உலகப் பெருந்தொற்றுகளின் கதை-மருத்துவத்தொடர்-பாகம் 4- ‘எயிட்ஸ்(AIDS) ’ -யோ.அன்ரனி யூட்

நவீன கொரனா வைரசின் தோற்றம் பற்றிய புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இது வரை மனிதனில் நோயை உருவாக்கிய கொரனா வைரசுகள் ஏதாவதொரு விலங்கில் இருந்து மனிதனுக்குத் தாவிய பின்னர் நோயை உருவாக்கின. நவீன கொரனா வைரஸும் இவ்வாறு ஏதாவதொரு விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவியதாகவே பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், பூகோள அரசியல், விஞ்ஞானத்திலும் செல்வாக்குச் செலுத்தும் துர்ப்பாக்கிய நிலையில், சீன ஆய்வுகூடத்திலிருந்து நவீன கொரனா வைரஸ் பரவியிருக்கலாமோ என்ற சந்தேகத்திற்கு இடங் கொடுக்க வேண்டியிருக்கிறது.

யோ.அன்ரனி யூட்உண்மையில், பெரும்பாலான வைரசுகள் எங்கேயிருந்து தான் வருகின்றன? மனிதனைத் தாக்கும் சில வைரசுகள் காட்டு விலங்குகளிலும் பறவைகளிலும் நிரந்தரமாக பரவிக் காணப்படுகின்றன. ஏனைய நுண்ணுயிர்கள் போலல்லாது வைரசுகள் தொற்றை ஏற்படுத்த வேண்டுமெனில், அது ஒட்டிக் கொள்ளக் கூடிய பொருத்தமான கலம் கிடைக்க வேண்டும். இப்படி ஒட்டிக் கொள்ள வைரசின் உடலில் இருக்கும் மூலக்கூறும் அது தொற்றும் விருந்து வழங்கியின் உடற் கலத்தில் இருக்கும் மூலக்கூறும் திறப்பும் சாவியும் போலப் பொருந்தி வர வேண்டும். இதனால் பெரும்பாலான வைரசுகள் ஒரு குறிப்பிட்ட விலங்கினத்தில் மட்டுமே நோயை ஏற்படுத்தும். விகாரங்கள் காரணமாக ஒரு வைரஸ் தன் உடலை மாற்றிக் கொள்ளும் போது, அது விலங்கினங்கள் தாண்டி மனிதனின் உடலினுள்ளும் நுழையக் கூடிய சாவியைப் பெற்றுக் கொள்ளக் கூடும். இத்தகைய ஒரு மாற்றம் தான் எச்.ஐ.வி எனப்படும் எயிட்ஸ் வைரஸ் ஆபிரிக்க குரங்கினங்களில் இருந்து மனிதனுக்குத் தாவக் காரணமாக இருந்தது.

அமெரிக்காவில் எச்.ஐ.வி என்ற வைரஸ் முதலில் மனிதர்களில் கண்டுபிடிக்கப் பட்டது 1980 களில். ஆனால், இரு வகையான ஆபிரிக்கக் குரங்கினங்களில் இருந்து மனிதனுக்கு எச்.ஐ.வி வைரஸ் பாய்ந்தது 1900 களில் என்று கணிக்கின்றன ஆய்வுகள். ஏனைய வைரசுகள் போல அல்லாது  எச். ஐ.வி வைரஸ் ஏற்படுத்தும் நோய் உடனடியாக வெளித்தெரியாமையே 80 ஆண்டுகளாக நாம் இந்த வைரசின் இருப்பைக் கண்டறிய முடியாமல் போனமைக்கான காரணம்.

எச்.ஐ.வி என்ற ஆர்.என்.ஏ வைரஸ் எங்கள் உடலைப் பாதிக்கும் விதம் நூதனமானது. எங்கள் உடலுக்கு சகல நோய்க்கிருமிகளிடமிருந்தும் பாதுகாப்பை வழங்கும் வெண்குருதிக் கலங்களில் ஒரு குறிப்பிட்ட ரகத்தை எச்.ஐ.வி தொற்றி அழித்து விடுகிறது. இதனால், இது வரையில் எங்கள் உடலினுள் நுழையக் காத்திருந்து முடியாமல் போன ஏனைய நுண்ணுயிர்கள் (பற்றீரியாக்கள், பூஞ்சணங்கள், அமீபா வகை உயிர்கள்) இலகுவாக நுழைந்து நோயை ஏற்படுத்துகின்றன. இதனால், எச்.ஐ.வி என்ற வைரஸ் நேரடியாக எம்மைக் கொல்லா விட்டாலும், இந்த நோயெதிர்ப்பைக் குறைத்து ஏனைய நோய்கிருமிகள் மூலம் தீவிர நோய்களையும், மரணத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், எச்.ஐ.வி வைரஸ் தனியாகவும் சில நரம்பியல் நோய்த்தாக்கங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.

கொரனா வைரஸ், அம்மை நோய் வைரஸ் என்பன போன்றல்லாமல் எச்.ஐ.வி வைரஸ் காற்றினாலோ, நீர்/உணவினாலோ பரவுவதில்லை என்பது ஆறுதலான தகவல். ஒருவரின் உடல் திரவங்கள் (இரத்தம், விந்துப் பாய்மம், பெண்ணுறுப்பின் சுரப்புகள்) மூலம் மட்டுமே எச்.ஐ.வி கடத்தப் படுகிறது – இதனால் தான் இதன் பரவலைக் கட்டுப் படுத்துவது நவீன கொரனா வைரசின் பரவலைக் கட்டுப் படுத்துவதை விடவும் இலகுவாக இருக்கிறது. பாதுகாப்பான பாலுறவு, இரத்த மாற்று சிகிச்சைக்கு முன்னர் இரத்தத்தைப் பரிசோதித்தல் ஆகியவை மூலம் மனிதர்களிடையே எச்.ஐ.வி பரவுவதைக் கட்டுப் படுத்துவதே ஆரம்ப கட்ட நடைமுறையாக இருந்தது.

பல வைரசுகளுக்கெதிராக தடுப்பூசிகள் தான் மனிதர்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக இருக்கின்றன – இதை நாம் நவீன கொரனா வைரஸ் விடயத்தில் கண் முன் விரிந்த காட்சியாகக் காண்கிறோம். ஆனால், எச்.ஐ.வி – இதன் அடிக்கடி விகாரமடையும் இயலுமை காரணமாக – தடுப்பூசிகளால் கட்டுப் படுத்த முடியாத ஒரு வைரசாக விளங்குகிறது. ஒரு நோயாளியில் தொற்றும் எச்.ஐ.வி வைரஸ், சில ஆண்டுகளில் பாரிய மாற்றங்களைக் கொண்ட புதிய விகாரியாக அந்த நோயாளியின் உடலிலேயே மாறி விடும் அளவுக்கு எச்.ஐ.வி வைரஸ் மாறும் தன்மை கொண்டது. இதனால், 40 ஆண்டுகள் கடந்தும் ஒரு வெற்றிகரமான எச்.ஐ.வி தடுப்பூசி இது வரையில் சந்தைக்கு வரவில்லை.

யோ.அன்ரனி யூட்
“தடுப்பூசி இல்லாத நிலையிலும் எச்.ஐ.வி தொற்றின் அளவும், மரணங்களும் வெற்றிகரமாகக் குறைக்கப் பட்டிருக்கின்றன. தகவல் மூலம், நன்றியுடன்: UNAIDS/WHO.”

ஆனால், உலகளாவிய ரீதியில் எச்.ஐ.வி தொற்று ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. 2010 இற்கும் 2019 இற்கும் இடையில் 25% வீழ்ச்சி எச்.ஐ.வி தொற்றில் ஏற்பட்டிருக்கிறது. இன்று உலகளாவிய எச்.ஐ.வி தொற்றுடையோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 38 மில்லியன்களாக கணிப்பிடப் பட்டிருகிறது. இந்த முன்னேற்றத்திற்குக் காரணங்கள்: 1. ஏற்கனவே குறிப்பிட்டது போல, இலகுவாக அமல் செய்யப் பட்ட தடுப்பு முறைகள் 2. எச்.ஐ.வி தொற்றுடையோரில் பயன்படுத்தப் படும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.

இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் – தடுப்பூசிகள் இல்லாத வைரஸ் நோய்களைப் பொறுத்த வரையில் – எமக்கான பாதுகாப்பு அரண்கள். எச்.ஐ.வி வைரசுக்கெதிராக டசின் கணக்கான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. ஆரம்ப காலத்தில் அதீத பக்க விளைவுகளை உருவாக்கிய எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் , தற்போது மிகக் குறைந்த பக்க விளைவுகளோடு ஒரு மாத்திரை ஒரு நாளைக்கு என்ற இலகுவான வடிவத்தில் கிடைக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று  உறுதி செய்யப் பட்டால், அது அவரது மரண உறுதிப் பத்திரமாக இருந்தது. இன்று, எச்.ஐ.வி தொற்றுடைய நோயாளிகள், ஏனையோர் போலவே  சாதாரணமான ஆயுட்காலத்துடன் பெரும்பாலும் சகஜமான வாழ்வை வாழ்கிறார்கள் – இதற்கு எச்.ஐ.வி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளே காரணம்.

எச்.ஐ.வி வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் நிகழ்த்திய இன்னுமொரு சாதனை: தாயிலிருந்து சிசுவுக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்றும் வாய்ப்பை பூச்சியமாக்கியது. இந்த தாய்- சிசு இடையேயான எச்.ஐ.வி தொற்று ஏழை ஆபிரிக்க நாடுகளில் ஒரு சமூக அவலத்தையே நிகழ்த்தியிருக்கிறது. இன்றும் கூட உலகின் 1.8 மில்லியன் குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்கிறார்கள், இவர்களுள் பெரும்பாலானோர் சஹாராப் பாலவனத்தை அண்டிய ஏழை ஆபிரிக்க நாடுகளில் வாழ்கிறார்கள். எயிட்சினால் தாயும் தந்தையும் இறந்து போக, பெற்றோரின் ஒரே பரிசாக எச்.ஐ.வி தொற்றைத் தாங்கியபடி மில்லியன் கணக்கான குழந்தைகள் துன்பத்தில் உழன்ற காலம் இப்போது மாறி வருகிறது. எச்.ஐ.வி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளால் பெற்றோரின் உயிர் காக்கப் படுவதுடன், வைரஸ் குழந்தைக்குக் கடத்தப்படுவதும் தடுக்கப் பட்டிருக்கிறது.

அடிக்கடி மாறும் எச்.ஐ.வி வைரஸை மருந்துகளால் கட்ட்டுப் படுத்தும் போது சவால்களும் எழுகின்றன. வைரஸ், மருந்தை மேவக் கூடியவகையில் விகாரமைடைவது ஒரு பாரிய சவாலாக இருக்கிறது. இதற்காக, அதிகம் விகாரமடைய முடியாத வைரசின் பாகங்களைக் கண்டறிந்து அவை நோக்கி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் வெற்றியடந்திருக்கின்றன. மூன்று அல்லது நான்கு வகையான வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை ஒன்றாகப் பயன்படுத்தி வைரஸ் மீளமுடியாத வகையில் அழித்து விடும் சிகிச்சை முறையும் இன்று வெற்றிகரமாகப் பயன்படுத்தப்ப் படுகிறது.

எச்.ஐ.வி பெருந்தொற்று எங்களுக்குச் சொல்லும் செய்திகள் எவை?  வைரஸ் நோய்கள் பெருந்தொற்றாகப் பரவும் போது தடுப்பூசிகள் இல்லா விட்டாலும் கூட மனிதனுக்கு வெற்றி சாத்தியம் என்பது முக்கிய செய்தி. தடுப்பு முறைகளாலும், வைரஸ் எதிர்பு மருந்துகளில் கவனம் செலுத்துவதாலும் மனிதர்கள் எதிர்த்துப் போராடி வென்று வரும் ஒரு நோயாக எயிட்ஸ் இருக்கிறது.

எச்.ஐ.வி வைரஸ் போலவே, ஏனைய பல வைரசுகளும் காட்டு விலங்குகளிலும், பறவைகளிலும் இருந்து மனிதன் மீது தாவி அடுத்த பெருந்தொற்றை உருவாக்கக் காத்திருக்கின்றன என்பது இப்போது எல்லோருமே புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு உண்மை. இந்தத் தொடர்ந்த போராட்டத்தில் மனிதனுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்புகள், சவால்கள் எவை என அடுத்ததும், இறுதியுமான பகுதியில் காணலாம்.

யோ.அன்ரனி யூட்-அமெரிக்கா

யோ.அன்ரனி யூட்

(Visited 96 times, 1 visits today)