன். வெளியிடப்பட்ட மலர்களில் வாழ்த்துச் செய்திகள் நிரம்பியிருந்தன. பொன்னாடைகள் நிரம்பி வழிந்தன. அதேசமயம் எமது மாநாட்டில் வெளியிடப்பட்ட மலர் மற்றும் கட்டுரைக்கோவை – யாழ்ப்பாணம் இலக்கிய சந்திப்பில் வெளியான குவார்ணிக்கா தொகுப்புகளை பார்த்திருப்பீர்கள்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தது. 2010 ஜனவரி மாதம் சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடந்தது. மாநாடு நடந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. மேலும் ஒரு மாநாடு நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. நிதிவளத்தையும் காரணம் காட்டுகின்றீர்கள். பெயரிலேயே ‘சர்வதேச’ மாநாடு என்று வைத்துக் கொண்டு போர் நடைபெற்று முடிந்தவுடன், போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கு முன்னுரிமை தராது அவசர அவசரமாக இலங்கையிலேயே அதை நடாத்தியது இலங்கையிலே போர் முடிவடைந்து சமாதானம் வந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்காக எனக் கருத இடமுண்டல்லவா?

உங்கள் கேள்வியே தவறு. மாநாடு பற்றிய ஆலோசனைக்கூட்டம் நடந்தது 2010 ஜனவரியில். மாநாடு நடந்தது 2011 இல். மேலும் ஒரு மாநாடு நடப்பதற்கு சாத்தியமில்லை என்று எதனைவைத்துச்சொல்கிறீர்கள். 2011 இல் மாநாடு நடந்தபொழுதும், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடந்தபொழுதும், அதற்கு முன்னர் பல ஆண்டுகள் எவருமே அதுபற்றி சிந்திக்கவில்லையே….? மல்லிகை ஜீவா சிந்தித்தார். நாம் செயல்படுத்தினோம். விதைத்தோம். அறுவடையை யார் யாரோ செய்கின்றார்கள். அங்கு செல்லத் தயங்கிய கலை, இலக்கியவாதிகளுக்கும் கதவு திறந்தது.

தனிநாயகம் அடிகள் தொடக்கிய உலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கு நேர்ந்தது தாங்கள் அறிந்ததே. அதே போன்று கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் நடந்த செம்மொழி மாநாடு அதன் பிறகு இன்னமும் நடக்கவில்லை. அதனால் எதிர்காலத்தில் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற முடிவுக்கு முன் தீர்மானம் எடுக்கவேண்டியதில்லையே. சர்வதேச என்ற சொல் ஏதோ தீண்டத்தகாத சொல்லாக கருதுகிறீர்களா…?

போர் நடந்த காலத்திலும் போர் முடிவுக்கு வந்த பின்னரும் இலங்கையில் எத்தனையோ சர்வதேச மாநாடுகள் நடந்தன. கல்வி, மருத்துவம், ஆன்மீகம், பொருளாதாரம் முதலான துறைகளிலெல்லாம் நடந்தன. ஆனால், அதுகுறித்து எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் தங்களின் கருத்தியல்கள், கலை, இலக்கிய வளர்ச்சி, படைப்பு மொழி, மொழிபெயர்ப்பு முதலான பல்வேறு இலக்கியம் ஊடகம் சார்ந்த பயிலரங்கை நடத்த முனைந்தவுடன் எதிர்ப்பு. அதற்கு போர் ஒரு சாட்டு. போர் முடிந்தவுடன் நல்லூர் கந்தசாமி கோயிலும், மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலும் வற்றாப்பளை அம்மன் கோயிலும் இழுத்து மூடப்பட்டுவிட்டதா…? திருமணங்கள் நின்றுவிட்டனவா…? யாழ்ப்பாணத்தில் தியேட்டர்கள் இயங்கவில்லையா…? தென்னிந்திய நட்சத்திரங்களின் படங்கள் ஓடவில்லையா…?

திலீபன் உண்ணாவிரதம் இருந்து மரணித்த காலத்தில் அவுஸ்திரேலியா மெல்பனில் ஈழத்தமிழ்ச்சங்கம் டின்னர் டான்ஸ் நடத்தினார்கள். போர் முடிந்து சில மாதங்களில் புலி ஆதரவாளர்கள், ஒரு வழக்குச்செலவுக்காக சென்னையிலிருந்து சினிமா பாடகர்களை அழைத்து , சிரிச்சா சிறுக்கி மகள் சீனா தானாடோய்.. பாடவைத்தார்கள். ஊரே சிரித்தது. 2001 ஆம் ஆண்டு மெல்பனில் முதலாவது அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவை முன்னின்று நடத்தினேன். அப்பொழுதும் அதனை எதிர்த்து பகிஷ்கரித்தவர்கள் பலரைத் தெரியும். தொடர்ந்து நான்கு வருடங்கள் மெல்பன், சிட்னி, கன்பராவில் நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம். பின்னாளில் முன்னர் எதிர்த்தவர்களுக்கும் இந்த அமைப்பு மேடையில் களம் வழங்கியிருப்பது உங்களுக்கும் தெரியும். அன்று அவுஸ்திரேலியாவில் எதிர்த்தார்கள். பின்னர் இலங்கையில் சர்வதேச ரீதியாக கூடியபொழுது எதிர்த்தார்கள்.

எந்த நல்ல விடயத்தையும் எதிர்ப்பவர்களுக்கு எதிர்க்க மாத்திரமே தெரியும். காலம் அவர்களுக்கு பதில் சொல்லும். அந்தப்பதிலை 2004 இற்குப்பின்னர் அவுஸ்திரேலியாவில் காண்கின்றேன். 2011 இற்குப்பின்னரும் பார்க்கின்றேன். நான் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்பவன் என்பதை இந்த நேர்காணலின் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கின்றேன். போர் ஏதோ 200 9 இல்தானா நடந்தது…?

1970 முதலே இலங்கையில் நடந்தது. நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தது 1987 இல். அப்பொழுதே போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன். அது தொடருகின்றது. எனது மற்றப்பக்கம் இலக்கியம். இரண்டையும் இயக்கமாகவே கருதி இயங்கிவருகின்றேன்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள். சமூக சேவையாளர்கள் வாழும்போதே கெளரவிக்கபட வேண்டும் என்பதற்கமைய பல கட்டுரைகளை தேனி, தமிழ்முரசு, பதிவுகள் போன்ற இணையத்தளங்களில் தொடர்ச்சியாக எழுதி வருகின்றீர்கள். இதற்கான வரவேற்பு எப்படி உள்ளது..? நீங்கள் அறிமுகம் செய்யும் படைப்பாளிகளில், அனேகமாக முற்போக்கானவர்களையே முன்னிலைப்படுத்துவதாக நான் உணர்கின்றேன். பரந்து விரிந்த எழுத்துலகில் ஏனையோரைப் பற்றிக் குறிப்பிடுவதில் தவறிவிடுகின்றீர்களே…!

எழுத்தாளர்கள் பற்றிய எனது தொடர் இன்று தொடங்கப்பட்டதல்ல. 1994 ஆம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு வார இதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில் 12 மறைந்த படைப்பாளிகள் பற்றி எழுதியிருக்கின்றேன். அவர்கள் அனைவரும் முற்போக்கு இலக்கிய முகாமைச் சேர்ந்தவர்கள் அல்ல. நான் உளமார நேசித்தவர்கள். இரசிகமணி கனக செந்தி நாதன், மு.தளையசிங்கம், காவலூர் ஜெகநாதன், நவசோதி, அமரதாஸ, என்.எஸ். எம். ராமையா, கவிஞர் ஈழவாணன் ஆகியோரெல்லாம் முற்போக்கு இலக்கிய முகாமைச் சேர்ந்தவர்கள் அல்ல.

பின்னர் நான் எழுதத் தொடங்கிய காலமும் கணங்களும் திரும்பிப்பார்க்கின்றேன் தொடர்களிலும் முற்போக்கு இலக்கிய முகாமைச்சாராத பலர் பற்றி எழுதியிருக்கின்றேன். அதற்கும் ஒரு பட்டியல் உண்டு. கவிஞர் அம்பி, வயலின் வி.கே.குமராசாமி, திக்கவயல் தருமகுலசிங்கம், அன்புமணி, சண்முகம் சிவலிங்கம், துரை விசுவநாதன், வ.இராசையா, இலக்ஷ்மண அய்யர், வி.எஸ். துரைராஜா, வீரகேசரி பாலச்சந்திரன், ஆசிரியர் சிவப்பிரகாசம், மூத்த பத்திரிகையாளர்கள் கார்மேகம், டேவிட்ராஜூ, நடராஜா, ராஜகோபால், தேவராஜா, கனக. அரசரத்தினம், விநியோக – விளம்பரப்பிரிவு சிவப்பிரகாசம், இலங்கை வானொலி திருஞானசுந்தரம், கே.எஸ் சிவகுமாரன், அ.முத்துலிங்கம், வண. பண்டித ரத்னவன்ஸ தேரோ, எஸ்.பொன்னுத்துரை, வ.அ.இராசரத்தினம், கவிஞர் வில்வரத்தினம், தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் இவ்வாறு பலரையும் பற்றி எழுதியிருக்கின்றேன்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நான் நேசிக்கும் மனிதர்கள் எந்த முகாமைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்து அவர்களின் நினைவுகளை நான் பதிவு செய்ததில்லை. இனியும் அப்படித்தான்.
எனது குறிப்பிட்ட கட்டுரைகளை படித்த பலர் உடனுக்குடன் தமது கருத்துக்களை எனக்கு எழுதிவருகிறார்கள். அவர்களின் மதிப்பீடுகளையும் தொகுத்து பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

மூத்த பரந்துபட்ட எழுத்தாளராகிய நீங்கள், உங்கள் எழுத்துகளில் (தேனீ, தமிழ்முரசு) அதன் போக்கில் இருந்து விலகி, சிலரைக் ‘கிள்ளி’ வேடிக்கை பார்க்கின்றீர்களே! உங்களுடைய இலக்கிய முதிர்ச்சிக்கு இது அழகாகத் தென்படுகின்றதா?

அதென்ன கிள்ளி…. வேடிக்கை பார்ப்பது…? எழுத்தில் கிண்டல் கேலி அங்கதம் பற்றி அறிவீர்கள். பாரதி முதல் பலரும் அப்படித்தான் எழுதுகின்றனர். தொப்பி யாருக்குப் பொருந்துகிறது என்பது எனக்குத்தெரியாது. உண்மை சுடும். அதனை நீங்கள் கிள்ளி என அர்த்தப்படுத்துகிறீர்கள். எப்பொழுதும் நான் என்னையும் சுயவிமர்சனம் செய்துகொண்டே வாழ்கின்றேன். எழுதுகின்றேன். எல்லோரையும் திருப்திப்படுத்துவதற்கு நான் நடிகன் இல்லை. எல்லோருக்கும் நான் நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் நான் இந்த வாழ்வைத் தேர்ந்தெடுக்காமல் இருக்கவேண்டும். அல்லது நான் இந்த உலகத்தில் பிறக்காதிருக்கவேண்டும்.

உங்கள் படைப்புக்களால் சமுதாயமோ அல்லது ஒரு தனி நபரோ திருந்தி இருக்கின்றார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்களா..? உங்கள் படைப்புக்களைப் பற்றி யாராவது ஆராய்ந்து உள்ளார்களா..?

படைப்பாளி போதகன் அல்ல. அறநெறி சொல்லும் பிரசங்கியும் அல்ல. அதனைத்தான் உலகெங்கும் மதபோதகர்களும் சமய பீடத்தைச் சேர்ந்தவர்களும் செய்துவருகிறார்கள். அதனால் உலகில் குற்றச்செயல்கள் நின்றுவிட்டதா…? குறைந்துவிட்டதா…? படைப்பாளியின் வேலை வாசகனின் சிந்தனையில் ஊடுருவுவதுதான். வாசகன் தீர்மானித்துக்கொள்வான். எதனையாவது படித்துவிட்டு உங்கள் எழுத்துக்களினால் நான் திருந்திவிட்டேன். மாறிவிட்டேன் என்று எவரும் சொன்னால் அதனைக்கேட்டு மகிழ்ச்சியடையலாம். எமது மகிழ்ச்சியை பறைதட்டி முழக்கி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

எனது பறவைகள் நாவலை தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தமது MPhl பட்டத்திற்காக ஆய்வுசெய்தார். என்னுடன் பல தடவை தொடர்புகொண்டு சில விளக்கங்களும் கேட்டார். ஆனால் அந்த ஆய்வுக்கு பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது. நானும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.

போர்க்கால இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் – இலக்கிய கர்த்தா என்ற முறையில் இவற்றில் உங்களின் பங்களிப்பு என்ன?

போர்க்கால இலக்கியங்களை இலங்கையில் இருந்த காலத்திலேயே நிறைய படித்துவிட்டேன். புலம்பெயர் இலக்கியம் என்பது ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து இலக்கியம் படைத்த பின்னர்தான் பேசுபொருளானது. போர் குறித்து எழுதினால் அது போர்க்கால இலக்கியம். புலம்பெயர்ந்தவர்கள் எழுதினால் அது புலம்பெயர் இலக்கியம் என்று வகைப்படுத்திவிட்டார்கள். அவற்றை வாசிக்கும் வாசகர்களும் விமர்சகர்களும்தான் போர்க்கால இலக்கியம் , புலம்பெயர் இலக்கியம் முதலான சிமிழுக்குள் அடைக்கிறார்கள். ஒருவர் வெளிநாட்டுக்கு புலம்பெயராமலேயே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைக்கலாம். பாரதியார் பிஜித்தீவுக்குச் சென்றுதான் கேட்டிருப்பாய் காற்றே எழுதினரா…? புதுமைப்பித்தன் இலங்கை மலையகம் வந்துதான் துன்பக்கேணி எழுதினாரா…? இன்று வெளிநாடுகளில் முள்ளிவாய்க்கால் எந்தத்திசையில் இருக்கிறது என்பது தெரியாமலேயே முள்ளிவாய்க்கால் பற்றி கவிதை எழுதுகிறார்களே. வருங்காலத்தில் தமிழ் அழியாமல் இருந்தால் தமிழ் இலக்கியம் மற்றுமொரு வடிவம் பெற்றுவிடும். அப்பொழுதும் அதற்கென ஒரு பெயர் சூட்டுவதற்கு யாரும் பிறந்திருப்பார்கள்.

எனது படைப்புகள் சில இந்த போர்க்காலத்தையும் புலம்பெயர் வாழ்வையும் சித்திரித்திருக்கின்றன. ஆனால் நான் அவற்றை இந்தச்சிமிழ்களுக்குள் அடைத்துப் பார்க்கவில்லை. வாசகர்களும் விமர்சகர்களும்தான் அதனைத் தீர்மானிக்கின்றனர். நானும் முன்தீர்மானங்களுடன் எதனையும் எழுதுவதில்லை.

புலம் பெயர் சிறுகதை – நாவல் பற்றிய விமர்சன முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள். வளர்ச்சி போதுமா…?

புகலிடத்திலிருந்து பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் வருடாந்தம் நடைபெறும் புத்தகசந்தையிலும் இலங்கையிலும் புகலிடத்திலும் தொடர்ந்து புகலிட எழுத்தாளர்களின் சிறுகதைத்தொகுதிகள் , நாவல்கள் வெளியாகின்றன. ஆனால் – சக எழுத்தாளனின் நூலை எத்தனை எழுத்தாளர்கள் படிக்கிறார்கள்….? படித்துவிட்டு கருத்துச்சொல்கிறார்கள்…? விதிவிலக்காக சிலர் மாத்திரம் நூல் விமர்சனம் எழுதுகிறார்கள். அதனையாவது பார்த்து படித்துவிட்டு ஏதும் சொல்கிறார்களா…? நூலாசிரியர் மாத்திரம் தமது படைப்பு பற்றி விமர்சித்து எழுதியவருக்கு நன்றி தெரிவிக்கின்றார். எனக்கும் தற்பொழுது ஒரு நெருக்கடி தோன்றியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நான் படித்து, எனக்குப்பிடித்தமான நூல்கள் பற்றி எழுதத்தொடங்கியதும் உலகில் பல பாகங்களிலிருந்தும் நூல்கள் தபாலில் வருகின்றன. முடிந்தவரையில் நேரம் ஒதுக்கி படித்து மதிப்பீடுகளை எழுதிவருகின்றேன். எனது கணினியில் விசைப்பலகையில் எழுத்துக்களும் தேய்ந்துவிட்டன. இலங்கையில் நண்பர் கே.எஸ். சிவகுமாரன் ஆங்கில இதழ்களில் எம்மவர் படைப்புகள் பற்றி பத்தி எழுத்துக்கள் எழுதிவருகிறார். அவருக்குப்பின்னர் யார் எழுதுவார்கள்…? என்ற கவலை எனக்கு வந்துவிட்டது.

இலக்கியத்தொகுப்புகளும் வெளியாகின்றன. ஆனால், அவற்றில் தமது படைப்புகள் இருக்கின்றனவா என்பதை தேடுபவர்கள், அப்படி இருந்தாலும் குறிப்பிட்ட தொகுப்பு பற்றி மூச்சே விடுவதில்லை. தமது பெயர் வந்தால் போதும் என்ற திருப்தியுடன் அமைதிகாக்கின்றனர். அதனால் விமர்சன வளர்ச்சி தேங்கிவிட்டது என்றுதான் சொல்வேன்.

இலக்கிய அமைப்புகள் வாசிப்பு அனுபவப் பகிர்வுகளை நடத்தவேண்டும். எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் சிறுகதை நாவல், கவிதை, சமூகத்தின் கதை சொல்லல் முதலான நிகழ்ச்சிகளை ஒரு வருடகாலம் நடத்தியிருக்கின்றோம். அவ்வாறு வாசிப்பு அனுபவப்பகிர்வுகள் காலத்துக்கு காலம் முன்னெடுத்தல் வேண்டும். புதிய தலைமுறையினரையும் இதில் உள்வாங்கவேண்டும்.

ஈழத்து இலக்கிய வானில் சில எழுத்தாளர்கள் தூக்கி நிறுத்தப்பட்டு ஓஹோ என்று புகழப்படுகின்றார்கள் என்று சொல்வதில் உண்மையுண்டா?

இன்று ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் தமிழ் இலக்கியம் எழுதப்படும் பேசப்படும் நாடுகளிலும் ஆரோக்கியம் குறைந்துவிட்டது. பல இடங்களில் பணம் விளையாடுகிறது. இதழ்களுக்கு பணம் கொடுத்து தமது படைப்புகளை வெளியிடத் தூண்டுபவர்களும், முன்னேற்பாடாக பணம் கொடுத்து விருதுகள் பெறுவோரும், யாரோ எழுதிய ஆய்வை, மொழி பெயர்ப்பை பணம்கொடுத்து வாங்கி தமது பெயரில் வெளியிடுபவர்களையும் பற்றிய செய்திகள் வெளியாகின்றன.

பதிப்பகங்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் இடையில் ஆரோக்கியம் கெட்டு சீரழிந்துள்ளது. முகநூல்களில் எழுத்தாளரை ஏமாற்றிய பதிப்பகத்தாரும் பதிப்பாளரை ஏமாற்றிய எழுத்தாளர்களும் வலம் வருகிறார்கள். ஒவ்வொரு நூல் வெளியீட்டிலும் யாராவது ஒருவர் பொன்னாடை சகிதம் வந்து பிரசன்னமாகின்றார். பிரமுகர்கள் மேடையில் தமக்கு ஆசனம் ஒதுக்கப்படல் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். இந்த இலட்சணத்தில் சில எழுத்தாளர்கள் மாத்திரம் தூக்கி நிறுத்தப்பட்டு ஓஹோ என்று புகழப்படுதல் சர்வசாதாரணம்.

புகழைத்தேடி ஓடவேண்டியதில்லை. புகழ் தானாக வரும். அந்தப்புகழ்தான் நிலைத்திருக்கும். எதற்கும் காலம் பதில் சொல்லும்.

ஒரு நாவல் குறைந்தது 75,000 வார்த்தைகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது மேற்குலக ஆங்கில இலக்கியத்தில் உள்ள நியதி. ஈழத்தில் 35,000 வார்த்தைகள் கூடத் தேறாத குறுநாவல்களை நாவல்கள் என்று பரிசுகள் கொடுக்கின்றார்கள். இது பற்றிய உங்கள் கருத்தை அறியலாமா?

ஒரு சிறுகதையை ஒரு பக்கத்திலும் எழுத முடியும். குமுதம் ஒரு பக்கக்கதைகளை நான் சொல்லவில்லை. பூரணி முதலாவது இதழில் ( 1972 இல்) என்.கே. மகாலிங்கம் எழுதிய கோபம் என்ற சிறுகதையை படித்திருக்கிறீர்களா? அதுவும் ஒரு பக்கக்கதைதான். வார்த்தைகளை எண்ணி படைப்பிலக்கியம் படைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு நாவலில் எத்தனை வார்த்தைகள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பழக்கம் கணினி வந்த பின்னர் தொற்றியிருக்கவேண்டும். இந்த எண்ணிக்கை நியதிகளை யார் உருவாக்கினார்கள்…? படைப்புகளுக்கு களம் தந்த இதழ் ஆசிரியர்களும் இலக்கியப்போட்டிகள் நடத்துபவர்களும்தான். இன்று தொலைக்காட்சி சீரியல்களுக்கும் இந்த நியதி வருத்தம் வந்துள்ளது.

ஜி. நாகராஜனின் நாளை மற்றும் ஒரு நாளே என்ற நாவல் சிறியது. குறிப்பிடத்தகுந்தது. ஜெயாகாந்தனும் நாவல்கள் எழுதினார். அதில் சிறியவற்றை குறுநாவல் என்றும் பெரியவற்றை நாவல் என்றும் வகைப்படுத்தி மதுரை மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டது. அவருடைய பல சிறிய நாவல்கள் இரண்டு இரண்டாக இணைத்து தொகுக்கபட்டு வெளிவந்தன. வார்த்தை எண்ணிக்கையை வைத்து பரிசுகொடுப்பவர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பரிசுக்காகவும் போட்டிகளுக்காகவும் எழுதிவரும் தங்களைப்போன்றவர்கள் அதுபற்றி ஆராய்ந்தால் நல்லது.

இலக்கியம், பொதுவாழ்க்கை என்று ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள். ஏதாவது வகையில் இது உங்களின் வாழ்க்கையைப் பாதித்ததுண்டா…?

எழுத்து எனது தொழில். பாரதியும் என்ன சொன்னார்..? கவிதை தமக்குத் தொழில் என்றார். இலங்கையில் எனக்கு சோறுதந்த தொழில். அதனால் அதனைவிட்டு நான் அகலமாட்டேன். புகலிடத்தில் வேறு தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்திற்காக உழைத்தபோதிலும் நான் ஊதியம் எதுவும் பெறாமலேயே எழுத்துத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன். பொதுவாழ்க்கை எனக்கு புதியதல்ல. தாயகத்திலும் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டேன். இன்றும் அவுஸ்திரேலியாவிலும் இலங்கை செல்லும் வேளைகளில் அங்கும் ஏதாவது பொது வேலைகளில் ஈடுபடுகின்றேன். இலக்கியம், எழுத்து பொதுவாழ்க்கை என்பனதான் எனது வாழ்க்கை. இந்நிலையில் பாதிப்புக்கு எங்கே இடம்.

வாழ்க்கை – வாகனப்பயணம் போன்றது. விபத்துக்கள் நேரலாம். உயிர் தப்பியும் வரலாம். நான் வாழ்க்கையில் விபத்துக்களை கடந்து வந்தவன். விழுந்தால் விழுந்தே கிடக்க வேண்டுமா. எழுந்து நிற்க வேண்டாமா…?

உங்களுடைய எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்ல உதவிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் , இணையங்கள் பற்றிச் சொல்லுங்கள்.

இலங்கையில் வீரகேசரி, தினகரன், தினக்குரல், மல்லிகை, ஞானம், ஜீவநதி, புதுயுகம், பூரணி, இலங்கை வானொலி, அவுஸ்திரேலியா உதயம், தமிழ்நாடு யுகமாயினி, பாரிஸ் ஈழநாடு, தமிழ்நாடு தளம் – இலண்டன் தமிழன், கனடா நான்காவது பரிமாணம், இணையத்தின் வரவுக்குப்பின்னர் அவுஸ்திரேலியா தமிழ் முரசு, கனடா பதிவுகள், ஜெர்மனி தேனீ, தமிழ்நாடு திண்ணை, எதுவரை மற்றும் நண்பர் நடேசனின் வலைப்பூ மற்றும் தங்களின் சுருதி வலைப்பூ எனது முகம் தெரியாத பல நண்பர்களின் முகநூல்களிலெல்லாம் எனது எழுத்துக்கள் வெளியாகின்றன. சில பதிவுகள் நான்கு தடவைக்கும் மேலும் மறுபதிவேற்றம் பெறுகின்றன. சில வானொலிகளும், தொலைக்காட்சி சேவைகளும் எனது எழுத்தையும் வாழ்வையும் முன்னெடுத்துச்செல்ல உதவியிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக நான் பேனையும் காகிதமும் பாவிப்பது குறைந்துவிட்டது. காலம்தான் எப்படி மாறிவிட்டது என்ற ஆச்சரியத்துடன் வாழ்கின்றேன்.

நீங்கள் இலங்கை அரசியலை மய்யமாக வைத்து ஒரு நாவலை எழுதி வருவதாக முன்னர் கூறியிருந்தீர்கள். அது பூரணப்படுத்தப் பட்டுவிட்டதா..? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

இலங்கை அரசியலைவைத்து ஒரு தொடர்கதையை லண்டன் தமிழன் இதழில் முன்னர் எழுதினேன். ஒரு பத்திரிகையாளனின் வாழ்வு பற்றி கதைகள் அதிகம் வெளியாகவில்லை. பத்திரிகையாளனுக்கும் அரசியலுக்கும் நெருக்கம் அதிகம் . அதனால் நான் எழுதவிருக்கும் நாவலில் இவை இரண்டும் கலந்திருக்கும்.

இறுதியாக, எஸ்.பொ. எழுதிய ‘வரலாற்றில் வாழ்தல்’ போன்று ஒரு தொகுதியை எழுதக்கூடிய வல்லமை பொருந்தியவர் நீங்கள். அப்படி ஏதும் சுயசரிதைப் பாங்கிலான படைப்பு எதையாவது எழுதும் எண்ணம் உள்ளதா…?

நிச்சயமாக இல்லை. ஏற்கனவே எனது கதைகள் நாவல், பத்தி எழுத்துக்கள், நூல்கள் முதலானவற்றில் எனது வாழ்வு பதிவாகிவிட்டது. இந்த நேர்காணலுக்கான தங்கள் கேள்விகளும் எனது சுயவரலாற்றை தெரிந்துகொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. நான் திறந்த புத்தகம். சுயசரிதை அவசியம் இல்லை.

கே எஸ் சுதாகர்-அவுஸ்திரேலியா

கே.எஸ். சுதாகர்

(Visited 160 times, 1 visits today)
 

One thought on “நேர்காணல்- லெ முருகபூபதி -கே எஸ் சுதாகர்-அவுஸ்திரேலியா”

Comments are closed.