பிள்ளை சுட்டான்-கவிதை-றியாஸ் குரானா

பிள்ளை சுட்டான்

றியாஸ் குரானா

 

எதிர்பார்த்த கணமொன்றில்,
அவளின் கருப்பையில் தீ பற்றிக்கொண்டது
அசைந்து கொண்டிருக்கும் தீச்சுவாலை
கால்களை உதைத்துப் புன்னகைத்தது
கைகளை அசைத்து அழுதது
சடசடத்து எரியும் நெருப்பின் ஓலத்தில்
குழந்தையின் மழலைச் சத்தம் பீறிட்டது
அந்தக் கெக்கலிப்பும், அழுகையும்
என்றுமில்லாதவாறு உலக மனசாட்சியை
துடிக்கச் செய்தன
பிள்ளை சுட்டவன், மதுக்கோப்பையை
கையிலேந்தியபடி ரசிக்கத்தொடங்கினான்
தீச்சுவாலையின் நளின அசைவுகளுக்கேற்ப
நடனமிடத்தொடங்கினான்
எரியும் குழந்தையின் அலறல்
இனிய இசையாய் அவனது காதுகளுக்குள்
ஊடுருவிப் பாய்ந்து இதயத்தைக் குளிர்வித்தது
கோப்பையில் மீண்டும் மதுவை நிரப்பிக்கொண்டான்
இதுபோன்ற இன்னுமொரு இனிய பொழுதுக்காக
தனது பணியாளர்களிடம்
உரத்த குரலில் கட்டளைகளைப் பிறப்பித்தான்
பன்றி இறைச்சியை உண்ணக்கொடுத்து
தனது சாவுக்கு காரணமானவனை
புத்தர் மன்னித்ததைப்போல,
தனது அடிவயிற்றைத் தடவியபடி
கருப்பையில் மூட்டப்பட்ட தீயை
குழந்தையென முடிவற்று பிரசவித்தபடி
அவனை மன்னிக்கத் தொடங்கினாள்
வாழ்நாள் வரை மன்னிக்க உறுதி பூண்டாள்
பரம்பரை பரம்பரையாக மன்னிக்கும் படி
கட்டளையிட்டாள்
கட்டளையிட்ட மறுகணத்தில்,
ஒரு சமூகம் கற்பனையில் ஆழ்ந்தது
எண்ணற்ற மதுக்கோப்பைகள் நிரம்பத் தொடங்கின
கூட்டம் கூட்டமாக ரசிக்கத் தொடங்கினர்
எண்ணற்ற தீச்சுவாலைகள் பெருகத்தொடங்கின
அதன் நளின அசைவுகளுக்கேற்ப,
புதிது புதிதாக நடனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
எண்ணற்ற குழந்தைகளின் அலறல்கள்
பேரானந்தத்தின் புதிய இசையாகக் கிளர்ந்தெழுந்தன
இன்பத்தைக் கண்டுபிடித்த திளைப்பில்
பெரும் கடலின் நடுவே
அலைகளில் அசைந்தாடும் தோணிபோல
ஒரு நாடே மகிழ்விலிருந்தது
இத்தனை ஆர்ப்பாடமான மகிழ்ச்சியின் நடுவே
நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்
என யாராவது கேட்கவிரும்பியிருந்தால்
அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்
எரிக்கப்படுவதற்கான எனது முறை வரும்வரை
காத்திருப்பதற்காகவே வாழ்கிறேன்.

றியாஸ் குரானா-இலங்கை

றியாஸ் குரானா

(Visited 192 times, 1 visits today)
 

4 thoughts on “பிள்ளை சுட்டான்-கவிதை-றியாஸ் குரானா”

Comments are closed.