மோக ஈர்ப்பு-கவிதை-மிஸ்ரா ஜப்பார் (அறிமுகம்)

மோக ஈர்ப்பு

மிஸ்ரா ஜபார்-

இருட்டின் வயிற்றில்
நிலை கொள்ளாது
பசித்தழும் என் கனவுகளை
ஏகாந்தத்தின் தூவல்களில்
மெல்ல துயில் கொள்ளச் செய்கிறேன்

காலத்தின் அடுக்களையில்
ஏக்கங்களின்
அநாதை கனவுகளை
திரவச் சுடர் கொண்டு
மௌனப் பாலைவெளியில்
கடக்கிறது குரல்

நாரில் பூத்த மலரின்
மோக ஈர்ப்பு
தாக வெறி கொண்ட
இரவின் சுவாசத்தை
ரணமாக்கிக் கொண்டிருக்கிறது

சோபன அறைக்குள்
நாண அலங்காரங்களில்
துயில் கொள்கிறது
சூரியன்

மிஸ்ரா ஜப்பார்இலங்கை

(Visited 243 times, 1 visits today)