ஜூன் மாதத்து மாலை-மொழிபெயர்ப்புக் கவிதை-ரூபன் சிவராசா

ஜூன் மாதத்து மாலை

ரூபன் சிவராசா

நீலத்திரை உடுத்திய
ஜூன்மாத மாலைப்பொழுது
தாழ்வாரத்தில் அமர்ந்து
குளிர்காய்ந்து கொண்டிருக்கிறோம்
காண்பதெல்லாம்
இரட்டை வாழ்வின் தோற்றம்
நாம் புலனொருமித்து உற்றுணர்வில்
பார் – மூழ்கிய சூரியக் கதிர்களினூடு
சிவந்து பளபளத்துக் கிடக்கிறது காட்டுக்குளம்
பழைய வெள்ளிப்பொருள் போல்
மினுக்கம் காட்டியபடி
படலையின் செடிவேலியில்
புதிதாய் மலர்ந்த பூக்கள்
அமைதியாய் கனன்று கொண்டிருக்கின்றன
இப்பொழுது அவற்றை
காற்றின் சுவாசநடுக்கம் பற்றிக்கொள்கிறது
ஏதோ மிக அவசரம் போல் தோற்றம் காட்டுகிறது.
ஓ..இந்த சமையலறைத் தாழ்வாரத்திற்குள்
என்னருகில் நெருங்கி வா
மனிதர் நாம் ஒருவரோடொருவர்
நெருங்கியிருக்கும் தருணங்கள்
அதிசயிக்கும் வகையில் சொற்பமானவை

Hans Børli

தமிழில் : ரூபன் சிவராஜா

0000000000000000000000000000000

நீ

ரூபன் சிவராசா

நீ நகரத்திற்கு வந்துவிடு
எனக்குத் தெளிவாகத் தெரிகிறது
இங்கிருக்கும் எல்லா வீடுகளும்
என்னைப் பார்த்துப் புன்னகைக்கின்றன
உன்னை நான் நேசிப்பதை அவை புரிந்திருக்கின்றன
நீ நகரத்திற்கு வந்துவிடு
பூங்காவிலுள்ள மரங்களில் நான் அதனைக் காண்கிறேன்
அசையும் இலைகளுடன் நின்றபடி அம்மரங்கள்
காற்றிடமிருந்தும் சூரியனிடமிருந்தும்
முத்தங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
நீ நகரத்திற்கு வந்துவிடு
ஆதலால் தான்
ஒளியிலிருந்து… காற்றிலிருந்து…
தென்றலில் அசையும் பாய்மரக்கப்பலிலிருந்து
கற்பனைக்கும் எட்டாத
இந்தப் பேரானந்தம் சித்திக்கிறது
எல்லாமும் வித்தியாசமாய் இருக்கிறது இன்று
நேற்றைய பொழுது
சாம்பல் அப்பியிருந்த வீட்டுவரிசைகள்
இன்று அந்தியின் மஞ்சளிலும் ஊதாவிலும் மூழ்கியிருக்கிறது
நேற்றைய பொழுது
பேரூந்துகளுக்கும் சிற்றுந்துகளுக்கும் செல்லும் பாதையில்
அன்றாட வழிப்போக்கர்களாக இருந்தவர்கள்
இன்று உள்ளார்ந்து நெருங்கிய மனிதர்களாகிவிட்டனர்
நேற்றைய பொழுது
போக்குவரத்து நெரிசலாகவும்
இரைச்சல்களாகவும் இருந்தவை
இன்று நகரத்தின் இதய நாதமாகிவிட்டன
அனைத்தையும் முன்னகர்த்தும் மூலமாகியும் நிற்கின்றன
சுருங்கக்கூறின்: நீ நகரத்திற்கு வந்துவிடு

Marie Takvem

தமிழில் : ரூபன் சிவராசா-நோர்வே

ரூபன் சிவராசா

(Visited 72 times, 1 visits today)