நேர்காணல்-பகுதி 01-இலக்கியம்-மிஹாத்-கோமகன்

“ஈழத்து சிந்தனைவெளி மீதான கலகச் செயல்”

மிஹாத்

கோமகன் : நிந்தாவூரில் இடம்பெற்ற எனது நேர்காணல் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் உங்களை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். நீங்கள் தான் “குரலற்றவரின் குரல்” நேர்காணல் தொகுப்பிற்கான நூல்விமர்சனத்தை வைத்திருந்தீர்கள். அனாலும் உங்களை பற்றி என்னால் பெரிதாக அறிய முடியவில்லை ………?

மிஹாத் : 1987 ல் இருந்து சில புரிதல்களைப் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். பொதுவாகவே நமது செயல்பாட்டின் நீண்டகால பயணத்தை நண்பர்கள் தெரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாய் அமையும் என்பது எனது நம்பிக்கை.

எனது ஊரான அக்கரைப்பற்றில்  நான் சாதாரண தரத்தில் படிக்கின்ற போது சூழலில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் எனது அனுபவங்களை நிறையவே பாதித்தன. இனக்கலவரங்கள்,  தாக்குதல்கள்,  சமாதான முயற்சிகள் என பல தள மாற்றங்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்த கையோடு ஆயுதப் போராட்டக் களத்திலும் அரசியல் அரங்கிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இந்திய வல்லரசுக்கு இலங்கையை வளைத்துப் போடும் எண்ணம் உருவான போதுதான் இங்கு படைகளை அனுப்பியிருந்ததாக சில அறிவுஜீவிகள் எனக் கருதப்படுவோர் பேசித் திரிந்தனர். போரை முடிவுக்குக் கொண்டு வந்து வடக்குகிழக்கில் மாகாணசபை ஆட்சியை அறிமுகப்படுத்துவதன் மூலம் சமாதானத்தை நிரந்தரமாகத் தக்க வைக்கலாம் என இந்தியா கருதியது. அதன் மூலம் இலங்கை மீதான பிராந்தியச் செல்வாக்கையும் அதிகரிக்கலாம் எனும் நோக்கமும் இந்தியாவுக்கு இருந்தது.

(அன்று ஏற்பட்ட அதிகார முரண்பாடு காரணமாக விகாரமாகச் செயற்பட்டு வெளியேறிய புலிகளின் சரித்திரம் 22 வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்ததமை வேறு விடயம்.)

அந்த அடிப்படையில் அப்போது இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணியானது தனக்குக் கிடைத்த போனஸ் ஆசனத்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியது. அதனால் அந்நாளில் பிரபலமான இடதுசாரித் தலைவரான தோழர் அபூயூசுப் உறுப்பினரானார்.

அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் / தமிழ் இன முறுகல்கள் பல இடம்பெற்றன. முஸ்லிம் காங்கிரசானது அதனைத் தனது அரசியல் வளர்ச்சி நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது. இங்கு கூற வேண்டிய விடயம் வேறானது என்பதனால் அதைத் தவிர்க்கிறேன்.

எமது பகுதியில் தூர்ந்து போயிருந்த இடதுசாரி அரசியல் களமானது அபூயூசுப் மாகாண அமைச்சரானதுடன் புதுப் பொலிவடைந்தது. தோழர் இப்றாலெப்பை,  தோழர் பகுர்தீன் P M ஆகியோரின் சிறப்பான பங்களிப்பில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் காரியாலயம் தோழர் பத்மநாபாவினால் திறந்து வைக்கப்பட்டது. நண்பர்கள் பலரும் கூட்டாக அக்கட்சியில் அன்று இணைந்து கொண்டோம்.

பாடசாலை மாணவர்களாயிருந்த போதும் எமது இடதுசாரி அரசியற் செயற்பாடுகள் வேகமாயிருந்தது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அடையாள உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தது. அதன் பின்னணியில் நாங்களும் இருந்தோம்.

அந்தக் காலகட்டத்தில் மிக அதிகமான மார்க்சீய நூல்களை வாசிக்கும் அனுபவம் எனக்குக் கிட்டியது. கம்யூனிஸ்ட் அறிக்கை முதல் இயக்கவியல் பொருள் முதல்வாதம்,  பாட்டாளி மக்கள் சர்வாதிகாரம் என அனைத்து வித மொஸ்கோ பதிப்பு நூல்களையும் கட்சி நூலகம் மூலம் வாசிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. பாடப் புத்தகங்களை விடவும் அரசியல் விடுதலை பற்றிய அக்கறைகள் எங்களுக்குள் அதிகரித்திருந்தது. பல்வேறு சொற்பொழிவுகள்,  கலந்துரையாடல்கள் என்பன எங்களை வளப்படுத்தின.

மிகையீல் கொர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களான பெரஸ்ரோய்க்கா மற்றும் கிளஸ்னோஸ் என்பவை அந்நாட்களில் மிகப் பெரும் விவாதப் பொருளாகியது. சோவியத் யூனியனின் பொதுவுடமை அரசில் இடம்பெற்று வந்த புதிய மாற்றங்கள் அவ்வப்போது எமது கலந்துரையாடல்களில் நிரம்பியது.

கொர்பசேவ்வின் புதிய அணுகுமுறையினால் சோவியத் யூனியனின் அனைத்துக் குடியரசுகளும் தனி நாடுகளாகப் பிரிந்து விட கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஏற்படத் தொடங்கிய மாற்றங்களினால் உலகில் உள்ள பொதுவுடமை சிந்தனையாளர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் கலாசார நகரமான ஸ்ராலின் கிராடிலிருந்த லெனின் சிலை உடைக்கப் படுவதைக் காட்டிய ஏகாதிபத்திய ஊடகங்கள் கம்யூனிசம் தோற்று விட்டதாக உலகுக்கு முழக்கமிட்டு அறிவித்தன.

இந்நிலையில் உலக நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய அரசின் போக்குகளிலும் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. அதனைப் போலவே இலங்கையில் அரசு,  புலிகள் போன்ற தரப்புகளின் நிலைப்பாடுகள் ஏகாதிபத்தியச் சூழலுக்குள் தனித்தனி முகாம்களுக்குள் சிறைப்பட்டிருந்தது.

இந்த உலகளாவிய நெருக்கடி நிலை எம்மை மிகுந்த கொந்தளிப்புக்குள்ளாக்கியது. இந்தக் காலப்பகுதியில் மெய்யியல் மற்றும் பெரியாரியம் போன்ற அம்சங்களில் எமது கவனம் திரும்பியது. காதல்,  போதை,  கவிதை,  இலக்கியம் என சூழ்நிலைகள் மாறின.

அப்போது தினகரன் வார மஞ்சரியில் வீ.ஜெகதீசன் பொறுப்பில் பதிப்பான “கவிதா சாகரம் ” பகுதியில் கவிதைகள் எழுதும் ஒரு தலைமுறை உருவானது. எம்.பௌஸர், ஏயெம்.தாஜ், முழுமதி எம்.முர்தளா, எம்.ஐ.எம்.ஜாபிர், எஸ்.ரபீக் எனும் அந்தப் பெரும் கூட்டத்தில் மஜீத், மிஹாத், றியாஸ் குரானா ஆகியவர்களும் இருந்தனர். சில வேளைகளில் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களின் கவிதைகளே கவிதா சாகரத்தின் முழுப் பகுதியையும் நிறைத்திருந்த சந்தர்ப்பங்களுமுண்டு.

காலப்போக்கில் எங்களோடு குழுவாக இருந்த கவிதை எழுதும் நண்பர்கள் அனைவரும் மு.மேத்தா, வைரமுத்து, அப்துல் ரகுமான் வகை கவிதைகளோடு தமது இலக்கிய தேடலை நிறைவு செய்து கொண்டனர். இன்னும் சிலர் பாலகுமாரன், அசோகமித்ரன், சுந்தரராமசாமி வகை இலக்கியங்கள்தான் தமிழின் உச்சமான இலக்கியங்கள் எனும் நம்பிக்கையோடு செயல்படத் தலைப்பட்டனர்.

இந்தக் காலப்பகுதியில் மஜீத், றியாஸ் குரானா மற்றும் எனக்கும் நவீன இலக்கியங்களோடு ஒரு பரிச்சயம் உருவானது. அது விரிவான இலக்கியச் செயற்பாட்டுக் களமாக மாறியது. புதிய சிற்றிதழ்களை வாசிக்கும் பழக்கம் உருவானது. பௌசர் ” தடம் ” சஞ்சிகையைக் கொண்டு வந்த போது அவருக்கு உறுதுணையாய் இருந்தோம். ஆனால் எங்களின் ஆக்கங்கள் எதனையும் பிரசுரிப்பதில் அவருக்கு ஆர்வம் இருக்கவில்லை. உன்னதமான ( ? ) இலக்கியங்கள் மீதும் தேர்ந்தெடுக்கப்பட்ட (? ) பிரபலங்களின் சுத்திகரிக்கப்பட்ட ஆளுமை எழுத்துக்கள் எனும் இலக்கிய அதிகாரம் அங்கு குடிகொண்டிருந்தது. அதனால் நாம் வேறொன்றாக இருக்க விரும்பினோம்.

மஜீத்,  றியாஸ்குரானா போன்றவர்களின் நட்பு உருவானதிலிருந்து எங்களுக்குள் தனியான இலக்கிய முகாம் ஒன்று நிலை பெற்றது. எனக்கு இடதுசாரி அரசியல் பரிச்சயம் இருந்தது போல றியாஸ் குரானா “மாற்று ஆன்மீக ” பின்னணியில் பரிச்சயம் கொண்டவர். ஓஷோ ரஜ்னீஸ், ஜித்து கிருஷ்ணமூர்த்தி, ரூமி போன்றோரின் ஆன்மீகச் சிந்தனைகளில் தெளிவு கொண்டிருந்தார். இந்த சிந்தனைக் கலவைகளின் சங்கமமாக எமது இலக்கிய நட்பும், எழுத்தும் மாறியது.

இக்காலத்தில்தான். பிரபலமடையாத ஆனால் வித்தியாசமான mainstream ற்கு புறம்பான பல எழுத்தாளர்களின் நூல்களை தொடர்ச்சியாக வாசிக்க நேர்ந்தது. எழுத்துக்களை விமர்சன ரீதியாக அணுகுவதற்கான பயிற்சிக் களமாக எமது நட்பு மிளிர்ந்தது. சி.சு.செல்லப்பா முதல் க.நா.சு வரையானவர்களின் இலக்கிய ஆய்வுகளோடு பரிச்சயம் உருவானது. பசுவய்யா கவிதைகள், மயன் கவிதைகள், சி.மணி கவிதைகள் போன்றவற்றையும் கடந்ததொரு வாசிப்பு எமக்குள் இலக்கியம் குறித்து எழுதுவதற்கான சுயமான வீரியத்தை உருவாக்கியிருந்தது.

அத்தோடு மாற்று சினிமா குறித்த புரிதலும் இதேகாலத்தில் எமக்குள் இருந்தது. சத்யஜித்ரே, கோவிந்த் நிஹ்லாணி, மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், சிபி மலயில், மகேந்திரன், பாலுமகேந்திரா, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் போன்ற அனைவரின் திரைப்படங்களையும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டோம். அல்பிரட் ஹிட்ச்காக்கின் திகில் படங்களின் நுட்பங்களை விவாதித்து எழுதவும் முடிந்தது.1992 காலப் பகுதியில்

“ஒன்றும் இல்லை ” என்றொரு சஞ்சிகையை வெளியிட்டோம். அதன் அட்டைப் படத்தை வரைய ஓவியர் றஷ்மிக்கு அறிமுக வாய்ப்பை வழங்கியிருந்தோம்.  அந்த சஞ்சிகை தொடர்ந்து வராமல் நின்று போனது.

அந்நாட்களில் தமிழ் பேரினவாதம் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டது. அதனால் எமது விவாதங்கள் அனைத்தும் போர் விமர்சனங்களாக மாற்றமடைந்தன. ஜனநாயகம்,  பொதுவுடமை போன்றவற்றின் மீதான நடைமுறை சார்ந்த எதிர் விமர்சனம் , தமிழ் தீவிரவாதத்தின் முஸ்லிம் விரோதப் போக்கிற்கு எதிரான உணர்வு போன்றவை வேறு இயங்கு தளங்களுக்கான அவசியத்தை உணர்த்தின.

தொண்ணூறின் நடுப்பகுதியில் தமிழில் வேறுபட்டு இயங்கிய தமிழக சஞ்சிகைகளினதும் எழுத்தாளர்களினதும் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டது. அந்த எழுத்துக்கள் வழியாக பிரஞ்சு சிந்தனையாளர்கள் பற்றிய அறிதல் ஏற்பட்டது. அதன் பிறகான காலம் அந்தச் சிந்தனையாளர்களின் நேரடி எழுத்துகளைத் தேடிய பயணமாக விரிந்தது.

ஜீன் பிராங்கோ லியோட்டார்ட்,  டெரிடா,  ரோலண்ட் பார்த்ஸ்,  பூக்கோ,  பொட்ரிலாட் போன்ற பிந்திய சிந்தனையாளர்களின் பல்வேறு கட்டுரைகள் வேறு வகையான புரிதல்களையும் மாற்றான இலக்கிய விருப்புறுதியையும் தோற்றுவித்தன. இதன்போது மொழி,  அர்த்தம்,  அதிகாரம்,  வரலாறு,  மானுடவியல்,  கலாசாரம் என அனைத்திலும் எமது சூழலுக்கான மாற்றுப் பார்வைகளை முன்வைக்கும் முட்டுச் சந்திக்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு பின்நவீனத்துவ நிலை என கருதலாம்.

அக்கால கட்டத்தில் சஞ்சிகை ஒன்றைக் கொண்டு வருவதற்கான நியாயங்கள் எம்மிடம் உருவாகியிருந்தன. றியாஸ்குரானா,  மஜீத் போன்ற  தோழர்களோடு விரிவான விவாதம் இடம்பெற்று ” பெருவெளி ” எனும் சஞ்சிகையை கொண்டு வர தீர்மானித்தோம். அதனைத் தொடர்ந்து றபியூஸ்,  அப்துல் ரஸாக்,  காலித்,  றிஜால்டீன், பர்ஷான் போன்ற நண்பர்களும் செயற்பாட்டாளராக இணைந்தனர். கவிஞர் முர்த்தளா மற்றும் மருதமுனை எம்.ஐ.எம். றவூப் ஆகியோரும் இணைந்து செயற்பட்டனர். அச்சு வடிவமைப்பாளராக நண்பர் சாமில் இருந்தார். பெருவெளி சஞ்சிகை பத்து வருடங்களுக்கு முன்பிருந்த சூழலின் நியாயங்களுக்கமைவான ஒரு கலகக் குரலாக வெளிவந்தது.

பின்நவீன சிந்தனை முறைகளின் அடிப்படையில் மைய அதிகாரங்களுக்கெதிரான விளிம்புகளின் கலகம் என்பதை இலக்கிய அரசியலாகக் கையேற்ற பெருவெளியின் உள்ளக அம்சங்கள் அதுவரை இலங்கையில் நிலவி வந்த தமிழ் சஞ்சிகை விழுமியங்களைக் கலைத்துப் போட்டது. பல்வேறு எழுத்துப் பரிசோதனைகள் அதில் நிகழ்த்தப்பட்டன. பல்வேறு அதிகாரப் புறமொதுக்கல்களுக்கும் உள்ளான தரப்புகளின் எதிர் அபிலாசைகளை வெளிப்படுத்தும் இதழாக அது அமைந்தது. அரச தரப்பு,  ஆயுத தரப்பு,  உள்ளூர் பண்பாட்டு அதிகார மையங்கள் போன்றவற்றுக்குச் சவாலான போக்குகளை அச்சஞ்சிகை கொண்டிருந்தாலும் அதிகாரங்களோடு சமரசம் செய்யாத உறுதியோடிருந்தது.

பிறகு அதன் செயற்பாட்டாளர்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும்  தனிப்பட்ட பல விதமான வேலைப் பளுக்கழும் அந்த இதழ் தொடர்வதில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாகவும் சிந்தனைப் புலத்தில் உருவான புதிய கருத்து மாற்றங்களும் பெருவெளியின் இறப்பை உறுதி செய்தன. அது ஒரு காலகட்டத்தின் இயக்கம் என்ற அடைமொழிக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

போர் இடம்பெற்ற காலத்தில் பிரிவினைவாத அதிகார மையங்கள் நவீனத்துவ இலக்கியப் போக்கின் அடிப்படையில் செயல்பட்டன. அவற்றின் இலட்சியங்களுக்கு ஏற்ற வகையிலான இலக்கியங்களை மட்டும் கொண்டாடின. ஏனையவற்றை புறக்கணித்தன. கடந்த நாற்பதாண்டுகளில் வெளிவந்த எண்ணற்ற இலக்கியப் படைப்புகளை ஈழத்து நவீன இலக்கியவெளி புறமொதுக்கி வைத்திருக்கிறது. அவை தமிழ் பிரிவினைவாதத்திற்கு அந்நியமானவையாக அமைந்ததே கவனியாமல் போனதற்கான காரணமாகும். இந்த போக்கிற்கான உந்து சக்தி புலம்பெயர் சூழலில் இருந்தே தோற்றம் பெற்றது. அவை தமக்கு ஏற்ற வகையிலான இலக்கியப் படைப்புகளை மட்டும் முன்னிலைப்படுத்தி ஜனரஞ்சமாக்கின. அதனை தமிழகத்திலும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான வணிக காரியங்களில் ஈடுபட்டன. போரின் முடிவோடு இவை பயணிக்க வேண்டிய பாதை புரியாமல் தட்டுத் தடுமாறி நின்று விட்டன. தற்போது போருக்கு பிந்திய சூழ்நிலையில் நமது இலக்கிய செயல்கள் எதுவாக இருக்க முடியும் என்பது முக்கியமானது.

போர் காலத்தில் இலக்கிய அதிகாரத்தை வடிவமைத்த தரப்புகள் எந்த இலக்கியங்களை எல்லாம் புறமொதுக்கியதோ அவற்றை முன்கொண்டு வருவதே இப்போதைக்கான தேவையாகும். அதேபோல கடந்த காலத்தில் அழிவை முன்னிறுத்திய இலட்சிய எழுத்துக்களின் காலாவதியான வகிபாகத்தை கலக எழுத்துகளூடாக பரிசீலிப்பதே தற்காலத்திற்கேற்ற இலக்கியப் போக்காக அமைய முடியும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த இருபத்தைந்து கால எழுத்துச் செயற்பாட்டில் ஒவ்வொரு தருணங்களையும் பின்னோக்கிப் பார்க்கும் போது எந்தவொரு கட்டத்திலும் மையநீரோட்டப் போக்குகளோடு இரண்டறக் கலந்து விடாமல் வேறொன்றாகவே பயணித்திருப்பதை உணரும் போது திருப்தியாகவே இருக்கிறது. காலத்தின் திசையெங்கிலிருந்தும் நம்மை நோக்கி வரும் கருத்தாக்கங்களின் ஏக நிலையை சிதைக்கும் போதுதான் பல விதமான தரிசனங்களைச் சாத்தியப்படுத்தலாம். அதற்காக மறுத்தோடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

கோமகன் : சமகாலத்து எழுத்துப் பரப்பில் எழுதி படிப்பவர்களாகவும் அல்லது நுகர்வினால் வந்த கிளர்த்தல் பொறிமுறை விமர்சனங்களையே பார்க்கின்றேன். ஒரு கறாரான விமர்சனப்  பொறிமுறை இல்லாது போனது பற்றி ……. ?

மிஹாத் : விமர்சன நடைமுறையை பொறுத்தவரை எழுதிப் படித்தல் என்பது விமர்சன உத்தி சார்ந்த ஒன்றல்ல. அதாவது ஒருவர்,  தான் வெளிப்படுத்த விரும்புகின்ற விமர்சனத்தை பொதுத்தளத்தில் முன்வைக்கப் பயன்படுத்தும் செயல்பாடுதான் அது. சபையில் அல்லது ஊடகங்களில் வாய்மொழியாக முன்வைக்கப்படும் விமர்சனமானது பெரும்பாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் நாடகீயமான வெகுஜன உளவியல் மீது சாய்வு கொண்டதாகவே இருப்பது வழமை. இதில் விமர்சனப் பார்வை என்பதை விடவும் பேச்சாற்றல் என்பதே முக்கியமானதாக அமையும். பேச்சு என்பது ஒரு நிகழ்வாக இடம்பெறும் தருணத்தில் ஞாபகத்தில் உருவாகும் சொற்சேர்க்கையை விமர்சனத்துக்கான எல்லையாகக் கொண்டிருக்கிறது. ஆகவே விமர்சித்தல் என்பது எந்த விதமான செயல்பாட்டுடன் தொடர்பு படுகிறது என்பது ஒரு விடயமல்ல. ஆனால் விமர்சனம் எனப்படுவது என்ன வகையான உத்திகளினூடாக முன்வைக்கப்படுகிறது என்பதே முக்கியமாகும்.

// நுகர்வினால் வந்த கிளர்த்தல் // என்று நீங்கள் குறிப்பிடுவது வாசிப்பின் போது ஏற்படும் ரசிப்புணர்வின் அனுபவப் பொங்குகையென இருக்குமாக இருந்தால், அந்த விதமான விமர்சன முறையானது இழிவானது என கருதுவதற்கில்லை. இது நீண்ட கால தொன்மைத் தன்மை கொண்ட விமர்சன முறை என்பதுதான் முக்கியமாகும். இதனை இலக்கிய தளத்தில் முன்வைப்பதற்கு அறிவார்ந்த கருத்தியல்களின் துணை அவசியமற்றது.

இங்கு இதுவரைக்கும் பெரும்பாலானவர்களால் செய்யப்படும் விமர்சன முறை இதுதான். மார்க்சீய விமர்சன முன்னோடிகள் என நம்பப்பட்ட கைலாசபதியும், சிவத்தம்பியும் கூட இந்த வகையான போக்கிற்கு வெளியே முழுமையாகச் செயல்பட்டார்கள் என்று கூறுவதற்கில்லை. அதேபோல நவீனத்துவ இலக்கிய ஆய்வுகளை முன்கொண்டு சென்றவரும், நவீனத்துவ இலக்கிய வகைமை சார்ந்து சிந்தித்தவருமான நுஃமான் கூட இந்த விதமான விமர்சனப் பார்வையை விட்டும் தன்னை முற்றாக தவிர்த்துக் கொண்டிருக்கவில்லை.

இங்கு செயல்பட்ட விமர்சகர்கள் யாவரும் பிரதிகளை காலாகாலத்திற்கும் அது நித்தியத்தன்மை கொண்டது என நம்பினார்கள். அதற்குள் இருக்கும் அர்த்தங்கள் மாறவே முடியாதவை என நம்பியிருந்தார்கள். அதனால் அதன் நிலைத்த தன்மைக்கும்,  வெளியிலுள்ள வாழ்க்கைக்கும் இடையில் உன்னத அறம் ஒன்று சார்ந்த தொடர்பை உருவாக்கினார்கள். அதுவே இங்கு விமர்சனக் கலையாக நிலை பெற்றது.

மாறாக விமர்சன முறைமை என்பது பிரதிக்கும் வாசிப்புக்கும் இடையிலான மோதுகை சார்ந்தது என சிந்திப்பதற்கான கருத்தியல் பரிச்சயங்கள் அவர்களுக்குள் வளர்ந்திருக்கவில்லை. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகம் தழுவி எழுந்த அறிவியல் மாற்றங்கள் தமிழில் தாக்கம் செலுத்தவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும். அதிலும் குறிப்பாக மெய்யியல், உளவியல் குறித்து உருவான புதிய கருத்தியல்கள் தமிழ் இலக்கியக் களத்தில் பரவலான புரிதலைப் பெற்றிருக்கவில்லை. மொழியும் குறியீடும் பற்றிய புதிய தெளிவுகள் எழுத்தாளர்களைச் சென்றடைந்திருக்கவில்லை. மெலிதான அரசியல் இழைகள் மூலம் செறிவூட்டம் பெறும் அதிகாரம் என்பதன் வீச்சம் பற்றிய நுணுக்கமான பார்வைகள்  எழுத்தாளர்களுக்குள் உருவாகியிருக்கவில்லை. பேச்சும், எழுத்தும் வலியுறுத்தும் மேலோட்டமான கருத்துருக்களுக்குப் புறம்பாக அவற்றில் மீறி நிற்கும் அர்த்தங்களைப்  புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்திருக்கவில்லை. அதனால் மேம்போக்கானதொரு தட்டை இலக்கியங்களை உருவாக்குபவர்களாகவே பெரும்பாலான எழுத்தாளர்கள் இருந்தார்கள். இந்த நிலையினால் பிந்திய கால விமர்சனங்களை புரிந்து கொள்ளவும் முடியாது, உருவாக்கவும் முடியாது .

மேற்கூறிய சிந்தனைகளை உள்வாங்கி நோக்கும் போது பிரதிகளை ஒரு நிலைத்த தன்மையான கருத்துக் கருவூலங்களாக நோக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இங்குதான் Jacques Derrida மற்றும் Roland Barthes போன்றவர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

குறிப்பிட்ட பிரதிகளை வாசிப்பின் சுதந்திரமான கோணத்திலிருந்து அர்த்தப்படுத்துதலை மேற்கொள்ளும் சிந்தனை வலுவூட்டமே பிந்திய கால விமர்சன முறையின் அடிப்படையாகிறது.

ஒரு பிரதியை எழுதுகின்ற ஆசிரியன் அதில் அவனுக்கேற்ற வகையில் அர்த்தத்தை நிலைகொள்ளச் செய்கிறான். ஆனால் ஒரு வாசகன் அதே அர்த்தத்தினூடாகவே சிந்திக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒரு பிரதியை எழுதுபவன் அவனது விருப்பத் தேர்வுக்குரிய அர்த்தத்தை அப்பிரதிக்குள் சிறை வைப்பதாக கருதினால், வாசகன் என்பவன் அந்த அர்த்தத்தை சிறையிலிருந்து விடுவிப்பவன் போல செயல்படுகிறான். இதுதான்

பிரதி × வாசிப்பு எனும் எதிர்த் தன்மையாகும். இதனால் ஒரு பிரதி ஒவ்வொரு மீள் வாசிப்பின் போதும் எண்ணிலடங்காத அர்த்தங்களை உருவாக்கி விடுவதாக அமைகிறது. இந்த சிந்தனைப் பயிற்சியினூடாக முன்னெடுக்கப்படும் வாசிப்புத் துணையுடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களே பிந்திய காலத்துக்குரியவை.

இந்த பிந்திய கால விமர்சனத்திற்கான அடித்தளமானது மொழியின் தன்மை பற்றிய சிந்தனைப் புலத்திருந்து தோன்ற வேண்டும்.

அதாவது மொழி என்பது சத்தங்களின் கோர்வையாக இருந்த போதும் மொழியிலுள்ள சொற்கள் அதற்குள் எந்த அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. பொருட்களுக்கு வெவ்வேறு ஓசைகள் என்ற அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பதினூடாகத்தான் அர்த்தங்கள் உண்டாகின்றன.

பேச்சு மட்டுமே மொழியின் தனித்தன்மையல்ல. எழுத்தும் மொழியின் இன்னொரு முக்கிய கூறாகும். அதை எழுதுபவனின் இருத்தல் இல்லாமல் கூட வாசித்து விடலாம். பேசுபவனின் கருத்தையும், எழுதுபவனின் கருத்தையும் கேட்பவனும் வாசிப்பவனும் அதே விதத்தில் அர்த்தப்படுத்துவதில்லை.  கேட்கும் போதும், வாசிக்கும் போதும்  வேறு விதமான அர்த்தப்படுத்தல்கள் உருவாகி விடும். குறிப்பிட்ட பேச்சையும் / எழுத்தையும் தாண்டியும் அதன் ஆழங்களில் வேறு அர்த்தங்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் அமிழ்ந்திருக்கின்றன. இதனைத்தான் Derrida தனது ஆய்வில் transcendental signified என்கிறார். சொற்களினால் நாம் வழமையாக உணரும் அர்த்தங்களுக்குப் புறம்பான ஆழத்தில் வேறு பல அர்த்தங்களும் நகர்ந்தபடி இருக்கின்றன.

இதற்கான உதாரணம் ஒன்றை குறிப்பிடுவதாக இருந்தால் :

// நாம் பெருமையுடன் ஒன்று படுவோம் //

எனும் வார்த்தையை நோக்கினால் அதற்கு சிறப்பான அர்த்தங்களை உருவாக்க முடியும். இதனையே கோதாபய ராஜபக்ஷ தெரிவிப்பதாக நோக்கினால் இதன் அர்த்தம் எதுவாக இருக்க முடியும்? நம்மைப் பொறுத்தவரை இது ஒற்றுமை, சகோதரத்துவம் ஐக்கியம் எனும் வகையில் அர்த்தங்களை உருவாக்காது என்பதே உண்மை. இதற்குள் வேறு விதமான அத்துமீறும் தன்மையான அர்த்தங்களையே உருவாக்குவோம். இப்படித்தான் சொற்களின் வழமையான அர்த்தங்களுக்குப் புறம்பான ஆழத்தில் வேறு வகையான அர்த்தங்கள் உருவாகின்றன. இந்தப் புரிதல்தான் deconstruction மற்றும் death of the author போன்ற இலக்கியப் பார்வைகளை உருவாக்குகிறது. இதனூடாக வடிவமையும் விமர்சனங்கள் இன்னொரு படைப்பாகவே நோக்கப்பட வேண்டியவை. இந்த வகை கருத்தியல் சிந்தனைகள் இங்கிருக்கும் பேராசிரியர்களுக்கே இல்லாத நிலையில் நமது எழுத்தாளர்களும், சராசரி வாசகர்களும் எப்படியிருப்பார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

கோமகன் : இரட்டையர்களான கைலாசபதி சிவத்தம்பி ஆகியோரின் காலத்திற்குப் பிறகு விமர்சனத்துறையில் ஒரு பெரிய பாரிய இடைவெளி இருக்கின்றது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு ஏன் யாரும் முன்வரவில்லை?

மிஹாத் : இலங்கை தமிழ் இலக்கியப் பரப்போடு தொடர்புற்ற வயோதிப இலக்கியவாதிகளுக்குள் நிலவுகின்ற cliche வகையான Template நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

இந்தக் கேள்விக்கான பதிலை சிவத்தம்பியின் கருத்தொன்றில் இருந்து தொடங்குதல் பொருத்தம்.

Srilankan Tamil literature with a very active role in opposing social oppression among Tamils, especially in the late fifties and sixties now began to speak of the more comprehensive oppression by the state. The dividing line comes in 1981. . . .

A new literary idiom was born. Almost 3 years later, the poetry that has been written, the short stories that have been penned, . . . .

இது பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் Writers and Artists Meet in Jaffna என்னும் கட்டுரையில் குறிப்பிடும் சில கூறுகளாகும். 2003 ல் யாழில் நிகழ்ந்த புரிந்துணர்வு ஒப்பந்த அமைதியை வலுவூட்டும் கூட்டமொன்றில் பல மொழி கலைஞர்கள் மத்தியில் இதனை முன்வைத்தார்.

எண்பதுகளையொட்டிய இலங்கையின் தமிழ் இலக்கியம் தொடர்பாக பேராசிரியரின் பார்வையை இந்தக் கட்டுரை மூலம் ஓரளவு நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் இக்கால எழுத்துக்களை எந்த வகையான பார்வையூடாக அவதானிக்க முயல்கிறார் என்பதனை நாம் கவனிக்க வேண்டடும்.

அவரைப் பொறுத்தவரை இலங்கையின் நவீன தமிழ் எழுத்தியக்கமானது ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்களத்துவ அதிகார அடக்குமுறைக்கு எதிராக நிலையூன்றியதும் தமிழ் தீவிரவாதத்தைச் செறிவூட்டக் கூடியதும் தமிழ் மனதின் போர்காலத் துயரங்களை காட்சிப்படுத்தும் இலக்கியச் செயல் வடிவமே என கணிக்க முற்பட்டிருக்கிறார் என்பதை அவதானிக்க முடியும். இந்த இலக்கிய வரைபடத்தை உருவாக்க அவர் கையாளும் அளவீட்டுக் கருவிகள் கூட எந்த வகையைச் சார்ந்தது என நாம் சிந்திக்காமல் இருந்து விட முடியாது.

சுதந்திரத்திற்குப் பிறகான அதிகார மோதலில் பங்கேற்ற தமிழ் அரசியல் கட்சிகளின் வாக்கு வேட்டைக்கான துருப்புச் சீட்டாகப் பயன்பட்ட “விடுதலை ” என்னும் போலியான கோஷத்தினை நவீன தமிழ் இலக்கியத்தின் உள்ளார்ந்த சாரமாக பேராசிரியர் உணர்த்த முற்படுகிறார்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இருந்த தமிழ் இளைஞர்களை “விடுதலை ” என்னும் இந்தச் சொல்லானது அழிவான அரசியல் பாதை நோக்கி ஈர்த்ததற்கு பேராசிரியர் முன்னிறுத்த முற்படும் இலக்கிய வகைமையும் காரணமாகவே இருந்தது.

இந்தப் புலமைசார் மதிப்பீடுகளின் வழியாக தமிழ் அதிகாரத்துவம் தனக்கு வசதியான ஒரு இலக்கிய வழித்தடத்தை அமைத்து” ஈழத்து நவீன இலக்கியம்” என்ற பெயரில் நிறுவனமடைய முற்பட்டது. இன முரண்பாடுகளைக் கொதிநிலையில் வைத்திருக்கும் எழுத்துக்களும் வன்முறை வழிபாட்டுக்கான எழுத்துக்களும் துயர அனுபவங்களை ஒப்பாரிப் புனைவுகளாக்கிய எழுத்துக்களும் இந்த கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தேடியெடுக்கப்பட்டன. அந்த வகையில் அவை தென்னிலங்கைப் பெரும்பான்மை மக்களைச் சென்றடையாத வருத்தத்தையும் பேராசிரியர்  கொண்டிருந்தார்.

அந்த வகையான காரண அடிப்படையில்தான்  அவர் ஒரு இடத்தில் இவ்வாறு கூறுகிறார் : “It is pity that most of these writings have not been translated into Sinhala. But some like M. A. Nonhuman ‘s “Tears of the Buddha “(on seeing the burning of the Jaffna library), the short fiction of Ranjakumar, Uma Varatharajan and Thirukkovil Kaviyuvan demand a separate analysis of how they bring out in unforgettable, moving and artistically powerful images of the ravages of war and the sufferings of men, women, youth and children”.

இங்கு பேராசிரியரின் அணுகுமுறையை கூர்ந்து நோக்கினால் எம்மால் சில விடயங்களை வெளிப்படையாகவே அவதானிக்க முடியுமாயிருக்கும். எழுபதுகளின் இறுதியில் இருந்து அரச தரப்பினாலும் பெரும்பான்மைவாத கடும்போக்காளர்களினாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட்ட அநீதிகளையும் பாரபட்சங்களையும் பதிவு செய்த எழுத்துக்களே நவீன ஈழத்து இலக்கியம் என்ற சட்டகத்துக்குள் அடக்கக் கூடியதாகும் என்பதுதான் அந்த அவதானிப்பாகும். ஆனால் அதே காலப்பகுதியில் வெளிவந்த எண்ணற்ற வேறு வகை எழுத்துக்கள் யாவும் அவரது புலமைத்துவ இருட்டடிப்புக்கு  உட்பட்டவையல்லாமல் அவை அவரைப் பொறுத்தவரை  இலக்கியங்களே அல்ல என்ற முனைப்பு வெளிப்பாடே நிரூபணமாகிறது.

இன்னொரு புறம் அவரது மதிப்பீட்டு அணுகுமுறையானது அதன் போக்கிலேயே பல்வேறு விதமான பாரபட்சங்களையும் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதாவது அவர் குறிப்பிடும் எழுத்தாளர்களின் பிரதிகளை முன்வைத்து அது வலியுறுத்தும் விடயம் தொடர்பாகக் கூட எதுவும் பேசாமல் பொதுவான அபிப்பிராயம் ஒன்றைக் கூர்மைப் படுத்தும் பாங்கிலேயே விளக்க முற்படுகிறார். அது மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு பெயர்ப்பட்டியலை பிரகடனப்படுத்தும் உள்நோக்கமே முனைப்புப் பெறுவதாயுள்ளது. அந்தப் பட்டியலை பல சபைகளிலும் பல முறை உச்சாடனம் செய்தால் அந்தப் பெயரிலுள்ளவர்கள் நவீன எழுத்தாளர்கள் என்ற பேறைப் பெற்று விடுவார்கள்.

மேலும் அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எந்தளவிற்கு போர் ஒப்பாரி இலக்கியக் காரியங்களை மேற்கொண்டனர் என்பதும் ஒரு முக்கிய கேள்வியாகும். அவை பற்றிய விவாதம் இங்கு அவசியமற்றது என்ற போதிலும் சில கருத்துகளை கூறாமல் இருந்து விட முடியாது. பேராசிரியர் நுஃமான் எழுதிய புத்தரைப் பற்றிய கவிதையானது யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட சமயத்தில் பிரிவினைவாத அரசியல் உணர்வெழுச்சியை உருவாக்கியதுதான்,ஆனால் அதன் பிறகான மோதல் காலத்தில் அது அர்த்தங்களை இழந்து போனது.நுஃமானைக் கூட தமக்குத் தோதாக கவிஞராக முன்னிறுத்தவே விரும்புகிறார்.

ரஞ்சகுமாரின் “கோசலை ” போன்ற கதைகள் போர்காலப் பதட்டங்களை கிராமிய வாழ்வுக்குள் நின்று பூடகமாகப் புரிய வைத்தாலும் அவை  குவியப்படுத்தும் ஒப்பாரிகள் யாவும் அந்தச் சூழ்நிலைகளுக்கு அப்பால் எதுவித உரையாடலையும் ஏற்படுத்த முடியாதவை.”அரசனின் வருகை ” என்னும் ஒரேயொரு அரசியல் புலம் கொண்ட உமா வரதராஜனின் கதையின் அடிப்படையில் அவரை பட்டியலில் குறிப்பிடுவது தவறல்ல. ஆனால் அதைவிட அதிகம் எழுதியவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அத்துடன் அக்கதையானது முஸ்லிம் வாழ்வியலை முழுமையாகப் புறக்கணித்ததுமாகும். அக்கால “சரிநிகர் ” பத்திரிகை உருவாக்கிய அபிப்பிராயத்தை மட்டுமே இலக்கிய வரையறுப்புக்கான புள்ளியாக சிவத்தம்பி கருதுகிறார் என இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அதேநேரம் குறிப்பிட்ட கட்டுரையில் பேராசிரியர் மிக முக்கியமான தவறையும் செய்கிறார். “One should not fail to mention here the literary response of the eastern province Muslims to some of the problems they faced during this period. Intact Solaikili, the Muslim poet who brought out the dilemma and turmoil of the Muslim in surrealistic language. “

என்பதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களின் துயர அவலங்களை சோலைக்கிளிதான் பேசினார் எனும் சித்திரத்தை உருவாக்க முயல்கிறார். ஆனால் யுத்த காலத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட கையறுநிலையை பதிவு செய்தவர்களில் அஷ்ரப் சிஹாப்தீன், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்களே குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இங்கு பேராசிரியரிடம் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருப்பதை உணர முடிகிறது.

ஆனால் பேராசிரியர் முன்வைத்த எழுத்தாளர்களை விட விடுதலை வேட்கையைக் கூர்மைப்படுத்திய பலர் இந்த மண்ணில் தமது எழுத்துக்களால் நிலைபெற்றனர். அவர்கள் போர் நிகழ்ந்த பூமியிலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக இயங்கிய போதும் புலமைத்துவக் கண்களுக்குப் புலப்படாமல் போனமை அதிசயமே.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் போரைப்பற்றிக் கவிதை வரைவதும் கதைகள் புனைவதும் ஒரு மோஸ்தரான நோய்க் கூறாகப் பரவியிருந்ததை சமாளித்து புலமையாளர்கள் உன்னதப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்களும் இங்கிருந்தது. அப்போது இயங்கிய தீவிர இலக்கிய சஞ்சிகைகள் என கருதப்பட்டவைகள் போர் மனநிலைக்குப் புறம்பான எழுத்துகளையோ அல்லது மாற்றமான பார்வைகளையோ கீழ்மையான மதிப்பீட்டுடனே அணுகின.

இந்த பொது மனநிலையைத் தொந்தரவு செய்தவாறும் மாற்றுப் பார்வைகளூடாக கருத்துகளை முன்வைத்தும் இலக்கியக் களத்தில் நின்ற பல செயல்பாட்டாளர்கள் அமைதிப்படுத்தப் பட்டார்கள் அல்லது நிரந்தரமாக மௌனமாக்கப் பட்டார்கள் அல்லது புறக்கணிக்கப்பட்டார்கள்.

விடுதலைப் போராட்டமானது வெகுஜன வெளியில் ஒரு வித புனிதமாகவும் உள்ளார்ந்த நிலையில் மனித தர்ம வீழ்ச்சி  கொண்டதாகவும் இருந்ததை இங்கு கொண்டாடப்பட்ட எழுத்துக்கள் கவனம் கொள்ளவுமில்லை அவற்றை மதிப்பிட்ட புலமையாளர்கள் சுட்டிக் காட்டவுமில்லை. கைலாசபதியைப் பொறுத்தவரை அவர் போராட்டம் உக்கிரமடைந்த காலத்திற்கு முன்பே இறந்து போனமையால் சிவத்தம்பியின் போரிலக்கியம் மீதான பார்வைகள் போன்ற நழுவல்களிலிருந்து தப்பித்துக்கொண்டார். ஆனால் சிவத்தம்பி நீண்ட காலம் வாழ்ந்ததினால் ஆயுததாரிகளின் தேசியவாதத்திற்குள் அகப்பட்டுக் கொண்டார்.

அளவுக்கதிகமாக உரமூட்டி வளர்க்கப்பட்ட போர்வாத இலக்கியச் செல்நெறியானது இறுதிப் போரின் தோல்வியோடு காலாவதியாக்கப் பட்டிருந்தது.போராட்டக்காரர்கள் அனைவரும் இல்லாமல் போய்விட்ட நிலையில் வீர முழக்கமிட்ட படைப்புப் பிரதிகளின் அர்த்தங்கள் இனி எதற்கானவை என்ற பரிசீலனையின் தேவை மேலெழுகிறது.

இறுதி யுத்த தோல்விக்குப் பிறகான சூழலானது வேறு வகை மதிப்பீட்டு விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய நியாயம் உருவாகியிருக்கிறது. போர் அக்கறைகளும் பகைமையை வளர்க்கும் பாதையும் இனி எழுத்துக்களால் வடிவமைக்கப் படுவதானது அழிவுகளைப் புதுப்பிப்பதாகவே அமையும் என்பதான உண்மையிடம் மண்டியிட வேண்டிய புது நியதி வந்து சேர்ந்திருக்கிறது.

இந்த நிலையைப் புரிந்து கொள்ளாத இன்னொரு தலைமுறை போரின் பாசிச முகத்தை மறைத்து இழப்புகளையும் வலிகளையும் பொதுவெளிக்குக் கொண்டு வந்து ஜெபம் செய்ய முற்படுகின்றன. இவர்களும் ஏற்கனவே இருந்த புலமைத்துவ வழிமுறைகளைப் பின்தொடரும் ஒப்பாரி வழித்தோன்றல்களேயன்றி வேறில்லை. அத்தோடு ஏற்கனவே குறிப்பிட்ட பட்டியலை சிலர்  இன்று வரைக்கும் பேண முற்படுவதை நோக்கும் போது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் வேளையில் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கக்கூடும்.

போராட்டத்தின் முதல் பாதியில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் உருவான பழிதீர்த்தல்கள் இலக்கிய வழியாகவும் முனைப்படைந்திருந்தது. இது வெறுமனே புலிகளுக்கு எதிரான எழுத்துச் செயல்களாக முன்னிலை பெற்றதேயொழிய ஒரு இலக்கியக் கருத்தியலாக செழுமை பெறவில்லை. அதனால் அந்த வகையான புலி எதிர்ப்பு எழுத்துக்களும் இறுதி யுத்தத்தின் முடிவோடு உதிர்ந்து விட்டது.அவை பெரும்பாலும் புலம்பெயர் சமூகத்தினுள் இருந்து போலி மாற்றாக உருவானவை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை அதற்குள் நிலவும் புனிதமற்ற சேதிகளைப் பேசும் இலக்கியக் கண்ணோட்டங்களினால் இனி வேறொரு வரைபடத்தை வரைய வேண்டிய அவசியம்தான் இங்கிருக்கும் நலிவுற்ற மக்களை முன்கொண்டு செல்ல முடியும்.

இந்த விதமான பார்வைத் துணையுடன் இக்கேள்விக்கான பதிலை சிந்திப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன்.  கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகிய இருவரும் அடிப்படையில் கல்வித்துறை சார்ந்த பேராசிரியர்கள். பொதுவாக பேராசிரியர்களின் முழுநேர வேலையும் ஆய்வு ரீதியாக வாசித்தல், எழுதுதல் என்பதாகவே இருப்பது வியப்பில்லை. சராசரி வாழ்க்கை நிர்ப்பந்திக்கின்ற பொருளாதார அலைச்சல் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அதனால் அதிகமான ஆய்வுகளை அவர்கள் எழுத்தாக வெளித்தள்ளி விட முடியும். அந்த வகையில் இப்போது விமர்சனங்கள், திறனாய்வுகள் இல்லையே எனும் குற்றச்சாட்டை இங்கிருக்கும் academist களை நோக்கியே வைக்க வேண்டும். இங்குள்ள பல்கலைக்கழகங்களுக்குள் மந்தைகளுக்குக் கதை கூறும் இடையர்கள்தான் மலிந்து காணப்படுகின்றனர்.அவர்களிடம் புது வகையான ஆய்வுகளை எதிர்பார்க்க முடியாது.

இன்று விமர்சனங்களும் ஆய்வுகளும் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் அதிகம் இடம்பெறுவதை அவதானிக்கலாம். பல எழுத்தாளர்கள் அந்தப் பணியைச் செய்கிறார்கள். அவர்கள் துறைசார் பண்டிதர்களில்லை என்பதற்காக அவர்களின் பணிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. அத்துடன் விமர்சனம் சார்ந்து இப்போது இயங்குபவர்களில் அதிகமானவர்கள் பழமைச் சிந்தனையின் அடிப்படையிலான ரசனைக் குறிப்புகளை பதிவு செய்தல் எனும் நோக்கிலேயே எழுதி வருவதும் குறிப்பிட வேண்டியதாகும். அவர்கள் பல விதமான கோட்பாட்டு அடிப்படையிலான கருத்தியல்களுடன் எழுத்துப் பணியை அணுகாமல் இருப்பதனால்தான் மிகப்பெரும் இடைவெளி உருவானது.

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியவர்கள் ஒரு காலகட்டத்தின் இலக்கியப் பணியாக விமர்சனத்துறையை செழுமைப் படுத்தினார்கள்தான். அவர்களின் விமர்சனங்களுக்குள் பழமைவாத மார்க்சீய பார்வையும், மரபார்ந்த ரசனைவாத கிளர்வுறுதலும் இருந்திருக்கின்றன. அவை இன்றைய கால இலக்கியச் சிந்தனைகளின் வழியே நோக்கும் போது பின்தங்கிய நிலையில் இருப்பதை உணர முடிகிறது. அத்துடன் பொதுவாகவே தமிழில் விமர்சனம் பற்றி பேச வெளிக்கிடுவோர் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் தாண்டி வேறு பெயர்களை உச்சரிக்க விரும்புவதில்லை. அவர்கள் இருவரினதும் அகடமிக் செல்வாக்கானது நிறுவனமயப்பட்ட அதிகாரமாகி எழுத்துத் துறையினரை அழுத்தியிருந்ததே இதற்குக் காரணம். இவர்கள் இருவரையும் விட அக்காலத்தில் ஏ.ஜே.கனகரட்னாவும், எம்.ஏ.நுஃமானும் தமிழ் இலக்கிய வழித்தடத்தை செப்பனிட்டவர்கள் என்பது மறுக்க முடியாதது. கனகரட்னாவின் அதிக இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாக தமிழுக்கு வந்தவை என்பதற்காக அவரை புறக்கணிப்புக்குரியவராக இருட்டடிப்புச் செய்து விட்டனர். நுஃமானை அதிகம் பேசாமல் விட்டதற்கான காரணம் இனத்துவேசமாக இருக்கலாம்.

இலங்கையில் தமிழில் பின்நவீனத்துவம் குறித்த கருத்தியல்களும், அது தொடர்பான இலக்கியப் படைப்புகளும், பிந்திய கால விமர்சன முறைமைகளும் எந்தவொரு பல்கலைக்கழகத்தில் இருந்தும் உருவாகவில்லை. அதற்கு வெளியே  “பெருவெளி “, “மாற்றுப் பிரதி “, “மறுத்தோடி ” போன்ற  சஞ்சிகைகள் மூலமாகவே கொண்டு வரப்பட்டது. இதனைக் கண்டு கொள்ளாமல் தற்கால தமிழ் இலக்கிய விமர்சனத்துறையை தாண்டிச் செல்ல முடியாது.

இன்று விமர்சனத்துறை வேறு வகையான சிந்தனைகள் வழியே விரிந்திருக்கிறது. சிலர் அதனை முன்னெடுக்கிறார்கள். இன்றைய வாழ்வியல் அழுத்தங்களைக் கடந்து வெளிவரும் அந்த வகை எழுத்துக்கள் எண்ணிக்கையில் குறைவுதான் என்பதற்காக கைலாசபதி, சிவத்தம்பிக்குப் பிறகு அற்றுப் போய்விட்டது எனும் வாதம் பழைமையில் மகிழ்வுற்றுக் கிடப்பதற்கு ஒப்பானது.

கோமகன் :  கவிதைப் புனைவு, புனை கதைகள், விமர்சனத்துறை என்று பொதுவாகத் தமிழில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள் யாவும், சமகாலத்து உலக நிலவரங்களுக்கு ஏற்றதாக இல்லாமல் போனதற்கான காரணம் என்று எதை சொல்கின்றீர்கள் ?

மிஹாத் : இந்தக் கேள்வியானது தெளிவற்ற குழப்பங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. இதில் கவிதைப்புனைவு என்று குறிப்பிட்ட உங்களால், கதைப்புனைவு என்று குறிப்பிட முடியாமல் போயிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் புனைகதை என்பது பழைய மரபார்ந்த இலக்கிய திட்டங்களை சுமந்ததாகவே இருப்பது என்பதில் சந்தேகமில்லை. புனைவு என்ற விடயம் இன்று பழைய அடிப்படையில் நோக்குவதற்கான தகுதியை இழந்து விட்டது.

இலக்கியத்தில் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக உருவான புதிய கோட்பாடுகளின் வளர்ச்சியினாலும், அது ஏற்படுத்திய வித்தியாசமான சிந்தனைப் பயிற்சிகளாலும் அதன் அடிப்படைத் தன்மைகள் வெகுவாக மாற்றம் கண்டுள்ளன. அந்தப் பாதிப்பின் சுவடுகள் எதனையும் தமிழில் கண்டு உணர முடியாத அளவுக்கு தமிழ் இலக்கிய மனம் நோய்மையுற்றிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

நீங்கள் குறிப்பிடும் மூன்று அம்சங்களான,

கவிதைப்புனைவு,

புனைகதை,

விமர்சனத்துறை என்பவை அந்த மரபான பழையவைகள் பற்றியதா எனவும் யோசிக்கத் தோன்றுகிறது. தமிழில் அந்த விதமான இலக்கிய வர்க்கம் ஒன்று செயல்பாட்டில் இருப்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அவை பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால்,

தமிழில் குறிப்பிடக் கூடிய அளவு சிந்தனை மாற்றங்களை உள்வாங்கிய செயல்பாடுகள் இடம்பெறாமலும் இல்லை. இன்று,

கவிதைப்புனைவு,

கதைப்புனைவு,

விமர்சனத்துறை என்பவை வேறு விதமாக வளர்ச்சியடைந்துள்ளன. அவற்றை தமிழ் பொதுமனம் எந்தளவிற்கு வரவேற்றிருக்கிறது என்பதே முக்கிய கேள்வியாகும். இந்த இருட்டடிப்பு குறித்த பார்வை இல்லாமல் இதனை கடந்து சென்று விட முடியாது.

மறுபுறம் உங்கள் கேள்வியில் இன்னுமொரு சிக்கலை அவதானிக்க முடிகிறது. // தமிழில் இடம்பெறுகின்ற எழுத்து முயற்சிகள் யாவும் சமகால உலக நிலவரங்களுக்கு ஏற்றதாக இல்லாமல் போனதற்கான காரணம் எது // என்றதொரு விடயம் பற்றி சிறிது சிந்திக்க வேண்டியுள்ளது.

இலக்கியத்தில் உலக நிலவரம் என்றால் என்ன? அவ்வாறு உலகத்துக்கு பொதுமையான அம்சம் ஒன்று சாத்தியமானதுதானா? அவ்வாறு ஒரு அம்சம் பரிந்துரைக்கப்படுமாயின் அது இலக்கியத்தில் அதிகாரத்துவமான எழுத்துச் சடங்குகளை வலியுறுத்துவதாகவே அமையும். எழுத்துக்களின் பல்வகைமையை அழித்து விடும்.

இலக்கிய உலக நிலவரம் என்பதனால் ஒற்றையான சீர்த்தன்மையை அல்லது இலக்கிய ஒழுங்கு முறையை உருவாக்க எத்தனிக்கக் கூடாது. எழுத்து முயற்சிகள் ஒரு போதும் பொதுவான நிலைப்பாடு நோக்கி தள்ளி விடப்பட கூடாது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒரே விதமான இலக்கியப் போக்கு நிகழ வாய்ப்பில்லை. ஆனால் பல்வேறுபட்ட புதிய கருத்தியல் வளர்ச்சி மூலமான எழுத்து முயற்சிகள் கவனத்தை ஈர்க்கக் கூடியவை.

உலக நிலவரம் என்பதனால் குறிப்பிட்ட இலக்கிய வகைமை ஒன்று தரமுள்ளதாக தரப்படுத்தப் படுகிறது. அது தவிர்த்த ஏனையவை அனைத்தும் உலக நிலவரங்களுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கப்படுகிறது. இங்கு இந்த விதமான இலக்கிய தரப்படுத்தல் அதிகாரத்தை யாருக்கு யார் வழங்குவது? அடிப்படையில் இது கோளாறான பார்வை.

இலக்கியச் செயல்பாடென்பது எந்த விதமான தரப்படுத்தி ஒதுக்குதல் போன்ற நிபந்தனைகளுக்கும் உட்படாத சுயாதீனத் தன்மை கொண்டதாகும்.

இங்கு  கருத்தியல்கள் குறித்த புதிய அணுகுமுறைகளும் அதன் பன்மைத்துவமும் இன்றியமையாதது. ஒவ்வொரு தனி நபர் செயல்பாடும் வித்தியாசமானது . அது இலக்கிய உற்பத்திகளிலும் எதிரொலிக்கக் கூடியது என்பதை புரிந்துகொண்டு இலக்கிய பொதுமைப்படுத்தல்களை கடந்து செல்ல முடியும்.

கோமகன் :  பின்நவீனத்துவ கோட்பாடு விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதத்தன்மையானதா என்ன ?  

மிஹாத் : இந்தக் கேள்வியானது பின்நவீனத்துவம் குறித்து தெளிவான புரிதலற்ற நிலையிலிருந்து எழுப்பப்படும் ஒன்றாகவே கருத முடியும். பின்நவீனத்துவம் என்பது ஒரு கோட்பாடல்ல. அது பிந்திய காலத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பகுப்பாய்வுச் சிந்தனை முறைமைகளின் தொகுப்பாகும். இந்தச் சிந்தனை முறைமைகள் என்பவை நிச்சயமான உத்தரவாதங்களுடன் இறுதி வடிவம் பெறாமல் புதுப்பித்துக் கொள்வதற்கான நெகிழ்ச்சி கொண்டவை. அதனால், இந்தச் சிந்தனை முறைகளோடு இடையீடு செய்வதென்பது சிரமமானதென பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து எத்தனையோ வகையான அறிவியல் பரிணாம வளர்ச்சியூடாக மாற்றமடைந்து வந்திருப்பதுடன் புறச் சூழலையும் அதற்கேற்ற வகையில் கையாண்டு கொண்டிருக்கிறான். இந்த அறிவியல் விருத்தியின் உன்னதக் காலம் என இவ்வுலகச் சிந்தனையாளர்களால் கொண்டாடப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டை அண்மித்த காலத்தில் பல வகையான கோட்பாடுகளும் உலகின் போக்கில் ஆளுமை செலுத்தின. அதன் போது பல வகையான அக / புற மேம்பாடுகளை மனிதன் உருவாக்கினான். அரசியல், அறிவியல், பொருளாதாரவியல், ஆன்மீகவியல் என அனைத்திலும் இக்காலகட்டம் கோட்பாட்டு வளர்ச்சிகளை எட்டியது. மருத்துவம், பொறியியல் போன்ற துறைகள் நவீன மயப்பட்டன. தொழில்துறை உற்பத்திகளில் இயந்திரப் பாவனை உருவானது. தொலைத்தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போக்குவரத்து விருத்தி கண்டது. நவீன ரக ஆயுதங்களின் உற்பத்திகள் அதிகரித்தன. அச்சு இயந்திரங்கள் பாவனைக்கு வந்தன. அதனால் நூல்களும் அறிவு மேம்பாட்டுச் சாதனமாக பெருக்கெடுத்தன. நூல்களின் பயன்பாடானது அறிவு மேம்பாடு மட்டுமல்லாமல் கலைகள் சார்ந்த பாவனைத் தன்மையையும் பெற்றது. அதனால் இலக்கியங்கள் பெருக்கெடுத்தன. இந்த நவீன காலகட்டத்திற்கேற்ற அற ஒழுங்குகளை நிலை நிறுத்தும் வகையிலான இலக்கியச் சிந்தனைகளும் அதற்கேற்ற கலைக் கோட்பாடுகளும் உருவாகின. இவை யாவும் கூட்டாக நிறைந்துதான் அன்றைய உலகியல் ஒழுங்கை வடிவமைத்தன. இந்த நவீனத்துவ யுகத்தின் உச்சமான சிந்தனை அறப் போக்குகளும், கண்டுபிடிப்பு வரப்பிரசாதங்களும் கூட்டாகத் திரண்டு உலகத்தின் மீது மாபெரும் அழிவுச் செயலைத் தொடுத்தன. அதுதான் இரண்டாம் உலகப் போர்.

சென்ற நூற்றாண்டில் உலகப் போர் ஏற்படுத்திய அழிவின் விளைவுகள் அனைத்திற்கும் அன்றையச் சூழ்நிலையை பீடித்திருந்த அறிவியல் விருத்தியும் அதனோடு பிணைந்திருந்த கோட்பாட்டு அறங்களுமே காரணமாகும். அதுகாலவரை மனித குல மேம்பாட்டுக்கு துணையாய் அமையும் எனக் கண்ட கோட்பாடுகள் யாவும் பேரழிவுகளுக்கான கருவூலமா எனச் சிந்தித்த சில தரப்புகள் அவர்கள் சார்ந்த துறைகளில் மாற்றமான ஆய்வுகளை மேற்கொள்ள எண்ணினர். அதற்கு ஏற்கனவே இருந்த சில எதிர்ச் சிந்தனையாளர்களின் கருத்துகளை அடியொற்றி முன்னோக்கிச் செல்ல எத்தனித்தனர். அதற்காக நவீனத்துவ காலத்தின் எல்லா விதமான சிந்தனைப் பிரயோகங்களையும் மறுப்பதென்று அர்த்தமுமல்ல. அதன் மானுடப் பயனுள்ள விழுமியங்களை உள்ளீர்த்து மேம்படுத்தியபடி முன்செல்லலும் அவசியமானதாக இருந்தது.

Each society has its regime of truth, it’s “general politics ” of truth that is, the types of discourse that it accepts and makes function as true என்று பூக்கோ விபரிப்பதை,

தனி மனிதர்களின் நம்பிக்கை தொடர்பான அல்லது உண்மை பற்றிய தீர்க்கமான முடிவு என்பது அவர்களின் பிரத்தியேகமான பிரக்ஞையினூடாக எட்டப்படுவதில்லை. அது வேறு பல மனிதர்களின் அபிப்பிராயத் தொகுப்புகளால் உருவாக்கம் பெறுகிறது என்பதாகும். இந்த வகைத் தொகுப்புகளே மனிதர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாகத் திரள்கிறது. எனவே இந்த அதிகாரங்களை உறைய வைப்பதென்றால் கீழிருந்து அதற்கு எதிரான மாற்று உரையாடல்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்தச் சிந்தனைப் போக்கு சார்ந்து பொதுத் தளத்தில் செயல்படுவதும் பின்நவீனத்துவ நிலைதான். அந்தச் செயல்பாடுகளில் எழுதுதலும் ஒரு வகையாகும்.

“The nature of knowledge cannot survive unchanged within this context of general transformation. It can fit in to the new channels, and become operational, only if learning is translated into quantity of

information ” என்று கூறும் ஜீன் பிராங்கோ லியோடார்ட்டின் சிந்தனைகள் நவீன கால அறிவியல் தியறிகள் யாவற்றின் மீதும் ஐயம் கொள்ளச் செய்தது. அறிவு என்பது உள்வாங்கப்படுகின்ற தகவல்களின் தன்மையினாலும் அவற்றின் எண்ணிக்கையினாலும் தீர்மானிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, அது எந்த நேரத்திலும் திரிபு படுத்திக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மனிதர்களுக்குள் சேகரிக்கப்படும் தகவல் அறிவுக்கேற்ப அவருக்கான மதிப்பு கணிக்கப்படுகிறது. தற்காலத்தில் பகுத்தறிவு கூட இயந்திரங்களுக்குள் சேமிக்கப்படும் அரூப பண்டமாகி விட்டது. மனிதர்களுக்கிடையிலான தொடர்பின் தன்மையானது அரூபமான பண்ட விநியோகம் மற்றும் பண்ட நுகர்வு போன்றதுதான்.

தகவல்களின் தொகை மதிப்பும் அதன் பிரயோகமும்தான் அறிவு என்பதாக நம்பப்படும் சூழலில் சமூக இயங்கியலானது மனித மூளைச் செயல்பாட்டுடன் மட்டுமே தொடர்பு கொண்டதாக அல்லாமல் கணினி போன்ற பல்வேறு இயந்திரங்களின் உபயத்திற்குள்ளும் அகப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் இயந்திரங்களின் செயல்பாடுகளே மனித அறிவையும், அவனது ஆற்றலையும் தீர்மானிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

அறிவு என்பது இரண்டு விதமாக மனிதர்களில் செயல்படுகிறது.

ஒன்று : விஞ்ஞானபூர்வமான கதையாடலாக செயல்படுகிறது.

மற்றையது : புனைவுத் தன்மையான கதையாடலாக செயல்படுகிறது.

விஞ்ஞானபூர்வமான கதையாடல்களின் காரண காரியங்களூடாக நிரூபிக்கப்படுகின்ற கதையாடல்கள் நம்பிக்கையாக உருவாக்கப்படுகின்றன. புனைவுத் தன்மையான கதையாடலூடாக மரபு வழி கட்டுக்கதைகள் எடுத்தாளப்பட்டு நம்பிக்கையாக செறிவூட்டப்படுகின்றன. இவை இரண்டையும் பரிசீலிப்புக்குரிய விடயமொன்றின் இரண்டு பக்கங்களாக நோக்குவதன் அவசியத்தையே லியோடார்டின் சிந்தனைகள் வலியுறுத்துகின்றன. அதனால்தான் அறிவு என்பது எப்போதும் நிச்சயமற்ற ஒன்றாகவும் எப்போதும் மாற்றங்களுக்கு உள்படுவதையும் காண்கிறோம். இதனால் இறுதி முடிவான ஒன்றை வலியுறுத்துவது இலக்கியங்களின் பணியல்ல என்பதும் நிரூபணமாகிறது.

பின்நவீனத்துவம் என்பது இலக்கியம், அரசியலாக மட்டுமே குறுகிய சிந்தனை முறையல்ல. சென்ற நூற்றாண்டின் பிந்திய காலத்தில் உலக நடத்தையின் மீது தாக்கம் செலுத்திய கோட்பாட்டில் முக்கியமானது மார்க்சீயமாகும். உலகை பொருள்முதல்வாதம் சார்ந்து நோக்கும் அதன் நுண்மையான கூறுகளுக்குள் இருக்கும் போதாமைகளை ஆராய்ந்த Jean Baudrillard ன் பார்வைகள் பின்நவீனத்துவத்துவ யுகத்தின் பரிணாமத்தை மேலும் விரிவு படுத்தியது.

நாம் பயன்படுத்தும் பொருளை விட அதன் மூலம் உணர்த்தப்படும் மதிப்பு பிரதானமாக இருக்கிறது. இந்த மதிப்பானது பொருளின் பயன்பாட்டுப் பெறுமதி, பரிவர்த்தனைப் பெறுமதி ஆகியவற்றை விடவும் உன்னதமாக நோக்கப்படுகிறது. இதற்கான நியமங்கள் இவ்விரு பெறுமதிகளைத் தாண்டிய குறிப்பீடு (transcendental signified) களால் வடிவமைகிறது. பண்டத்தின் மதிப்புப் பெறுமதி தொடர்பான சிந்தனை வளர்ச்சியே நுகர்வுக் கலாசாரத்தின் அடிப்படை. இது கார்ல்மார்க்ஸ் சிந்திக்கத் தவறிய புள்ளியிருந்து புதிய கருத்தியலாக வளர்ந்திருக்கிறது என்பதை Jean Baudrillard உலகத்திற்கு அறிமுகம் செய்தார். இதனால் ஒன்றை விட மற்றொன்று சிறந்தது எனும் எண்ணம் வளரத் தொடங்குகிறது. அப்போது புதிய புதிய பண்ட உற்பத்திகள் அபரிமிதமாக மேற்கொள்ளப்படுவதற்கு சாத்தியமாகிறது. இங்கு தேவைக்கேற்ற உற்பத்தி என்பதற்குப் பதிலாக உற்பத்திக்கேற்ப தேவை தீர்மானிக்கப்படுகிறது. இதன் போது நுகர்வு என்பது சூதாட்ட விளையாட்டாக மாற்றப்படுகிறது.

மதிப்பு நோக்கிய பார்வை தீவிரமடையும் போது தேவைகளின் அர்த்தமும் சிதைக்கப்படுகிறது. அப்போது கையிருப்பில் தேவைக்கதிகமாக இருக்கின்ற பண்டத்தின் மதிப்பும் திடீரென காலாவதியாக்கப்படுவதன் மூலம் புதிய தேவைகள் உருவாகி விடுகின்றன. அங்கு புதிதாக மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்கள் தொடர்ச்சியாக சந்தையை நிறைத்த படி இருக்கிறது. நுகர்வு ஒரு தொற்று நோய் போல பரவிக் கொண்டிருக்கையில் கார்ப்பரேட் முதலாளித்துவம் சராசரி வாழ்வைச் சூறையாடுவது புரியாதபடி இருக்க சூழலும் அதற்கேற்ப தகவமைக்கப்படுகிறது. இதை எளிதாக உணர்த்த Jean Baudrillard தனது Symbolic Exchange And Death எனும் நூலில் “If we consume the product as product, we consume its meaning through advertising “என்கிறார். இங்கு ஒரு உற்பத்தி பண்டத்தின் அர்த்தம் என்பது நம்மைச் சூழ்ந்திருக்கும் பகட்டான ஊடக விளம்பரங்களூடாக ஊட்டப்படுகிறது. எம்மையறியாமல் இது ஒரு கலாசார அதிகாரமாக எம்மை வழி நடத்துகிறது. எந்தவொரு மனிதனும் தான் நினைத்தபடி சுயாதீனமாக வாழ முடியாது. அவன் எதை உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை கார்ப்பரேட் சந்தைச் சக்திகளே தீர்மானிக்கின்றன. ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற அர்த்தப் போலிகளே மனிதர்களுக்கான பண்பாட்டுச் சாரமாக விநியோகமாகிறது. இந்த ஊடகங்கள் யாவும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தை வீரியத்தை மங்காமல் பாதுகாப்பதற்கென நிறுவப்பட்டவைதான். இந்த யுகம் கார்ப்பரேட் முதலாளித்துவ சக்திகளின் விளையாட்டு விதிகளூடாகவே வழி நடத்தப்படுகிறது. சமயம், அறம், ஒழுக்கம், மனிதாபிமானம், நீதி நேர்மை போன்ற யாவுமே சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவே கையாளப்படுகின்றன.

இது பிந்திய கால சிந்தனை வளர்ச்சி பற்றிய மேலோட்டமான எடுத்துரைப்புத்தான். உளவியல் முதல் பௌதீகவியல் என பல்வேறு துறைகளில் புதிய சிந்தனைகள் பல்கிப் பெருகி வரும் போது அவை இலக்கியங்களிலும் எடுத்தாளப்படுகிறது. பண்பாட்டு நுகர்வுச் சாதனமாக இலக்கியக் களம் செழிப்படைந்திருக்கும் தற்காலத்தில் அது புதிய சிந்தனைகளை உள்ளீர்க்காமல் நகர முடியாது. இந்த அவசியப்பாட்டை பின்நவீனத்துவ அணுகுமுறைகள் பூர்த்தி செய்து வருகின்றன. இந்தச் சிந்தனை முறை அதிகார வலியுறுத்துதலைக் கொண்டதாக இருப்பதில்லை. சகல விதமான இலக்கியக் கோலங்களையும் பரிசீலனைக்கென உள்ளீர்க்கும் தன்மை இதற்குண்டு. ஒற்றையான நிலைப்பாடுகளை வலியுறுத்தாமல் வித்தியாசங்களை அனுசரிக்கும் ஆற்றலை வேண்டி நிற்கிறது. மேற்கில் உருவான சிந்தனை முறை கீழைத்தேயத்திற்கு பொருத்தமற்றது எனும் குற்றச்சாட்டுகள் ஒரு காலத்தில் இதன் மீதான பிரதான தாக்குதலாக அமைந்திருந்தது. அதன் அறிவற்ற தர்க்க நிலையினை பின்னர் பலரும் உணர்ந்து விட்டனர். மேற்கில் உருவான சிந்தனை முறையானாலும், கீழைத்தேயத்தில் உருவான சிந்தனை முறையானாலும் அதன் உலகிற்குப் பயன்படும் முக்கியத்துவம்தான் அவசியமானது. பின்நவீனத்துவம் மேற்கில் பயன்படுத்தப்பட்ட விதத்திற்கும் இங்கு தமிழில் அது பயன்படுத்தப்படும் விதத்திற்கும் வேறுபாடுகளுண்டு. தமிழ் இலக்கியக் களத்தில் எமது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பின்நவீனத்துவ சிந்தனை முறைமைகளை உபயோகிப்பதுதான் பொருத்தமானது என்பதை நன்கு உணர்ந்து எமது எழுத்துக்களினூடாக அதனை முன்னெடுத்து வருகிறோம்.

மிகுந்த கருத்தியல் புரிதலோடு முன்னெடுக்கப்படும் எழுத்தியக்கம் ஒன்றின் செயல்பாடுகளை மேலெழுந்தவாரியான புரிதலோடு எதிர்கொள்ளும் சிலர் அதற்கு எதிரான அவநம்பிக்கைகளை அவதூறுகள் போல விதைக்க முனைகின்றனர்.  பின்நவீனத்துவ இலக்கியச் செயல்பாடுகளை விமர்சிக்க முனைபவர்கள் தெளிவான கருத்தியல் தளத்தில் இருந்து அதனைச் செய்ய முயலவில்லை.  அத்துடன் அதிகார நீக்கமுள்ள எந்தவொரு புதிய மாற்று கருத்தியலையும் அனுசரித்து உள்ளீர்க்கும் பின்நவீனத்துவ சிந்தனைகளை மரபுவாதிகள் எதிர்ப்பதற்கு பலமற்று இருக்கிறார்கள். பின்நவீனத்துவம் தன்னிடம் எந்த வித புனிதங்களையும் கொண்டிருக்கவில்லை. அதனை எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள் புனிதம் என்ற வசை கொண்டு தூற்ற எத்தனிக்கிறார்கள்.

கோமகன் ‘புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் தங்களது ஆவிகளை ஈழத்தில் உலாவ விட்டிருக்கின்றார்கள்’ என்று ஒரு விமர்சனம் றியாஸ் குரானாவுடனான நேர்காணலின் பொழுது எனக்குக் கிடைத்தது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஈழத்தைப் பற்றி எழுதுவதற்கு எதுவித தகுதியும் அற்றவர்கள் என்று எடுத்து கொள்ளலாமா? 

மிஹாத் : இது பற்றி றியாஸ்குரானா குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடு உண்டு.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்பவர்களின் முதல் தொகுதி இலங்கையிலிருந்து வெளியேறி நான்கு தசாப்தங்கள் கடந்து விட்டது. அதன் பிறகு இந்திய இராணுவத்தினுடனான போராட்ட காலத்தில், மற்றும் தொண்ணூறில், இறுதி யுத்த காலத்தில் என நாட்டை விட்டு வெளியேறியவர்களின் புலம்பெயர்வு இந்த நாட்டின் உள் விவகாரங்களில் தாக்கம் செலுத்தும் விடயமாக அமைந்திருக்கிறது.

பெரும்பாலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் யாவரும் பொருளீட்டும் நோக்கங்களுக்காகவே வெளிநாடு சென்றனர். அங்கு சென்றவர்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வராமல் இருப்பதற்கும், தாம் சென்ற நாடுகளில் அகதி அந்தஸ்து பெறவும், குடியுரிமை பெறவும் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை வசதியாக பயன்படுத்தினர் என்பதே உண்மை. இதற்காக பல வகையான ஆவணங்கள், இலக்கியங்கள், அரசியல் அறிக்கைகள் என்பன உருவாக்கப்பட்டன.

இவற்றுக்குப் புறம்பாக தமது மனதில் தேங்கிய போர் அனுபவங்களையும், வலிகளையும் எழுத்து மூலம் பதிவு செய்யவும் சிலர் முயன்றனர். இது காலப்போக்கில் ஒரு ஃபேஷனாகவும் மாறத் தொடங்கியது. போர் அனுபவங்களிலிருந்து பல தசாப்தங்கள் தூரமாக்கப்பட்டவர்களும் அதனை மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஒப்பாரி இலக்கியங்களாக எழுதிக்கொண்டிருந்தனர்.

சொந்த நிலத்தை வெறுத்து பொருளீட்டும் நோக்கில் வெளிநாடுகளில் நிரந்தர வாழ்விடங்களை அமைத்துக் கொண்ட குடியேறிகள் எல்லாம் பல வருடங்கள் கடந்த பின்பும் தாய்நாட்டு கழிவிரக்கங்களை எழுதிக் குவித்தபடியே இருக்கின்றனர். அவர்களுக்கு தாம் வாழுகின்ற நாடுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக எழுதும் அளவிற்கு எந்த விதமான வலிகளும் ஏற்படவில்லை. மாறாக தாய்நாட்டு துயரங்களே இன்னும் மனதை உறுத்தியபடி இருக்கிறது.

இலங்கையில் வாழும் மக்களில் பெரும் பகுதியினருக்கே போர் அந்நியமான அனுபவமாக கருதக் கூடியது என்ற போதும், இங்கு வாழ்வு பல வகைப்பட்டதாக உருமாறிக்கொண்டிருக்கிறது. இங்கு எழுதும் பலரின் எழுத்துகளுக்குள் சுயாதீனமான தேர்வுகள் வந்து விட்டன. ஆனால் எப்போதோ புலம்பெயர்ந்தவர்களின் நினைவுகளில் புதிய யுத்த வடுக்கள் எழுத்துக்களாக தெரிவது அருவருப்பாகவே தோன்றுகிறது.

வெளிநாடு சென்று பொருளீட்டுவதற்காக போரை புலம்பெயர்வுக் காரணியாக பயன்படுத்தியவர்கள் தாய்நாடு குறித்த ஏக்கங்களை எழுத்துகளில் வடிப்பது அசூசையானது என்ற போதும் அது தவறானதல்ல. ஆனால் அவர்களுக்கு தாய்நாட்டில் மீண்டும் வாழக் கூடிய நிலையிருந்தும் அதை தவிர்த்து விட்டு மேலை நாடுகளில் வாழ்ந்தபடி போலியான துயரங்களையும் போலியான தாய்நாட்டு ஏக்கங்களையும், போலியான அரசியல் விருப்புறுதிகளையும் இலக்கியங்களில் எழுத முற்படுவது கீழ் ரகமானது.

தமிழில் எந்த கறுமத்தையாவது எழுத வேண்டுமென்றால் அவர்களின் குடியேற்ற தேசங்களில் கிடைக்கும் சமகால அனுபவங்களிலிருந்து எழுத முடியுமே. அது தமிழ் இலக்கியத்திற்கும் புதிய அனுபவங்களை தரக் கூடும். ஆனால் அதை தவிர்த்து இலங்கையின் போரை மட்டும் எழுத முற்படுவதும், இலங்கையில் எப்போதோ விடுபட்ட வாழ்வின் நினைவுகளை இப்போதும் மீட்டெடுக்க முனைவதும், அதனை இலங்கையின் ஒட்டுமொத்த எழுத்து மனமாக நிறுவ முற்படுவதும் கண்டனத்துக்குரியது.

அது மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் இலங்கையில் வாழ்பவர்களின் இலக்கிய எஜமானர்கள் போல கையாள முற்படுவதும் கண்டிக்கத்தக்கது. தம்மிடம் ஓரளவு நிதி வசதி இருப்பதை ஒரு வாய்ப்பாகக் கருதிக் கொண்டு இலங்கையில் வாழும் எழுத்தாளர்களின் இலக்கியப் போக்கை தமது விருப்பத்திற்கேற்றவாறு கையாள எண்ணுவதும் கீழ்மையானது.

பொதுவாக இது போன்ற அனைத்து செயல்களிலும் எழுத்தாளர்கள் வெளிப்படுத்துகின்ற  தோற்றத்திலிருந்து அவர்களின் ஆன்மா இங்கு பேய் பிடித்து அலைவதாக கருதலாம். இதற்கு தகுந்த பரிகாரம் இலங்கையில் இருந்து செய்யப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆவிகளை இடைக்கிடையாவது அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் அலைய விடுங்கள்.

கோமகன் :  “சொந்த நிலத்தை வெறுத்து பொருளீட்டும் நோக்கில் வெளிநாடுகளில் நிரந்தர வாழ்விடங்களை அமைத்துக் கொண்ட குடியேறிகள்” என்று சொல்கின்றீர்கள். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லையே ? புலப்பெயர்வு என்பது கட்டம் கட்டமாக இடம்பெற்றது. 60/ 70 ஒருவகை, 70/80 இன்னொருவகை, 80-ற்குப்பிறகு மற்றொருவகை. இதில் நீங்கள் குறிப்பிட்ட பொருளாதார குடியேறிகள் 60/ 70- களில் இருந்திருக்கிறார்கள் மறுப்பதற்கில்லை, ஆனால் மற்றைய இரன்டு வகையும் மாற்றுக்கருத்து, அரசபயங்கரவாதம் போன்றவற்றில் இருந்து உயிர் தப்பவே புலப்பெயர்வு நிகழ்ந்திருக்கின்றது. இதில் இலங்கையில் இருக்கின்ற அனைத்து இனத்தவர்களுமே அடங்குகின்றார்கள். ஆனால், நீங்கள் எல்லோரையும் ஒரே கூடையினுள் போடுவது அபத்தமாக இல்லையா ?

மிஹாத் : இலங்கைச் சிறுபான்மை மக்களின் அகதி வாழ்க்கையானது நீண்ட வரலாற்றைக் கொண்டது. மலையக தமிழர்களே இலங்கையின் முதல் அகதிச் சமூகமாகும். 1983 ஜூலை கலவரத்தின் பின்னர்தான் தமிழ் அகதிகளின் பிரச்சினை அரசியல் முக்கியத்துவம் உடையதாக மாறியது.

அகதி என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி பரிந்துரைக்கும் அர்த்தமானது “கதியற்றவன்” என்பதாகும். வாழ்வதற்கு உத்தரவாதம் எதுவுமற்ற நிலையை இது குறிக்கிறது. ஆனால் இலங்கையின் போர்ச் சூழல்கள் உருவாக்கியதாகக் கூறப்படும் அகதிகள் எனப்படுவோரில் அதிகமானவர்கள் இந்த விதமான அர்த்தத்தில் நோக்கப்பட முடியாதவர்கள்.

அகதி விடயத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள், வள்ளங்களில் ஏறி தப்பியோடி தமிழக முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள்,மேலை நாடுகளுக்கு சட்ட விரோதமாகச் சென்று அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டவர்கள் என்று பல வகையுண்டு.

உள்நாட்டிலும், தமிழகத்திலும் அகதிகளானவர்களின் துயரங்கள் போரின் நிர்ப்பந்தங்களால் உருவானவை. அவர்களின் துயரங்கள் இன்று வரைக்கும் தீர்த்து வைக்கப்படாதவை. அகதியாதலில் மாற்றுக் கருத்தாளர்கள், அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய வகையினர் மட்டுமில்லை. புலிப் பயங்கரவாதத்தினால் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களும், முஸ்லிம்களும் அடங்குவர். 1995 ஜயசிகுறு இராணுவ நடவடிக்கையின் பின்னர் யாழ் மாவட்டத்திலிருந்து புலிகளினால் வன்னிக்கு இடம்பெயர்க்கப்பட்ட தமிழ் மக்களும்,  தொண்ணூறில் புலிகளினால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பிற பிரதேசங்களில் தஞ்சமடைந்த  முஸ்லிம்களும் அகதிகளே. இவற்றை தமிழ் பொது மனதின் நினைவில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை பலரும் முன்னெடுத்தாலும் செங்கை ஆழியான், சாத்திரி போன்ற படைப்பாளிகள் தமது புனைவுகளுக்குள் கொண்டு வந்ததை முக்கியமாகக் கருத வேண்டும்.

ஆனால்மேற்கு நாடுகளில் அகதியானவர்களின் துயர நிலை அவ்வாறானதல்ல. அவர்கள் குழுவாகவோ அல்லது தனி நபர்களாகவோ அவர்களே உருவாக்கிக் கொண்ட பொருளீட்டுவதற்கான பயணமது. ஜூலை கலவரத்தின் பின்னர் உருவான அகதி வாழ்வின் துயரங்களை தீர்க்க 1987 இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் ஏற்பட்ட அமைதிச் சூழலில் வழியேற்பட்டது. ஆனால் வேண்டுமென்றே அது புலிகளால் தவற விடப்பட்டது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் தொழில்சார் நிபுணத்துவம் கொண்டவர்களே. அவர்களின் புலம்பெயர்வுக்கும் போருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. ஆனால் 1983 ஜூலை கலவரத்திற்கு பின்னரான சூழலில் மேற்கு நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு வீசா வழங்கும் நடைமுறையை அமுல்படுத்தியது. அதன்போது மேற்குலக தூதரகங்கள் வழியாக வெளிநாடு செல்லும் யோகம் பெற்றவர்கள் எல்லோரும் போரின் அச்சுறுத்தலுக்கு இலக்கானவர்களல்லர். பெரும்பாலும் நகர்ப்புற உயர் வகுப்பு தமிழர்களே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.

வடக்கிலும், கிழக்கிலும் போர் உருவான போது அதனோடு தொடர்புற்றுக் கிடந்த கீழ்நிலைத் தமிழர்களுக்கு உள்நாட்டில் போராடுவதற்கான வாய்ப்புகளே கிடைத்தனவேயொழிய மேற்குலகில் அகதியாகி பொருளீட்டும் வாய்ப்புகள் கிடைக்கவேயில்லை. நலிவடைந்தவர்களுக்கே மண்பற்றும், இன விடுதலைப் போரும் எனும் நிலை தவிர்க்க முடியாமல் திணிக்கப்பட்டது. மேட்டுக்குடிகளுக்கு டயஸ்போறா உல்லாச கோஷம் எனும் புது விதி உருவானது.

தொண்ணூறின் பிறகான அகதி வாழ்வானது பலதரப்பட்டது. அதில் பெருமளவான சீரழிவுகள் புலிகளின் தொலைநோக்கற்ற தீர்மானங்களால் உருவானவை. இரண்டாம் கட்ட ஈழப் போர் என்பது மிக அதிகமான அகதிகளை மேற்குலகத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நிரலோடு தொடங்கப்பட்டது. அதற்கென பலநூறு பணியாள் மாபியாக்கள் கண்டங்கள் முழுவதும் அமர்த்தப்பட்டிருந்தனர். அந்தக் காலத்தில் மேற்கில் அகதியாதல் என்பது மிகை பொருளீட்டும் வியாபார செயல்பாடாக நம்பப்பட்டது. போரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அறவே சம்பந்தப்பட்டிருக்காத எண்ணிலடங்கா இலங்கை தமிழ் மக்கள் மேற்குலக அகதி முகாம்களை நிரப்பத் தொடங்கினர். இந்த வகைப்பட்ட திரைகடலோடி திரவியம் தேடும் முயற்சிக்கு ஈழப்போரை பயன்படுத்திய கூட்டத்தினரை அகதி என்ற வரையறைக்குள் வகைப்படுத்துவது போரின் மூலம் உண்மையாகவே பாதிக்கப்பட்டு இலங்கையிலும், தமிழகத்திலும் அல்லலுறும் அகதிகளுக்குச் செய்யும் துரோகமாகவே நோக்க முடியும். நிஜமான அகதிகள் பெரும்பாலும் இவ்விரு பிரதேசங்களில்தான் இருக்கின்றனர்.

மாற்றுக் கருத்தாளர்கள் என்ற அடிப்படையில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் சொற்ப அளவானவர்களே. இதில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்கள், அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்கள் என்பவர்களே பெரும்பாலும் அடக்கம். இவர்களில் ஒரு பகுதியினர் தலைமறைவாகவோ அல்லது இராணுவ அனுசரணையுடனோ உள்நாட்டில் வாழப் பழகிக் கொண்டனர். ஏனையோர் கூட நாட்டை விட்டு வெளியேறியதற்கான பிரதான காரணம் பொருளீட்டல்தான் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

இப்படியான பின்னணியில் புலம்பெயர்வாளர்களை நோக்கும் போது எண்பதுகளுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளுக்குச் சென்றவர்கள் அனைவரையும் திரைகடலோடி திரவியம் தேடிய இலங்கையர் எனும்  கூடையுள் போடுவதைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. இவர்கள் இன்று டயஸ்போறா சமூகமாக மாறி விட்டனர். பெரும் வணிகச் சுழலுக்குள் இவர்களின் வாழ்க்கை சுழல விடப்பட்டுள்ளது. இதன் மூலம் புது வகை பண்பாட்டு நெருக்கடிகளையும், புது வித பொருளாதார நெருக்கடிகளையும்,  இலங்கைக்கு முற்றிலும் அந்நியமான வாழ்க்கை முறைகளையும் கொண்ட கூட்டமாக இவர்கள் உருவாகி வருகின்றனர். இந்த நிலையில் கூட தம்மிடமுள்ள வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர் போக்கில் ரிமோட் கொன்ரோல் செயல்பாடுகளை மேற்கொள்ள இவர்கள் முயல்கிறார்கள் என்பதே உண்மை.

கோமகன் : “இலங்கையின் போரை மட்டும் எழுத முற்படுவதும், இலங்கையில் எப்போதோ விடுபட்ட வாழ்வின் நினைவுகளை இப்போதும் மீட்டெடுக்க முனைவதும், அதனை இலங்கையின் ஒட்டுமொத்த எழுத்து மனமாக நிறுவ முற்படுவதும் கண்டனத்துக்குரியது.” என்று சொல்கின்றீர்கள். ஆனால், ஏறத்தாழ 30 வருடகாலமாக போர்சூழலில் இருந்தவர்களால் வேறு எதை தரமுடியும் எனக்கருதுகின்றீர்கள்? அத்துடன் 2 ஆவது உலகப்போர் நடைப்பெற்று பலவருடங்கள் ஆகிய பின்னரும் பல சாகாவரம் பெற்ற இலக்கியப்படைப்புகள் வந்திருக்கின்றதே ? அவர்கள் நீங்கள் கூறியவாறு போர்வலிகளை வெறுத்து ஒதுக்கவில்லையே …….?

மிஹாத் : நீங்கள் இரண்டு விடயங்களை குறிப்பிடுகிறீர்கள்.

1 // முப்பது வருட போர்ச் சூழலுக்குள் வாழ்ந்தவர்கள் வேறு எதனைத்தான் எழுத முடியும் //

  1. // போரின் வலிகளைப் பேசுவது நியாயமானது. இரண்டாம் உலகப் போரின் வலிகளைப் பேசும் இலக்கியங்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன //

முதலாவது விடயத்திற்கு பதிலளிப்பதென்றால் இரு விடயங்கள் தெளிவு படுத்தப்பட வேண்டும்.

அவை,

போர் பற்றி எழுதப்பட்ட உள்ளூர் எழுத்தாளர்களின் எழுத்துக்கள். மற்றையது போர் பற்றி எழுதப்பட்ட புலம்பெயர் எழுத்தாளர்களின் எழுத்துக்கள்.

போர் பற்றி எழுதப்பட்ட உள்ளூர் எழுத்தாளர்களின் பிரதிகளுக்கும், புலம்பெயர் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகளை அவதானிக்க முடியும். இரண்டு வகைப் பிரதிகளும் பேசும் போர் பற்றிய பார்வைகளும், அனுபவங்களும் வேறான கோணங்களில் அமைகின்றன. நீங்கள் குறிப்பிடும் முப்பது வருட போர் அனுபவங்களை சுமந்தவர்கள் உள்நாட்டில்தான் வசிக்கிறார்களே தவிர புலம்பெயர் தேசங்களில் இல்லை.

புலத்தில் வசித்தபடி எழுதுபவர்கள் போரின் சில காலத் துளி அனுபவங்களை மாத்திரம் சுமந்தவர்களே. அத்தோடு அவர்களின் எழுத்துகளுக்குள் போர் வலிகளை அதீதமாக பரப்புரை செய்யும் நோக்கம் தென்படுகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த காலம் முழுவதும் மக்கள் போரைத் தவிர வேறு எதனையும் அனுபவிக்கவில்லை எனும் போலியான அபிப்பிராயத்தை உருவாக்குகிறார்கள்.

இலங்கையில் முப்பது வருட காலம் போர் இடம்பெற்றது உண்மை. ஆனால் அது எல்லா நிலப்பகுதியிலும் நடைபெறவில்லை. எண்பது முதல் தொண்ணூறு வரையான காலப்பகுதியில் நேரடி யுத்தங்கள் இடம்பெறவில்லை. அக்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மாத்திரம் கெரில்லா சண்டைகளே இடம்பெற்றன. தொண்ணூறுக்குப் பிறகான இருபது வருடங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நேரடி யுத்தங்கள் இடம்பெற்றன.

போர் நிகழ்ந்த பிரதேசங்களைத் தவிர்த்து வாழ்ந்த மக்களுக்கு போரின் நேரடி அனுபவங்களை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அந்த மக்களின் வாழ்க்கை வேறு விதமானவை. அதாவது கடந்த முப்பது ஆண்டுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த எல்லா பிரதேச மக்களையும் போர் வாழ்க்கை பாதிக்கவில்லை. ஆனால் சில எழுத்தாளர்களின் படைப்புகள் இதனை மூடி மறைத்து போர் மட்டுமே அனைத்து மக்களின் வாழ்வாக இருந்தது போல சித்தரித்து விடுகிறது.

போர்ச் சூழலுக்குள் வாழ்ந்தவர்கள் போரை மட்டுமே எழுத முடியும் எனும் கருத்து மிக தவறானது. எதை எழுத வேண்டும் என்பது சுயாதீனமானது. ஆனால் இங்கு பெரும்பாலும் திட்டமிடப்பட்ட பிரச்சாரங்களே எழுத்துக்கள் எனும் போர்வையில் உருவாக்கப்பட்டன.

புலம்பெயர்ந்தவர்கள் எழுதிய போர் வலிகள் எனப்படுபவை எதிரியாக வடிவமைக்கப்பட்டவர்கள் மீதான கொலைகளை கொண்டாடியவை. தமது பக்கத்து மனிதர்களின் கொலைகளை அனுதாப பிரச்சாரமாக முன்னெடுத்தவை. தமக்கு வேண்டாத மனிதர்களின் மீதும் இனக்குழுக்களின் மீதும்  பழியுணர்ச்சியை கூர்மைப்படுத்தியவை. சாத்தியமற்ற இலட்சியங்கள் மூலம் மக்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளியவை. அந்தப் பிரச்சார எழுத்துகளின் வழியே போரை நிலைத்திருக்கச் செய்து மேலை நாடுகளில் தமது இருப்புகளை உறுதிப்படுத்தியவை. இந்த விதமான எழுத்துக்களுக்கு போருக்கு பிறகான காலத்தில் பொருளுமில்லை தேவைப்பாடுமில்லை.

நாம் இங்கு போரின் வலிகளைப் பேசுவது தவறென்று வாதிடவில்லை. இரண்டாம் உலகப் போரின் வலிகளைப் பேசும் இலக்கியங்களையும் வெறுத்தொதுக்கவில்லை. போரின் வலிகளைப் பேசும் இலக்கியங்கள் போரை முன்னெடுக்கும் ஒரு தரப்பை ஊக்குவிப்பதாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சாதாரண மக்களின்  வாழ்வையும், வலிகளையும் போர்ச்சூழலுக்குள் இருந்து நோக்கும் இலக்கியங்களே கொண்டாடப்படக் கூடியவை.

போர் இலக்கியங்கள் என்ற பெயரில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட எண்ணற்ற பிரச்சார இலக்கியங்களை விடவும் இலங்கையிலிருந்து எழுதப்பட்ட புனைவுகள் முக்கியத்துவமுடையவை. போர்ச்சூழலுக்குள் அல்லலுற்ற சாதாரண மக்களின் வாழ்வை காட்சிப்படுத்திய புனைவுகளில் செங்கை ஆழியானின் “மரணம் மலிந்த பூமி ” மற்றும் எஸ்.ஏ.உதயன் எழுதிய ” தெம்மாடுகள் ” போன்றவை குறிப்பிடக் கூடியவை.

“மரணம் மலிந்த பூமி” எனும் நாவலானது,  95ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யாழ்பாணத்தைவிட்டு 5 இலட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கவனத்திற்கொண்டு எழுதப்பட்டது. மக்களுக்காக போராட வந்த இயக்கத்தை, ராணுவத்தை, மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை இந்நாவல்  வெளிப்படுத்துகிறது.

மக்களோடு தாயகத்திலேயே வாழ்ந்து அந்த மக்களின் துயரங்களையும், அவர்களின் இயலாமைகளையும், அவர்களின் இழப்புக்களையும், மிக ஆழமான சம்பவங்களினுாடாக பதிவு செய்திருக்கிறது.

அந்த வெளியேற்றத்தின்போது, ஒரு கதாபாத்திரம் 90 களில் யாழ்பாணத்தைவிட்டு முஸ்லிம்களை வெளியேற்றியதையும் நினைவுபடுத்துகிறது.

போரட்டத்திற்கிருந்த நியாயம், ஆனால், அதை வழிநடத்தியதில் இருந்த பிற்போக்குத்தனம், என அனைத்தையும் சாதாரண மக்களின் அனுபவப்பதிவுகள், உரையாடல்கள் என ஒரு பன்மையான விரிந்த தளத்தில் இந்நாவல் அணுகுகிறது.

“தெம்மாடுகள் ” எனும் நாவலானது போரினால் பாதிக்கப்பட்ட ஒரு கடலோர கிராமத்து மக்களின் வாழ்வானது எவ்வாறு சிதைவடைந்து அகதி வாழ்வாக சீரழிகிறது என்பதை விபரிக்கிறது. இயல்பான சம்பவங்களூடாக விடுதலைப் போராளிகளையும், இராணுவத்தினரையும், போலி சமூக ஆர்வலர்களையும், போராளிக் குடும்பங்களையும் விமர்சனம் செய்கிறது. போரில் ஈடுபடும் போராளித் தரப்புக்கும், அப்பாவி மக்களுக்கும் இடையிலான வாழ்வின் வேறுபாடுகளை பல்வேறு உரையாடல்கள் ஊடே உணர்த்தும் கதையோட்டம் இந்நாவலின் சிறப்பாகும். எந்த விதமான ஆயுத அமைப்புக்கோ அல்லது அதிகார கட்டமைப்புக்கோ அல்லது தவறான இலட்சியங்களுக்கோ சாய்வு கொள்ளாமல் நலிவுற்ற மனிதர்கள் மீதான அக்கறையாக விரியும் கதை என்பதால் அதிகாரத்தின் மகிமைக்கு வெளியே நிற்கிறது.

இது போன்ற கதைகளே போரின் தகிப்பு கொண்ட மனித வாதைகளைப் பேசுபவை. இது போன்ற கதைகளே காலம் கடந்தும் அர்த்தம் பொதிந்தவையாய் அமைகின்றன. இது போன்ற கதைகளே போருக்குப் பிறகும் புனைவின் வசீகரம் குன்றாமல் இருப்பவை.இவை போன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட இரண்டாம் உலகப் போரின் வலிகளைப் பேசும் கதைகளுமாகும்.

புலம்பெயர் சூழலில் எழுதப்படுபவையெல்லாம் அமைப்பாக்கமான தேவைகளுக்கு பிரச்சாரம் செய்ய போலி வலிகளை பேசுகின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கையில் போர் வலிகளை பேசிய இலக்கியங்களை விட வாழ்வின் ஏனைய பரிமாணங்களை பேசிய இலக்கியங்களே மிக அதிகம். போருக்கு வெளியில்தான் அதிகமான தமிழர்களின் வாழ்வு தங்கியிருந்தது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

கோமகன் : பாரம்பரிய சிறுகதை வடிவம் இன்று காலாவதியாகி விட்டதா ? ஆம் என்றால் இன்றும் அன்ரன் செக்கோவ் மார்க்சிம் கோர்க்கி லியோ ரோல்ஸ்டாய்  போன்றோர்களது படைப்புகள் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன ?

மிஹாத் : பாரம்பரிய சிறுகதை வடிவங்கள் காலாவதி ஆகி விட்டதா என்ற கேள்விக்கு ஒரு சொல்லில் பதிலளிக்க வேண்டுமாக இருந்தால், ஆம் என்று கூறி விட முடியும். ஆனால் அது பற்றி விளக்காமல் விட்டால் அந்த பதில் பூரணமற்றதாகவே இருக்கும்.

நீங்கள் தமிழில் பாரம்பரிய சிறுகதை வடிவங்கள் காலாவதி ஆகி விட்டதா என்றொரு பீடிகையை முன்வைக்காமல் விட்டது ஆறுதல்.

சிறுகதை வடிவம் என்பது அது தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை பல்வேறு எடுத்துரைப்பு முறை மாற்றங்களுக்கும், வடிவ மாற்றங்களுக்கும் உட்பட்டே வந்திருக்கிறது.  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய அதிகார பீடங்களுக்கும், சமூக அறங்களுக்கு இசைவானதாகவும் சிறுகதைகள் உருவாக்கப்படிருக்கின்றன.

இந்த விதமான கருத்தியல்களுக்கு உட்பட்டு புனையப்பட்ட சிறுகதைகள் வாசகர்களை ஏவலர்கள் போலவே நடத்த எத்தனிக்கிறது. வாசிப்பு என்பது உரைப்பவன் × செவிமடுப்பவன் என்ற பொதுவான பிரசங்கச் சடங்கு நிலையில் செயல்படும் காரியமாக நம்பப்பட்ட போது மரபான சிறுகதைகளுக்கு மவுசு இருந்தது. அவை வாசகர்களுக்கு அறங்களை போதித்தன. அதிகாரங்களை எவ்வாறு அனுசரித்து வாழ்வது என வகுப்பெடுத்தன. சிறுகதைகளின் வடிவங்கள் காலத்துக்கு காலம் மாற்றங்களை பெறுவது வெறும் கவன ஈர்ப்பையும், கவர்ச்சியையும் பேணுவதற்கானதாக சிந்திக்கப்பட்டால் அது பிரச்சினைக்குரியது. சிறுகதைகளின் உள்ளடக்கமும், வடிவமும் பிற்காலத்தில் தோன்றிய கோட்பாட்டு விழிப்புணர்வுடன் கூடியதாக உணரப்படும் போது உருவாகும் மாற்றங்களைத்தான் இங்கு முக்கிய அம்சமாக கருத வேண்டியிருக்கிறது.

இந்த வகையான புரிதலுக்குட்பட்டு நோக்கும் போது பழைய மரபான சிறுகதைகள் வலியுறுத்தும் விடயங்களில் இருந்து புதிய இலக்கிய சிந்தனைகளால் வடிவமைக்கப்படும் சிறுகதைகள் பாரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. எடுத்துரைப்பு, உள்கூறு, வடிவம் போன்ற அனைத்திலும் இந்த வேறுபாடுகள் நிலைநிறுத்தப்படுகின்றன. மொழி பற்றிய புதிய கோட்பாட்டுப் புரிதல்களும், இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில் நுகர்வுக் கலாசாரத்தினால் வடிவமையும் வாழ்வும் சிறுகதைகளின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களை உருவாக்கி விட்டன. அதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சிறுகதைகளை இன்றைய புதிய மாற்றங்களின் வழியாக பரிசீலிக்கும் போது அவை காலாவதி நிலையை அடைந்து விட்டன என்பதை பகிரங்கமாக கூற முடியும்.

இதனோடு நீங்கள் எழுப்பியிருக்கும் உப கேள்விக்கான பதிலையும் கூறித்தானாக வேண்டும். அந்தன் செகோவ், மார்க்சிம் கார்க்கி போன்றவர்களின் கதைகள் இன்றும் கொண்டாடப்படுவதற்கான காரணங்களை முன்வைத்து மரபான சிறுகதைகள் காலாவதியாகவில்லை என்பதை நிரூபிப்பதே உங்கள் எண்ணமாக இருக்கிறது.

அந்தன் செகோவ், மார்க்சிம் கார்க்கியின் கதைகள் மட்டுமல்ல இன்னும் பலரின் கதைகளும் ஆங்காங்கே கொண்டாடப்படுகின்றனதான். புதிய இலக்கிய சிந்தனைகளால் இதுவரை தமது புரிதலை வளப்படுத்தாதவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட முடியும் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது ஒரு விதமான nostalgic mania என்றே எண்ணுகிறேன். பழையவற்றின் மீது ஏற்படும் ஈடுபாடு. அரிதான antique பொருட்களின் மீது ஏற்படும் மோகத்தைப் போன்றது. இதுவும் ஒரு விதமான கொண்டாட்டம்தான். அறுபது வருடங்களுக்கு முன்பு இறந்து போன மார்லின் மன்றோவின் நிக்கரை பல லட்சம் டொலர் கொடுத்து வாங்கும் கலா ரசிகனின் மோகத்துக்கு இணையானது. எப்படித்தான் மார்லின் மன்றோவின் நிக்கர் அதிகமாக விலை போனாலும் அது இன்று சந்தையில் உற்பத்தியாகும் புதிய நிக்கருக்கு இணையானதாக இருக்கப் போவதில்லை. அந்த நோக்கத்தில் அதை அணியவும் வாய்ப்பிருக்காது. அதைப் போன்றதுதான் நீங்கள் குறிப்பிடும் கொண்டாட்டங்களும். பெல் பொட்டம் கால்சட்டைகள் ஒரு காலத்தில் மிகவும் ஃபேசனாக அணிந்து கொள்ளப்பட்ட ஆடையாகும். அது பின்னர் காலாவதியாகி விட்டது. அதை இப்போது கொண்டாடப் போகிறேன் என்று கூறியபடி அணிந்து கொண்டு வீதியில் இறங்கினால் எப்படி இருக்கும்.

ஆகவே பழையவற்றில் ஏற்படுகின்ற ஈர்ப்பு என்பது தற்காலத்தில் உருவாக்கப்படுகின்ற புதிய உற்பத்திகளை நிராகரிக்கின்ற செயல் அல்ல. மாறாக காலாவதியான முன்னொரு காலத்தின் பொருட்களை நினைவில் மீட்டுதல் பற்றியதுதான். இது இலக்கியத்தில் காலாவதியான சரக்குகளுக்கும் பொருந்தும்.

கலகச் செயல் தொடரும்…………………………

மிஹாத்– இலங்கை, கோமகன்-பிரான்ஸ்

0000000000000000000000000000000000

மிஹாத்
மிஹாத்

மிஹாத் பற்றிய சிறுகுறிப்பு :

அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்ட மிகாத் இடதுசாரிய சிந்தனையாளர்களில் ஒருவர். அத்துடன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி. அடிப்படையில் இவர் ஓர் தேர்ந்த விமர்சகராகவே இனங்காணப்பட்டுள்ளார். வயதில் இளையவரான இவரது இலக்கிய ,அரசியல் நுண்அறிவு வியக்க வைக்கின்றன. இவர் ஒரு கால கட்டத்தில் கிழக்கிலங்கையின் ‘பெருவெளி’ குழுமத்தின் செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவருடன் கவிஞர் மஜீத், றியாஸ் குரானா, றபியூஸ், அப்துல் ரஸாக், காலித், றிஜால்டீன், பர்ஷான் போன்றவர்களும் ‘பெருவெளி’ குழுமத்தில் செயற்பட்டிருக்கின்றார்கள். நான் செய்துகொண்ட நேர்காணலில் மிகவும் நீண்ட நேர்காணல் இவரது நேர்காணலாகும். வாசகர்களது நேரத்தையும் பக்கங்களின் அளவையும் கருத்தில் கொண்டு இந்த நேர்காணலை இரண்டு பாகங்களாகப் பிரித்து போடுகின்றேன். முதலாவது பாகம் ‘இலக்கியத்தையும்’ இரண்டாவது பாகம் ‘அரசியலையும்’ நடு வாசகர்களாகிய உங்களுடன் பேசும். நன்றி .

கோமகன்

0000000000000000000000000000000000

கோமகன்

 

 

(Visited 602 times, 1 visits today)
 

One thought on “நேர்காணல்-பகுதி 01-இலக்கியம்-மிஹாத்-கோமகன்”

Comments are closed.