வனச்சிறுக்கி-கவிதை- கவிதா லட்சுமி

வனச்சிறுக்கி

கவிதா லட்சுமி

அந்தக் காட்டினில்
ஒரு
வனச்சிறுக்கியைப் போல
பெயர் அறியாததொரு
பூவைத் தேடி புறப்படவும்

சூனியக்காரியைப் போல
பறக்கும் கட்டையின் மேலேறி
வானளாவக் கிளம்பும்
பெருவிருப்பிலும்
மந்தையில் இருந்து கழன்றதொரு
ஆட்டுக்குட்டியைப்போல
காலத்தைத் தாண்டியோடும்
கனவுகளைச் சமைக்கிறது
மனம்.

நளினமுமற்று நாணமுமற்று
மதயானையின் வேகம்
உச்சந்தலையில் சுர்ரென ஏற
முள்வேலியைப் பிய்த்தெறியும்;
ஒரு வேட்டை மிருகத்தைப்போலது
சிலிர்த்துக் கிளம்புகிறது.

ஆட்டுக்குட்டிகள் சிலிர்க்கலாகாது
சிலிர்தாலும் சீறலாகாது
இது வேதாளத்தின்
அறிகுறியென
வனச்சிறுமிக்கு யார்யாரோ
சொல்லிப் போகிறார்கள்.

தலைகீழாய் தொங்குவதே
புனிதமோ என்ன இழவோ
பல்லாயிரம் ஆண்டுகளாய்
அதே கொப்பில்
தொங்கும் வேதாளம்
குதித்து பெருவெளியின்
தோள்களிற் தாவினாலும்
வேதாளத்தை
மீண்டும் மரமேற்றும் வித்தை
விக்கிரமாதித்தன்களுக்குத் தெரியும்.

கழுத்திலோ
ஒரு மரத்திலோ
தொங்குதலே
வேதாளத்தின் தர்மமென்றால்

இனி…
எந்தக் கேள்வியுமில்லாமல்
கிளம்பினால்தான் உண்டு.

000000000000000000000000000

அப்படியே விடு

‘ஒரு வெற்றுத்தாள்’
உனக்குப் பரிசளிக்க விரும்பினேன்
இது
வெற்றுத்தாள் எனத் தோன்றினால்
எழுது!
என்ன தோன்றுகிறதோ
அதை அப்படியே எழுது

கிறுக்கிப் போடு!

இது
அட்சயப்பாத்திரம் எனின்
கேள்!
என்ன தோன்றுகிறதோ
அத்தனையும் கேள்!

விட்டுப் போ!

இதுவொரு
நூல்போல தெரிந்தால்
படி!
பிடித்ததைத் தேடிப் படி!
வார்த்தையுள் கரை!

திருப்பிக் கொடு!

இதே
ஒரு இயற்கையின் துளி என்றால்
விடு!
எப்படி இருக்கிறதோ
அப்படியே விடு!

நின்று நனை!

இதுதான் வாழ்தல்
என உணர்ந்தால்
மனம் போனபோக்கில்
கசக்கு,
கிழித்தெறி!
காற்றில் வீசு!
கடந்து போ!

கவிதா லட்சுமி-நோர்வே

கவிதா லக்ஷ்மி

(Visited 131 times, 1 visits today)